ஒரு ஆண்டு முடியும் போதும், நடந்த முக்கியமான தகவல் நிகழ்வுகளையும், கிடைத்த அனுபவங்களைப் பட்டியலிட்டு புத்தாண்டில் எதைச் செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்பதைத் திட்டமிட்டு அதற்காக ஆயத்தமாக வேண்டும்.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டில் முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான முதலீட்டுப் பாடம் என்ன இதை எப்படி 2022ல் பயன்படுத்தப் போகிறோம்...
முதலீடு
2020 கொரோனா காலத்தில் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் சரிந்து பெரு முதலீட்டாளர்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரையில் அனைவரையும் பதம் பார்த்தது. ஆனால் 2021ல் அப்படியில்லை ஆரம்பம் முதலே தாறுமாறான வளர்ச்சியில் இருந்த காரணத்தால் பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டது, ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் வருடத்தின் இறுதிக்காலக்கட்டத்தல் பங்குச்சந்தை கரெக்ஷனில் நுழைந்தது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் பல முதலீட்டாளர்கள் தங்களது எஸ்பிஐ திட்டத்தில் இருந்து வெளியேறினர். இன்னும் சிலர் பங்குகளில் முதலீடு செய்வதை நிறுத்தினர். இந்த தவறுகளைச் செய்த முதலீடுகள் சந்தை மீண்டு வரும்போது கிடைக்கும் லாபத்தை முழுமையாகப் பெற முடியாது. இதேபோல் எஸ்ஐபி போன்ற நீண்ட கால முதலீடுகளை எந்த காரணத்திற்காகவும் தொந்தரவு செய்யக் கூடாது. இதனால் சந்தை ஏறினாலும், இறங்கினாலும் தொடர்ந்து பாதுகாப்பான காரணிகளைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். இது நீண்ட கால அடிப்படையில் பயனளிக்கும்.
பணவீக்கம்
2021ல் கடன் முதலீடுகள் மூலம் கிடைக்கும் லாப அளவீடுகள் மிகவும் குறைவாகவே இருந்தது, ஆனால் பங்குச்சந்தை முதலீடுகள் வாயிலாகக் கிடைத்த லாபம் சற்று அதிகமாகவே இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் பணவீக்கம். இதனால் எப்போதும் உங்கள் இன்வெஸ்ட்மென்ட் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து கலவையாக வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் சந்தையில் ஏற்படும் பாதிப்புகளைக் களைந்து நிலையான 10-16 சதவீத லாபத்தைப் பெற முடியும்.
இன்வெஸ்ட்மென்ட் போர்ட்ஃபோலியோ மறு ஆய்வு
உங்கள் முதலீடுகளைப் பல பிரிவுகளில் முதலீடு செய்வது சரியான ஒன்று, ஆனால் அதை தொடர்ந்து மறு ஆய்வு செய்ய வேண்டும். உதாரணமாக 2021ல் உங்கள் மொத்த முதலீட்டில் 80 சதவீதம் பங்குச்சந்தையில் இருந்திருந்தால் அதிகப்படியான லாபம் கிடைத்திருக்கும், ஆனால் இதுவரை வருடத்தின் இறுதி வரையில் இதே நிலையை நீங்கள் பின்பற்றி இருந்தால் கட்டாயம் நஷ்டம் சந்தித்து இருக்க நேரிடும். எனவே ஒவ்வொரு காலாண்டு அல்லது சந்தையில் பெரும் மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளையில் உங்களின் இன்வெஸ்ட்மென்ட் போர்ட்ஃபோலியோ-வை மறு ஆய்வு செய்வது சிறந்த முடிவாக இருக்கும்.
கடந்த கால தரவுகள்
ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும் போது பெரும்பாலானோர் செய்யும் ஒரு முக்கியமான செயல், கடந்த காலத்தில் அந்த முதலீட்டு திட்டம் எப்படிச் செயல்பட்டு உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு முதலீடு செய்வது. ஆனால் இனிவரும் காலகட்டத்தில் இது பொருந்தாது. காரணம் சந்தையில் கடந்த சில மாதங்களாக அதிகப்படியான மாற்றங்கள் சந்தித்து உள்ளது, இதேபோல் இனி வரும் காலகட்டத்திலும் அதிகப்படியான மாற்றங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், இதனால் கடந்த கால தரவுகளை விடவும் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் மாற்றங்களை வைத்து முதலீடு செய்வது குறித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.