2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் கடந்த ஆண்டை விட 42 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால் இரண்டாம் பாதியில் நுகர்வு கடந்த ஆண்டை விடக் குறைவாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முக்கியக் காரணமாக அதிகரித்து வரும் பணவீக்கம், செலவழிப்பு வருவாய் குறைப்பு, மத்திய அரசு அறிவித்துள்ள வரி உயர்வு ஆகியவற்றின் மூலம் தங்கத்திற்கான டிமாண்ட் இந்தியாவில் குறையும் என உலகத் தங்க கவுன்சில் (WGC) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியா
உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் நாடாக இருக்கும் இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்தால், கட்டாயம் இதன் விலையில் பெரும் மாற்றம் ஏற்படும். டிமாண்ட் குறைவாக இருக்கும் வேளையில் ஏற்கனவே சந்தைக்கு வந்த பழைய தங்க நகைகள் மறுசுழற்சி அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது, இதனால் விலை கட்டுப்படுத்தப்படும்.
மத்திய அரசு
இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறைந்து, இறக்குமதி செய்யும் அளவு குறையும் பட்சத்தில், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், நலிவடைந்த ரூபாயை ஆதரிக்கவும் உதவும். இது நாட்டின் நிதிநிலையை மேம்படுத்த பெரிய அளவில் உதவும். வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு மத்திய அரசுக்கு பெரும் சவால் ஆக உள்ளது.
கிராமப்புற மக்கள்
பணவீக்கம் உயர்வால் நடுத்தர மக்களைக் காட்டிலும் குறிப்பாகக் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் சேமிப்புக்காக அதிகம் நம்பும் தங்கத்தில் முதலீடு செய்வது குறையவும் வாய்ப்புகள் உருவாக்கும். இது கட்டாயம் நுகர்வோர் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என WGC இன் இந்திய நடவடிக்கைகளின் பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரி சோமசுந்தரம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
வருடாந்திர பணவீக்கம்
ஜூன் மாதத்தில் இந்தியாவின் வருடாந்திர பணவீக்க விகிதம் 7% ஐ விட அதிகமாகவும், தொடர்ந்து ஆறாவது மாதமாக மத்திய வங்கியின் பணவீக்க அளவீடுகளைத் தாண்டியதாகவும் இருக்கிறது. அடுத்த மாதம் மத்திய வங்கி அதிக வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான வாய்ப்புகளை உயர்த்தியது.
ரூபாய் மதிப்புச் சரிவு
குறுகிய காலத்தில், ரூபாய் மதிப்புச் சரிவு மற்றும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு போன்ற காரணங்களால் உள்ளூர் தங்கத்தின் விலை உயர்வின் வாயிலாகத் தேவையும் பாதிக்கும் எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
அக்ஷய திரிதியா மற்றும் திருமணங்கள்
இந்து மற்றும் ஜெயின் பிரிவு மக்கள் புனித திருநாளாகக் கருதக்கூடிய அக்ஷய திரிதியா தினத்தில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுவதாலும், அதிகப்படியான திருமணங்கள் நடைபெற்ற காரணத்தாலும் தங்க நகை விற்பனை பெரிய அளவில் அதிகரித்தது. ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் தங்கத்திற்கான தேவை 43% உயர்ந்து 170.7 டன்னாக உயர்ந்துள்ளது என்று WGC தெரிவித்துள்ளது.