இந்திய ஐடி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தொடர்ந்து விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதேவேளையில் வொர்க் ப்ரம் ஹோம், ஹப்ரிட் மாடல் போன்றவை நடைமுறைக்கு வரும் காரணத்தால் இந்தியாவில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக ஐடி நிறுவனங்கள் பெரு நகரங்களுக்கு இணையாக 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்குத் தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடி - பிபிஎம் துறை
ஐடி - பிபிஎம் துறை 2026 ஆம் ஆண்டுக்குள் சுமார் 100 மில்லியன் சதுர அடி அளவிலான அலுவலக இடத்தைக் குத்தகைக்கு எடுக்கும் என டெக்-டவுன்ஸ் ஆஃப் தி ஃபியூச்சர் என்ற தலைப்பில் உலகளாவிய சொத்து ஆலோசனை நிறுவனமான சாவில்ஸ் இந்தியா-வின் ஆய்வுகள் கூறுகிறது.
வொர்க் பர்ம் எனிவேர்
இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் வொர்க் பர்ம் எனிவேர் மற்றும் ஹைப்ரிட் மாடல் ஊழியர்களுக்கும் சரி, நிறுவனத்திற்கும் சரி அதிகப்படியான பலன்களை அளிக்கும் காரணத்தால் இதை நிரந்தரமாக்க முடிவு செய்துள்ளது.
2ஆம், 3ஆம் தர நகரங்கள்
இந்தக் கட்டமைப்பில் ஐடி துறை போன்ற அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கவும், அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் அமர்த்தவும் பெரும் நகரங்களைப் போலவே 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு அலுவலகத்தை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடி மற்றும் டெக் துறை
அகமதாபாத், சூரத், வதோதரா மற்றும் நாக்பூர் போன்ற 2ஆம் தர நகரங்கள் அதிகளவிலான ஐடி மற்றும் டெக் துறை சார்ந்த முதலீடுகளைப் பெற துவங்கியுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடக
அந்த வகையில் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவை சிறப்பான அரசு கொள்கை மற்றும் கட்டமைப்புகளை வைத்திருக்கும் காரணத்தால் ஐடி-பிபிஎம் துறை சார்ந்த நிறுவனங்களை அதிகளவில் ஈர்த்து வருகிறது.
கோயம்புத்தூர், திருச்சி
கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் திறமையான ஊழியர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தாலும் உள்கட்டமைப்பு, மனித மூலதனம், செலவுகள் மற்றும் தொழில் ஆகிய காரணிகளில் கணக்கிடும் போது போபால், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகியவை மட்டுமே சிறப்பான மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
சிறு நகரங்கள்
ஐடி துறையில் ஏற்பட்டு உள்ள இந்த மாற்றத்தின் மூலம் தமிழ்நாட்டில் சிறு நகரங்கள் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும். இதேபோல் வேலைவாய்ப்பு, வர்த்தகம், பொருளாதாரம், மக்கள் வாழ்க்கைத் தரம் ஆகிய அனைத்தும் ஐடி துறை சார்ந்து வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.
டைடல் பார்க்
இதற்கு ஏற்றார் போல் தமிழ்நாடு அரசு ஊட்டி, சேலம் போன்ற பல முக்கிய நகரங்களில் சிறிய அளவிலான டைடல் பார்க்களைக் கட்டுவதற்கான டென்டர்களை வெளியிட்டு உள்ளது. ஐடி துறையின் மாற்றமும், தமிழக அரசின் டைடல் பார்க் திட்டமும் அதிகப்படியான நிறுவனங்களை ஈர்க்க வழி வகுக்கும்.