கொல்கத்தா, மேற்கு வங்கம்: சில தினங்களுக்கு முன்பு தான், இந்தியாவில் தங்க நகை வியாபாரிகள் அனைவரும், தங்கள் நகைகளை ஹால் மார்க் செய்ய வேண்டும் எனச் சொன்னது மத்திய அரசு.
அப்படி செய்து கொள்ளவில்லை என்றால், நகைக் கடைக்காரர்கள், தங்கள் நகைகளை விற்க முடியாது எனவும் சொல்லி இருந்தது மத்திய அரசு.
இந்த ஹால்மார்க் சட்டம், வரும் ஜனவரி 15, 2021 முதல் இந்தியா முழுக்க அமலுக்கு வர இருக்கிறது.
அழுத்தம்
அதற்குள் தங்க நகை வியாபாரிகள், தங்களிடம் இருக்கும் ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளை விற்றுத் தள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். சரி நகைக் கடைகாரர்களுக்கும் முன் இருக்கும் இந்த விற்பனை அழுத்தத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்... பி ஐ எஸ் ஹால் மார்க் பற்றிப் பார்த்துவிடுவோம்.
ஹால்மார்க்
இந்தியாவில் ஒவ்வொரு பொருளுக்கும் தர நிர்ணயம் செய்வது பி ஐ எஸ் (BIS - Bureau of Indian Standard) தான். இந்த அமைப்பு இந்தியாவில் விற்கும் தங்கம் & வெள்ளி நகைகளின் தரத்தைப் பொறுத்து 14 கேரட், 18 கேரட், 22 கேரட் என நகைகளுக்கு தரச் சான்று வழங்குவார்கள். இது தான் ஹால் மார்க்கிங்.
எத்தனை கடைகள்
இந்தியாவில் சுமாராக 3 லட்சம் நகைக் கடைகள் முறையாக அரசாங்கத்திடம் பதிவு செய்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்களாம். அதில் சுமாராக 30,000 நகைக் கடைகள் மட்டுமே ஹால்மார்க் நகைகளை விற்க உரிமம் பெற்று இருக்கிறார்கள். வரும் ஜனவரி 15, 2021 முதல் ஹால் மார்க் இல்லாத நகைகளை யாரும் விற்க முடியாது.
எவ்வளவு டன்
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் சுமாராக 1000 டன் தங்கத்தை, நகைக் கடைகள் விற்பனை செய்து இருக்கிறார்களாம். அதில் 450 டன் நகைகள் தான் ஹால் மார்க் செய்யப்பட்ட நகைகள் என இந்திய ஹால்மார்க்கிங் மையத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷத் அஜ்மேரா சொல்லி இருக்கிறார்.
பாக்கி கடைகள்
ஹால்மார்க் நகைகளை விற்கும் 30,000 கடைகள் போக, மீதமுள்ள 2.7 லட்சம் கடைகளில் எவ்வளவு தங்கம் ஹால் மார்க் செய்யப்படாமல் இருக்கும் என கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எனவே இவர்கள் அனைவரும் கிட்ட தட்ட அடுத்த 12 மாதத்துக்குள் தங்களிடம் இருக்கும் ஹால் மார்க் செய்யாத நகைகளை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
என்ன ஆகும்
ஹால் மார்க் செய்யப் படாத நகைகளை, ஜனவரி 15, 2021-க்குள் விற்க முடியவில்லை என்றால், அந்த நகைகளை மீண்டும் உருக்கி வேறு ஒரு நகை செய்து ஹால் மார்க் வாங்க வேண்டும். இப்படி செய்தால், நகைக் கடைக்காரர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். குறிப்பாக செய் கூலி, சேதாரம் அதிகரிக்கும்.
முரட்டு தள்ளுபடி
எனவே ஹால் மார்க் இல்லாத நகைகள் என்றால், கடைக் காரர்களே கொஞ்சம் விலை குறைத்து விற்கத் தொடங்குவார்கள். அந்த ஹால் மார்க் இல்லாத நகைகளுக்கு, செய் கூலி, சேதாரங்கள் கூட பெரிய அளவில் குறையலாம் என்கிறார்கள். அவ்வளவு ஏன் 0% செய்கூலிக்கு கூட விற்கப்படலாம் என எகமானிக் டைம்ஸ் பத்திரிகையில் சொல்லி இருக்கிறார்கள் நகைக் கடைக்காரர்கள்.
வரம் கேளுங்கள்
எனவே மக்களே, தங்க நகைகளை வாங்க தயாரா இருங்க. தங்கச்சி கல்யாணம், மனைவிக்கு நெக்ளஸ், அம்மாவுக்கு தோடு வாங்குபவர்கள் எல்லாம் இந்த தருணத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட தேவதை ஒரு முறை தான் வருவாள். வரும் போதே வரத்தை கேட்டுவிடுங்கள்.