இந்தியாவில் அனைத்து தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுச் சுமார் 50 நாட்கள் முழுமையாக முடிந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் இதற்குப் போதுமான விழிப்புணர்வு பெற்று, தரத்தில் எவ்விதமான ஐயமும் இல்லாமல் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஹால்மார்க் முத்திரை கட்டுப்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று GJC அமைப்பு அதாவது அனைத்திந்திய ஜெம் மற்றும் ஜுவெல்லரி அமைப்பு ஆகஸ்ட் 23ஆம் தேதி ஸ்ட்ரைக் அறிவித்துள்ளது.
தங்க நகைக்கடைகள் போராட்டம்
சென்னையில் உள்ள 7,000 நகை கடைகள் மற்றும் ஹால்மார்க் தரத்திற்குப் பதிவு செய்யப்பட்ட 35 ஆயிரம் நகைக்கடைகள் ஆகஸ்ட் 23ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 11.30 மணி வரை மணி நேரம் கடையடைப்புச் செய்வதாக அறிவித்துள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை
இந்தப் போராட்டத்தை மத்திய அரசு ஏற்று உரிய நடவடிக்கையை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தில் நாடு முழுவதும் இருக்கும் நகைக்கடைகள் உடன் இணைந்து போராடுவோம் என GJC அமைப்பின் தமிழகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜூன் 16 முதல் ஹால்மார்க் மதிப்பீடு
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கியமான திட்டத்தை ஜூன் 16ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்டது.
ஹால்மார்க் அடையாள எண்
இதில் இந்தியாவில் இருக்கும் அனைத்துத் தங்க நகைக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளில் 6 இலக்கம் கொண்ட தனி 'ஹால்மார்க்' அடையாள எண்ணை (HUID) பதிக்க வேண்டும் என்று இந்திய தரநிர்ணய ஆணையம் (பி.ஐ.எஸ்.) அறிவித்திருக்கிறது.
மத்திய அரசு
இந்த ஹால்மார்க் சட்டம் 2021ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் தங்க நகைகள் மற்றும் கலைப் பொருட்களுக்கு, ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்படும் என்று அரசு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாகக் காலக்கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு ஜூன் 16ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
தங்க நகை கடைகள்
இதன் மூலம் ஹால்மார்க் அச்சு இல்லாமல் இனி எந்தொரு கடைகளும் தங்க நகைகளை விற்பனை செய்ய முடியாது. இதனால் பல கடைகளுக்கு இது பெரும் தலைவலியாக மாறியது. குறிப்பாகத் தரத்தைக் குறைத்து மக்களை ஏமாற்றும் கடைகளுக்கு இது பெரும் சுமையாக மாற்றியது.
ஹால் மார்க் முத்திரை
இப்புதிய சட்டத்தின் மூலம் 14, 18 மற்றும் 22 கேரட் தங்க நகைகளை விற்பனை செய்யும் அனைத்து நகைகளும் பிஐஎஸ் ஹால் மார்க் முத்திரை இல்லாமல் விற்பனை செய்ய முடியாது.
நகை கடைகளுக்கு அபராதம்
இந்தக் கட்டுப்பாட்டை மீறும் விற்பனையாளருக்கு விற்பனை செய்யப்படும் நகையின் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் அல்லது ஒரு வருடம் சிறைத் தண்டனை விதிக்கவும் இச்சட்டத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
256 மாவட்டங்கள்
மத்திய அரசு இத்திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்கம் செய்தால் பிரச்சனை வரும் என உணர்ந்து ஜூன் 16ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்ட ஹால்மார்க் திட்டத்திற்கு முதற்கட்டமாக 256 மாவட்டங்களைத் தேர்வு செய்தது. இந்நிலையில் தற்போது நகைக்கடை அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளது.
பிஐஎஸ் தலைவர்
இந்தியாவில் சில நகைக்கடை அமைப்புகள் கடையடைப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளது. எதற்காக இந்தப் போராட்டம். அரசு அனைவரின் கோரிக்கைகளையும் கேட்க தயாராக உள்ளது. இந்தப் போராட்டம் தேவையில்லாத ஒன்று எனப் பிஐஎஸ் அமைப்பின் தலைவர் பிரமோத் குமார் திவாரி தெரிவித்துள்ளார்.