வரும் ஜனவரி 2020 முதல் இந்தியாவில் ஹால்மார்க் இல்லாத நகைகளை விற்கக் கூடாது என புதிய விதிகளைக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு.
வரவேற்கத் தக்க விதிகள் தான். தற்போது இந்தியாவில் சுமாராக 40 - 45 சதவிகித நகைகளைத் தான் ஹால்மார்க் செய்கிறார்கள். மீத நகைகள் முழுமையாக எந்த ஒரு தர நிர்ணயமும் இல்லாமலேயே விற்பனை செய்யப்படுகிறது.
சரி இப்போது, இந்த ஹால்மார்க் நகைகள் சட்டத்தில் என்ன பிரச்னை. இந்த பிரச்னைக்கு மத்திய அரசு சொல்லும் தீர்வு தான் என்ன..? வாருங்கள் பார்ப்போம்.
வசதி இல்லை
இந்தியாவின் ஆறு மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களில், ஒரு ஹால் மார்க்கிங் சென்டர் கூட இல்லை. அருணாச்சலப் பிரதேசம், மணிபூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் தான் அந்த ஆறு மாநிலங்கள். லடாக், லட்சத் தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் அண்ட் டையூ ஆகியவைகள் தான் அந்த ஐந்து யூனியன் பிரதேசங்கள்.
தர நிர்ணயம்
ஹால்மார்க்கிங் என்பது, இந்தியாவில் விற்கப்படும் தங்கத்துக்கான தர நிர்ணயம். இந்த தர நிர்ணயத்தை பி ஐ எஸ் அமைப்பு தான் வழங்குகிறது. 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் என தங்கத்தை மூன்று ரகங்களாகப் பிரிக்கிறார்கள். இந்த தர நிர்ணயம் தற்போது விருப்பப்பட்டவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வரும் ஜனவரி 2020 முதல் இது கட்டாயம் ஆக்கப்பட்டு இருக்கிறது.
தனியார்
இப்படி பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தங்கத்தை ஹால்மார்க் செய்வதற்கான வசதி கூட இல்லாததைக் குறித்துப் நுகர்வோர் விவகார அமைச்சக அதிகாரிகள் பேசி இருக்கிறர்கள். அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தனியார் தொழில்முனைவோர்கள், தங்களுக்கு தோதான, நல்ல வியாபாரம் ஆகும் இடங்களைத் தேர்வுச் செய்து ஹால்மார்க் வழங்கும் செண்டர்கலைத் தொடங்குவார்கள் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
நாடு முழுக்க
தற்போது இந்தியா முழுக்க மொத்தம் 877 ஹால்மார்க்கிங் சென்டர்கள் மட்டுமே இருக்கின்றன. இவைகள் அனைத்தும் 234 மாவட்டங்களில் மட்டுமே அமைந்து இருக்கின்றன. இந்தியா முழுக்கவே மொத்தம் 26,019 நகைக் கடைக்காரர்கள் மட்டுமே ஹால்மார்க் நகைகளுக்கு பதிவு செய்து இருக்கிறார்களாம்.
அதிக எண்ணிக்கை
இந்த 877 ஹால்மார்க்கிங் சென்டர்களில் பெரும்பாலானவைகள் 6 மாநிலங்களிலேயே அமைந்து இருக்கின்றனவாம். மகாராஷ்டிரம் - 123, மேற்கு வங்கம் - 102, தமிழகம் - 100, குஜராத் - 74, கேரளா - 69, கர்நாடகா - 50 என மொத்தம் 518 ஹால்மார்க்கிங் சென்டர்கள் இந்த 6 மாநிலங்களிலேயே அமைந்து இருக்கின்றன. ஆக தமிழகத்தைப் பொருத்த வரை கட்டாய ஹால்மார்க் விதிகள் அமலானாலும் பிரச்னை இல்லை.
அலைய வேண்டும்
குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்துக்கு ஒரு ஹால்மார்க்கிங் சென்டராவது இருந்தால் தானே, அனைத்து மாவட்டத்தில் இருக்கும் நகைக் கடைக்காரர்கள் பரவலாக வந்து தங்கள் நகைகளை ஹால்மார்க் செய்து கொள்ள முடியும். இப்போது நகைகளில் ஹால்மார்க்கிங் செலவுகளையும், நகைக் கடைக்காரர்கள் விற்கும் தங்கள் நகைகளின் மீது கூடுதல் விலை வைத்து தானே விற்க வேண்டி இருக்கும்.
பெரிய இறக்குமதி
உலக அளவில் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சுமாராக 700 - 800 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இந்த 2019-ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் தங்க இறக்குமதி 496.11 டன்னாக குறைந்து இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது உலக தங்க கவுன்சில். கடந்த 2018-ம் ஆண்டில் சுமாராக 760 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.
ஹால்மார்க் சென்டர்கள் வரட்டும்
இப்படி தங்கத்தை முறையாக ஹால்மார்க் செய்யக் கூட போதிய வசதி இல்லாமல், மத்திய அரசு ஏன் அவசர கதியில் இந்த ஹால் மார்க்கிங் விதியைக் கொண்டு வர வேண்டும்..? ஏற்கனவே வியாபாரம் மந்தமாக இருக்கும் நேரத்தில் இது போன்ற புதிய விதிகளைக் கொண்டு வந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்காதா..? மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சொன்னது போல, முதலில் அரசு எல்லா மாவட்டங்களிலும் ஹால்மார்க்கிங் செய்யும் வசதியைக் கொண்டு வரட்டும். அதன் பிறகு கட்டாய ஹால்மார்க் சேவையைக் கொண்டு வரலாம். செவி சாய்க்குமா மத்திய அரசு..?