உலக மக்கள் தொகை இன்று 800 கோடியை எட்டியுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகச் சீனா இருக்கும் நிலையில் தாமதமான திருமணம், குழந்தை பெற்றுக்கொள்ளாத கலாச்சாரம், அரசு அனுமதித்தும் ஒரு குழந்தை போதும் எனச் சீன மக்கள் விரும்பும் காரணத்தால் அடுத்தாண்டு மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்ட நிலையில் என்னவெல்லாம் பிரச்சனை உருவாகும் எனத் தெரியுமா..?
உலக மக்கள்தொகை
ஐநா-வின் தற்போதைய கணிப்பில் உலக மக்கள்தொகை வளர்ச்சியின் பெரும்பகுதி இனி வரும் காலகட்டத்தில் ஆப்பிரிக்காவின் வளரும் நாடுகளில் இருந்து வரும் எனக் கணித்துள்ளது. இதில் முக்கியமாக நைஜீரியா இடம்பெற்றுள்ளது.
நைஜீரியா
நைஜீரியா-வின் மக்கள் தொகைக்கும் அந்நாட்டின் வளத்திற்கும் போதுமானதாக இல்லை. நைஜீரியா-வின் முக்கிய நகரான லாகோஸ்-ல் இருக்கும் 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் முதல் பேருந்துகளில் சீட் பிடிப்பது வரையில் அனைத்திற்கும் போட்டிப்போடும் நிலை உள்ளது.
5 மணிக்கு பள்ளி
இந்தக் கூட்ட நெரிசலை தடுக்க நைஜீரியா நாட்டின் குழந்தைகள் அதிகாலை 5 மணிக்கே பள்ளிக்குப் புறப்படும் நிலை உள்ளது. ஒருநாட்டின் மக்கள் தொகைக்கும், வளத்திற்கும் போதுமான சமன்பாடு இல்லாத பட்சத்தில் இத்தகையை மோசமான நிலை ஏற்படும்.
30 வருடம்
அடுத்த 30 வருடத்தில் நைஜீரியா-வின் மக்கள் தொகை தற்போது இருக்கும் 216 மில்லியனில் இருந்து 375 மில்லியனாக உயரும் என்றும் , ஐநா கணித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் 30 வருடத்தில் இந்தியா, சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக நைஜீரியா இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
முக்கியப் பிரச்சனை
வேகமாக வளர்ந்து வரும் இளைஞர்களுக்குப் போதிய வகுப்பறைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு உலக நாடுகள் போராட வேண்டியிருக்கும் . அனைத்திற்கும் மேலாக உணவுப் பாதுகாப்பின்மை அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக உள்ளது. வளரும் நாடுகளில் பணக்காரர்கள் தொடர்ந்து அதிகப் பணம் சம்பாதித்து வரும் நிலையில் அதிகமான மக்களைப் பின்தங்கச் செய்யும் நிலை அச்சுறுத்துகிறது.
தண்ணீர், உணவு
மக்கள் தொகை எண்ணிக்கையில் வேகமாக வளர்ச்சி ஏற்பட்டால் நீர் ஆதாரங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். இதேபோல் காலநிலை மாற்றம் உலகின் பல பகுதிகளில் பயிர் உற்பத்தியைப் பாதித்து வருவதால் அதிகமான குடும்பங்கள் பசியில் வாட உள்ளது.
முக்கிய நாடுகள்
நைஜீரியா போல ஆப்பிரிக்காவில் காங்கோ, எத்தியோப்பியா மற்றும் தான்சானியா ஆகியவையும் அதிக மக்கள் தொகை எண்ணிக்கையில் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. உலகளவில் பார்த்தால் எகிப்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இந்தியாவை முன்னணி நாடாக உள்ளது.
சீனா, இந்தியா
உலகின் மொத்தம் மக்கள் தொகையில் சீனா, இந்தியா மட்டும் 25 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இப்படிப் பார்த்தால் அதிகப்படியான உணவு மற்றும் தண்ணீர் தேவை உள்ளது என்பது பொருள். இதேபோல் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, சிறப்பான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அளிப்பது பெரும் சவாலாக இனி வரும் காலவத்தில் மாறும்.
ஐநா பரிந்துரை
இதனாலேயே ஐநா உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளையும், மக்கள் தொகை வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதனால் உலக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது பற்றியும் பல்வேறு விஷயங்களை ஐநா பரிந்துரை செய்து வருகிறது.
4 மடங்கு வளர்ச்சி
1950 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 200 கோடியாக இருந்த நிலையில் 2022 நவம்பர் மாதம் உலக மக்கள் தொகை 4 மடங்கு அதிகரித்து 800 கோடி என்ற அளவீட்டைத் தொட்டு உள்ளது.
மக்கள் தொகை வளர்ச்சி
ஐநா ஜூலை மாதம் வெளியான கணிப்பின் படி உலக மக்கள் தொகை 2030ல் 850 கோடியாகவும், 2050ல் 970 கோடியாகவும், 2080ம் ஆண்டில் 1,040 கோடியாகவும் இருக்கும் எனக் கணித்துள்ளது. மக்கள் தொகை உலகின் சில பகுதிகளில் குறைந்தாலும், மற்ற பகுதிகளில் அதிகரித்து வருகிறது.