சென்னை: மசாலா பாண்டுகள் (Bonds/கடன் பத்திரங்கள்) என்பவை ரூபாயின் அடிப்படையில் இந்தியாவிற்கு வெளியில் வழங்கப்படுபவை. இவை நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இவை பன்னாட்டுச் சந்தைகளில் முதலீடுகளைப் பெற வெளியிடப்படுவதுடன் லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகின்றன.
சரி மசாலா பாண்டுகள் என்றால் என்ன?
உலகவங்கியின் உறுப்பினரான பன்னாட்டு நிதி நிறுவனம் (ஐஎஃப்சி) இந்தியாவில் பன்னாட்டு முதலீட்டுச் சந்தைகள் மூலமாக முதலீட்டை அதிகரிக்க, 10 ஆண்டுகள் முதிர்வுக் காலம் உடைய 10 பில்லியன் ரூபாய் (அதாவது 163 மில்லியன் அமெரிக்க டாலர்) பாண்டுகளை வெளியிட்டது. இந்தத் தொகை இந்தியாவில் வளர்ச்சிக்கான கட்டமைப்புகளுக்காகச் செலவிடப்படும்.
செலவானிச் சந்தைகளுக்கு அப்பாற்பட்ட இந்த நீண்ட முடிவுறுகாலம் உடைய பாண்டுகள் இதற்குமுன் ஐஎஃப்சி வெளியிட்ட ஐந்தாண்டு மற்றும் ஏழாண்டு முடிவுறுகாலப் பாண்டுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது.
இந்த வெளியீட்டிலிருந்து கிடைக்கும் தொகை ஆக்ஸிஸ் வங்கி வெளியிடவுள்ள அடிப்படை கட்டமைப்புப் பாண்டுகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
இதற்கான பணப்பரிமாற்றம் அமெரிக்க டாலர்கள் மூலமாக நடைபெறுவதால், ரூபாயை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பாண்டுகளில் முதலீடு செய்வோர் செலாவணி மாற்று அபாயங்களுக்கு நேரடியாக உள்ளாவார்கள்.
இந்திய காலாச்சார மற்றும் உணவு முறைகளைக் குறிக்கும் விதமாக ஐஎஃப்சி இந்தப் பாண்டுகளுக்கு மசாலா பாண்டுகள் எனப் பெயரிட்டுள்ளது.
சீனாவின் பாண்டுகள் டிம் சும் எனவும், ஜப்பானிய பாண்டுகள் சமுராய் எனவும் அந்தந்த நாட்டு உணவு மற்றும் கலாச்சாரத்தை ஒட்டிய பெயர்களாகப் பெற்றுள்ளன.