பணத்தை எங்கு முதலீடு செய்யலாம்? இந்தியாவில் எந்த முதலீட்டுத் திட்டம் சிறந்தது? போன்ற பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்போதும் வெவ்வேறுவிதமான பதில்களே நமக்குக் கிடைக்கும்.
நடுத்தர/குறைந்த முதலீடுகள் செய்பவர்களுக்கு நிலையான முதலீடுகளே சிறந்தது. அதே சமயம் அதிதீவிர முதலீட்டாளர்களுக்குப் பங்குசந்தை தான் சிறந்த முதலீட்டுத் திட்டம்.
பணத்தை ஏதும் செய்யாமல் வைத்திருப்பதற்கு, இதில் ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்வது நல்லது தானே. இந்த முதலீடுகள் உங்களுக்கு அதிக நிதி தேவைப்படும் குழந்தைகளின் கல்வி, திருமணம், பணிஓய்விற்குப் பிறகான செலவுகள் போன்றவற்றிக்கு உதவிகரமாக இருக்கும்.
மேலும் இது உங்கள் பொருளாதாரச் சுதந்திரம் என்னும் இலக்கை அடையவைக்கும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், உங்களுக்காக உங்கள் பணம் வேலை செய்யும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்தியாவில் அதிக லாபம் தரும் 10 சிறந்த முதலீட்டுத் திட்டங்களை இங்குத் தொகுத்துள்ளோம்.
ஸ்டார்ட் அப்
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது சற்று ஆபத்தானது என்றாலும் லாபகரமானதும் கூட. இந்நிறுவனங்கள் சூரியன் உதிப்பதை போல அதிக ஆற்றலுடனும், உயர்ந்த மதிப்புடன் இருக்கும். ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டியவர்கள் எனப் பலரை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். பிளிப்கார்ட் நிறுவனம் துவங்கும் போது பங்குகள் பெற்ற அதன் ஊழியர்கள் தற்போது கோடிசுவரர்களாக இருக்கின்றனர். பிரபலமான முதலீட்டாளர்களான ரத்தன் டாடா மற்றும் ராகேஷ் ஜூகுன்வாலா போன்றோர் ஸ்டார்ட் அப் தான் அதிக லாபம் தரும் முதலீடு என நம்பினர்.
ஸ்டார்ட்அப்பில் யார் முதலீடு செய்யலாம்?
ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு என்பது ஆபத்தானது என்பதால், அதிகப் பணமும், ஆபத்தை எதிர்கொள்ளும் திறனும் இருப்பவர்கள் துணிந்து முதலீடு செய்யலாம்.
பங்குசந்தை
குறைந்த காலத்தில் அதிக வருவாய் ஈட்டவேண்டுமெனில் பங்குசந்தை தான் இந்தியாவில் சிறந்தவழி. நீண்டகாலமாக முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கும் எம்.ஆர்.எப், கேப்லின் பாய்ண்ட் லேப்ஸ், இன்போஸிஸ், டி.சி.எஸ் போன்ற நிறுவனங்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஆனாலும், முதலீடு செய்வதற்கான நல்ல பங்குகளை அடையாளம் காண்பது மிகக் கடினம். எதிர்காலத்தில் நன்கு வளர்ச்சியடையும் பங்குகளை அடையாள காணமுடிந்தால் நீங்கள் தைரியமாகப் பங்குசந்தையில் முதலீடு செய்யலாம்.
பங்குசந்தையில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
பங்குசந்தை பற்றிய அறிவும் திறமையும் அதில் முதலீடு செய்ய மிகவும் அவசியம். நீங்கள் அது பற்றிய அறிவும், திறமையும், ஆபத்தை எதிர்கொள்ளும் ஆற்றலும் இருந்தாலும் தாராளமாக உங்கள் பணத்தைப் பங்குசந்தையில் முதலீடு செய்யலாம்.
நடுத்தர மற்றும் சிறிய அளவிலான மியூட்சுவல் பண்ட்
கடந்த வருடத்தில் மட்டும் இவ்வகை முதலீடுகள் 40% லாபத்தை முதலீட்டாளர்களுக்குப் பெற்றுகொடுத்துள்ளது. தவணை முறையிலோ (Systematic Investment Plan ) அல்லது மொத்தமாகவோ இதில் பணத்தை முதலீடு செய்யலாம். அதிலும் நேரடி மியூட்சுவல் பண்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. ஏனெனில், இத்திட்டம் சாதாரண மியூட்சுவல் பண்ட் திட்டத்தை விட அதிக லாபம் தரக்கூடியது.
யார் மியூட்சிவல் பண்டில் முதலீடு செய்யலாம்?
ஆபத்தையும் லாபத்தையும் சரிசமமாக அனுபவிக்க முடியுமானால், இது உங்களுக்கான திட்டம். மியூட்சுவல் பண்ட்-ஐ பொருத்தமட்டில் நீண்டகாலத்தில் மிக அதிக லாபம் பார்க்கலாம்.
பங்குகளுடன் இணைந்த சேமிப்புத் திட்டம் (ELSS)
வரி சேமிப்பிற்கான சிறந்த முதலீட்டுத் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. ஒருவிதமான மியூட்சுவல் பண்ட் திட்டமான இதன் மூலம் வரியை சேமிப்பதுடன் அதிக வருமானமும் பெறலாம். முதலீட்டாளருக்கு 20-25% லாபம் தரும் இத்திட்டம், மூன்று வருட பணமுடக்க (லான் இன்) காலத்தைக் கொண்டது.
ELSS ல் யார் முதலீடு செய்யலாம்?
வரிவிலக்குடன் கூடிய லாபம் வேண்டுமென்போர் இதில் முதலீடு செய்யலாம். 1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு வரிவிலக்குக் கோரலாம்.
பொது வருங்கால வைப்புநிதி (PPF)
இந்தியாவில் மிகப் பிரபலமான இந்த முதலீட்டிக்கு 7.8% வட்டிவிகிதம் கிடைக்கும். மேலும் 80C பிரிவின் கீழ் வரிவிலக்கும் கிடைக்கும். 15 வருடங்களுக்குப் பிறகு முதிர்ச்சியடையும் இதில், 6 வருடங்களுக்குப் பிறகிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
குறைந்த ஆபத்தில் முதலீடு செய்து பணிஓய்வு அல்லது நீண்டகால நோக்கங்களுக்காகப் பணத்தைச் சேமிக்க விரும்புவோர் இதில் முதலீடு செய்யலாம். அதிக ஆபத்தைச் சந்திக்கத் தயங்காத முதலீட்டாளர்கள் கூட இதில் முதலீடு செய்வதன் மூலம் தங்களை நிலைப்படுத்திக்கொள்ளலாம்.
பியர்2பியர் லென்டிங் (Peer 2 Peer Lending)
இந்தியாவில் தற்போது பிரபலமாகி வரும் இந்தத் திட்டத்தில், இணையதளம் மூலம் தனிநபருக்கோ அல்லது தொழில் நிறுவனங்களுக்கோ கடன் வழங்கலாம். இதன் மூலம் 15-20% லாபத்தை எதிர்பார்க்கலாம். ஆனாலும் பணத்தை இழப்பதற்கான அபாயம் இங்கு மிக அதிகம்.
யாரெல்லாம் இதில் முதலீடு செய்யலாம்?
அதிகப் பணம் வைத்திருந்து எந்தவித ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம். பணம் கொடுப்பதற்கு முன் நன்கு விசாரித்து ஒப்பந்தம் செய்வது நல்லது.
ரியல் எஸ்டேட்
நீண்டகாலப் பார்வையில் ரியல் எஸ்டேட் முதலீடு என்பது மிகவும் லாபகரமானது. வர்த்தகம், வணிகநிறுவனம், கட்டுமானம், குடியிருப்புகள் என ரியல்எஸ்டேட்டில் பல வகைகள் உள்ளன. ஆனால் இதில் முதலீடு செய்ய அதிக அளவு பணம் தேவைப்படும். நீண்டகாலத்திற்குப் பிறகு நல்ல லாபமும் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட்டில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
உங்களிடம் அதிகப் பணம் இருந்து, மற்ற அனைத்து வகை முதலீடுகளையும் செய்து சலித்துப் போயிருந்தால் இதில் முதலீடு செய்யலாம். இதில் எளிதாகப் பணத்தைப் போட முடியாது என்பதால் கருப்புபணமும் தேவைப்படலாம்.
நிறுவன நிரந்திர வைப்புநிதி (Company fixed deposit)
வங்கிகளின் நிரந்திர வைப்புநிதி திட்டங்களுடன் ஒப்பிடும் போது அதிக லாபம் தரும் இது மிகவும் சிறப்பான திட்டம் தான். ஆனால் இதில் பணமுடக்கக் காலமும் இருப்பதால் கவனம் தேவை. இவ்வகை முதலீடுகளுக்குக் காப்பீடும் இல்லை.
இதில் யார் முதலீடு செய்யலாம்?
ஆபத்துடன் கூடிய லாபம் மற்றும் நீண்ட கால நிலையான வருமானம் தேவைப்படும் நடுத்தர முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் 12-14% லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
தபால்நிலைய சேமிப்புத் திட்டங்கள்
தபால் நிலையங்கள் முதலீட்டாளர்களுக்குத் தேவையான பல்வேறு வகையான முதலீட்டுத் திட்டங்களை வைத்துள்ளது. மாதந்திர திட்டம் , தொடர்ச்சியான திட்டம், சுகன்யா சம்ரிதி திட்டம் போன்றவற்றைத் தேர்வு செய்து, 8.5-8.7% வரையில் லாபம் பெறலாம்.
யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
நிலையான லாபத்தை எதிர்பார்க்கும் நடுத்தர முதலீட்டாளர்கள் இவ்வகைத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதில் அதிகப்படியான லாபத்தைப் பெற முடியாது என்றாலும் உங்களின் மூலதனம் பாதுகாப்பாக இருக்கும்.
முதலீட்டுப் பத்திரங்கள்
ஆபத்து நிறைந்த முதலீடுகள் வேண்டாம் என நினைப்பவர்கள் முதலீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். சந்தையில் அதிக லாபம் தரக்கூடிய நல்ல முதலீட்டுப் பத்திரங்கள் இருக்கின்றன. அரசாங்கத்தால் முறைபடுத்தப்பட்ட இவை, 10 ஆண்டுகளில் 8% வட்டிவிகிதம் தரக்கூடியவை.
யார் இவற்றில் முதலீடு செய்யலாம்?
ஆபத்து நிறைந்த முதலீடுகளில் தயக்கம் உள்ளவர்கள் நீண்ட கால நிலையான லாபம் வேண்டுமெனில் முதலீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.