பொதுவாக பங்கு வெளியீடு என்றாலே, சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு என்பார்கள். ஏனெனில் மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகளை கூட, மிகக் குறைந்த விலையில் வாங்க முடியும்.
அதெல்லாம் சரி, முதல் பொதுப்பங்கு வெளியீடு என்றால் என்ன? பங்கு சந்தையில் நுழையும் நிறுவனங்கள், முதல் முறையாக வெளியிடும் பங்குகளே பொது பங்கு வெளியீடு எனப்படுகிறது.
நிறுவனங்கள் ஆரம்பத்தில் பங்கு சந்தைக்குள் நுழையும்போது முதலீட்டாளர்களை கவர, நல்ல நிறுவனங்கள் கூட குறைந்த விலையில் வெளியிடுவார்கள். ஆக மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகளை ஆரம்ப காலத்திலேயே வாங்குவது நல்ல விஷயம். ஏனெனில் எதிர்காலத்தில் அவைகள் நல்ல லாபம் கொடுக்கலாம்.
நல்ல லாபம் கொடுக்கும்
ஏனெனில் ஒன்று குறைந்த விலையில் கிடைக்கும், மற்றொன்று அதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இப்படி முதலீட்டாளர்களுக்கு பல விஷயங்கள் சாதகமாக உள்ள நிலையில், அதில் முதலீடு செய்வது சிறப்பானதொரு விஷயம் தானே. அந்த வகையில் இந்த வாரத்தில் வெளியாகவுள்ள 5 பொதுப்பங்கு வெளியீடுகளை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
எந்தெந்த நிறுவனங்கள்?
லட்சுமி ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ், கிராப்ட் ஆட்டோமேஷன், கல்யாண் ஜுவல்லர்ஸ், நசாரா டெக்னாலஜிஸ் மற்றும் சூர்யோதே ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகிய 5 நிறுவனங்கள் இந்த வாரம் புதிய பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளன. அதோடு எம்டிஏஆர் டெக்னாலஜிஸ், ஈஸி டிரிப் ப்ளானர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இந்த வாரம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்யாண் ஜுவல்லர்ஸ் ஐபிஓ
இந்தியாவின் முன்னணி நகை கடை உரிமையாளரான கல்யாண் ஜுவல்லர்ஸ், மார்ச் 16, 2021 அன்று தனது பங்கு வெளியீட்டினை தொடங்கவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் விலை 86 - 87 ரூபாயாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 1175 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிதி திரட்டலானது அதன் மூலதன செலவினங்களுக்காக பயன்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 172 பங்குகள் வாங்கலாம். அதற்கும் அதிகமாக வாங்க வேண்டுமெனில் 172ன் மடங்கில் வங்கலாம். உண்மையில் இது சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்.
நசாரா டெக்னாலஜிஸ் ஐபிஓ
நசாரா டெக்னாலஜிஸ் இந்தியாவின் முதல் மொபைல் கேமிங் நிறுவனமாகும். இந்தியாவில் ஐபிஓவுக்கு விண்ணபித்த முதல் கேமிங் நிறுவனமாகும். இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் ஆதரவில் வெளியிடப்படுகிறது. இதன் வெளியீட்டு விலை ஒரு பங்கிற்கு 1100 - 1101 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பொது பங்கு வெளியீடு மார்ச் 17 அன்று தொடங்கப்படும். மார்ச் 19 வரை இந்த சலுகையானது இருக்கும். செப்டம்பர் 3- நிலவரப்படி ஜூன் ஜூன்வாலாவின் வசம் 11.51% பங்குகள் உள்ளது.
லட்சுமி ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ்
லட்சுமி ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் விலை 129 - 130 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று இதன் பங்கு வெளியீட்டில் மட்டும் 2.28 மடங்கு சந்தா பதிவாகியுள்ளதாகவும், 3.25 கோடி பங்குகளுக்கு எதிராக 7.42 கோடி பங்குகளுக்கு விண்ணபித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன்
வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான, கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் ஐ.பி.ஓ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 824 கோடி ரூபாய், நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதை அடுத்து, ஒரு பங்கின் விலை, 1,488 - 1490 ரூபாய் என, நிர்ணயித்துள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த பங்கு வெளியீடு, 17ம் தேதியன்று முடிவடைகிறது. இந்த பங்கு வெளியீட்டின்போது, 150 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 45.21 லட்சம் நிறுவனர்களின் பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது. இதில் பாதியளவு, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35 சதவீதம், சில்லரை முதலீட்டாளர்களுக்கும்; 15 சதவீதம், நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கும் விற்பனை செய்ய இருக்கிறது.
கடன்பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது, இந்நிறுவனம்.கோயம்புத்துாரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனமாகும்.
சூர்யோதே ஸ்மால் பைனான்ஸ் பேங்க்
சூர்யோதே ஸ்மால் பைனான்ஸ் பேங்க் நிறுவனம் மார்ச் 17 அன்று தனது பங்கி வெளியீட்டினை திட்டமிட்டுள்ளது. இதன் முக மதிப்பினை 10 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. பங்கு விலை 303 - 305 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. 81,50,000 புதிய ஈக்விட்டி பங்குகளை விற்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனினும் 1,09,43,070 பங்குகள் மொத்தமாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 582 கோடி ரூபாய் நிதியினை திரட்டவும் திட்டமிட்டுள்ளது.