நமது பாட்டி, தாத்தாக்கள் காலத்தில் சேமிப்பு முதலீடு என்றாலே போஸ்ட் ஆபீஸை நாடுவார்கள். அல்லது வங்கி பிக்சட் டெபாசிட்டில் போடுவார்கள். இதில் வட்டியும் குறைவு. முதலீடும் பெரியளவில் வளர்ச்சி கண்டிருக்காது.
எனினும் அன்றைய காலகட்டத்தில் செலவினங்கள் மிகக் குறைவு என்பதால், அது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை.
ஆனால் இன்று அப்படியில்லை. சாதாரணமாக குழந்தையை எல்.கே.ஜியில் சேர்த்தாலே பல ஆயிரங்கள் கட்டணமாக கட்ட வேண்டியுள்ளது. இது இப்பொழுதே இப்படி எனில், இன்னும் 10 - 20 ஆண்டுகள் கழித்து இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம்.
முதலீடு செய்ய வேண்டும்?
ஆக அதற்கேற்ப நாம் இன்றே குழந்தைகளின் கல்வி மற்றும் ஓய்வுகாலத்திற்காக திட்டமிட வேண்டும். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது 28 வயதான சுந்தர், தனது குழந்தையின் கல்வி மற்றும் அவரின் ஓய்வுகாலத்திற்காக சேமிக்க நினைக்கிறார். அப்படி எனில் அவர் மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதே சுந்தரின் கேள்வி.
மாத வருமானம் எவ்வளவு?
சுந்தரின் தற்போதைய வருமானம் மாதம் 60,000 ரூபாய். அதில் மாதம் 20,000 ரூபாயினை முதலீடு செய்ய நினைக்கிறார். அதில் 6000 ரூபாயில் அரசின் பொது வருங்கால வைப்பு நிதியிலும், 7000 ரூபாயினை MIRAE ASSET tax saver fundலும், parag parikh flexi cap fundல் மாதம் 2,000 ரூபாயும், ஆக்சிஸ் ஸ்மால் கேப் ஃபண்டில் மாதம் 1,000 ரூபாயும் முதலீடு செய்ய நினைக்கிறார். இது அவரின் இலக்குகளை அடைய போதுமானதா? இது குறித்து முதலீட்டு ஆலோசகரின் கருத்து என்ன என்பதைத் தான் இதில் பார்க்க விருக்கிறோம்.
மிக நல்ல விஷயம்
முதலில் சுந்தரின் இந்த திட்டத்திற்கும் வாழ்த்துகள் சொல்லலாம். ஏனெனில் பலரும் இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்ய வேண்டிய காலத்தினை விட்டு பின்னர் அவஸ்தைபடுகின்றனர். அப்படி இருக்கையில் 28 வயதிலேயே ஓய்வுகாலத்தினை பற்றி யோசிப்பது மிக நல்ல விஷயம் தான்.
அரசின் பொது வருங்கால வைப்பு நிதி
அதிலும் தன்னுடைய 60,000 ரூபாய் வருமானத்தில், 20,000 ரூபாய் முதலீடு எனும் போது, இது மிகப்பெரிய கார்ப்பஸினை உருவாக்க பயன்படும். இதில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் 6000 ரூபாய் என்பது நிரந்தர வருமானத்தினை தரக்கூடிய முதலீடு. ஆக உண்மையில் இது ஒரு நல்ல முதலீட்டு ஆப்சன் என்றே கூறலாம்.
பிபிஎஃப்-பில் எவ்வளவு கிடைக்கும்?
தற்போதைய நிலையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.1% ஆகும். இன்றைய காலகட்டத்தில் மாதம் 6000 ரூபாய் எனும்போது வருடத்திற்கு 72000 ரூபாய் முதலீடு செய்யும்போது, மொத்தம் 23 லட்சம் ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்திருப்பார். ஆக வட்டியுடன் சேர்த்து சுமார் 88 லட்சம் ரூபாய், அவரது ஓய்வுகாலத்தில் கிடைக்கும்.
வரி சலுகையுண்டு
மேலும் பிபிஎஃப் மற்றும் ELSS திட்டத்தின் மூலம் 1,50 லட்சம் ரூபாய்க்கு வரிச்சலுகையும் பெற முடியும். நீங்கள் 14,000 ரூபாய் ஈக்விட்டி ஃபண்டுகளில் 32 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும்போது, ஓய்வுகாலத்தில் 12% வருமானம் எனக் கொண்டால், உங்களது வருமானம் 6.31 கோடி ரூபாயாக இருக்கும். ஆக பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகள் என சேர்த்து மொத்தம் ஓய்வுகாலத்தில் 8.19 கோடி ரூபாய் உங்கள் கையில் கிடைக்கலாம்.
போதுமானதல்ல
பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிட்டால், உங்களது 8.19 கோடி ரூபாய் என்பது, இன்றைய 1.27 கோடி ரூபாய்க்கு மட்டுமே சமம். இது உங்கள் குழந்தையின் கல்வி, அவர்களின் திருமணம், உங்களது ஓய்வுகாலத்திற்கு போதுமானதாக இருக்காது. ஆக இன்றைய வருமானம் 60,000 ரூபாய் என்றாலும், வருங்காலத்தில், வருமானம் அதிகரிக்கும் போது, முதலீட்டினை இன்னும் அதிகரிக்கலாம். அப்படி அதிகரிக்கும்பட்சத்தில் உங்களது கார்ப்பஸ் இன்னும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் (பிசினஸ் டுடே கட்டுரை அடிப்படையில் எழுதப்பட்டது) பரிந்துரைக்கின்றனர்.
வருடம் ஒரு முறை மறுஆய்வு செய்யுங்கள்
மேலும் மியூச்சுவல் ஃபண்டுகளை முதலீடு செய்ய கையோடு விடாமல், அதனை வருடத்திற்கு ஒரு முறையேனும் மறுஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் வேறு ஃபண்டுகளுக்கு முதலீடுகளை மாற்றலாம். ஏனெனில் தற்போது லாபம் கொடுக்கும் ஃபண்டுகள் அடுத்த ஆண்டும் கொடுக்காது.