இந்தியாவினை பொறுத்தவரையில் இன்னும் ஆயிரமாயிரம் திட்டங்கள் என்பது இருந்தாலும், அஞ்சலக திட்டங்களுக்கு என்றுமே தனி இடமே உண்டு. இது சந்தை அபாயம் இல்லாத ஒரு பாதுகாப்பான ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.
மேலும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சலகத்தில் உள்ள ஒரு முதலீட்டு திட்டம் என்ற நிலையில், அது இன்னும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையினை கொடுக்கின்றது.
காலம் முழுக்க கஷ்டப்பட்டு குருவி சேர்ப்பது போல் சேர்த்த காசினை சேமிப்பது என்பது, அத்தனை முக்கியம் அல்லவா? இன்றைய காலக்கட்டத்தில் சம்பாதிப்பதை விட, அதனை பாதுகாப்பாக எவ்வாறு சேமிப்பது? எங்கு வருமானம் அதிகம் இப்படி பல விஷயங்கள் கவனிக்க படவேண்டியவையாக உள்ளன. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது அஞ்சலகத்தின் பிபிஎஃப் எனப்படும் பிரபலமான பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை தான்.
ரூ.500 - ரூ.12 லட்சம்
அதெப்படி மாதம் 500 ரூபாய் செலுத்தி, 12,00,000 லட்சம் ரூபாய் முதிர்வு தொகையாக பெற முடியும். அப்படி எனில் எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். எப்படி முதலீடு செய்வது. இந்த திட்டத்தில் எப்படி இணைவது? யாரெல்லாம் இணையலாம். இதில் வேறு என்ன சலுகைகள் எல்லாம் உள்ளது, வாருங்கள் பார்க்கலாம்.
நீண்டகால திட்டம்
பிபிஎஃப் திட்டத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கங்களுக்காக செய்யப்படும் ஒரு முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது. அஞ்சலக திட்டங்களிலேயே பிபிஎஃப் என்பது லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இது ஒரு 15 ஆண்டுகால திட்டமாகவும் உள்ளது.
யாரெல்லாம் இணையலாம்
இந்திய குடிமகனாகிய யாரும் இந்த கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம். இதில் குழந்தைகளும் கூட பெற்றோர் அல்லது பாதுகாவலர் துணையுடன் இணைந்து கொள்ள முடியும். இந்த திட்டத்தில் ஒருவர் ஒரு கணக்கினை மட்டுமே தொடங்கிக் கொள்ள முடியும். இபிஎஃப் அல்லது ஜிபிஎஃப்-ல் கணக்கு வைத்திருப்பவர்களும் கூட இதனை தொடங்கிக் கொள்ளலாம். எனினும் என்ஆர்ஐ-களுக்கு இந்த கணக்கு தொடங்க அனுமதியில்லை.
எங்கு தொடங்கலாம்?
இந்த பிபிஎஃப் கணக்கினை அஞ்சலகத்திலேயே தொடங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லையெனில் தேசியமயமாக்கப்பட்ட எந்த வங்கியிலும் தொடங்கிக் கொள்ளலாம். தற்போது பல வங்கிகளும் தங்களது இணையத்தின் மூலமாகவே இதனை தொடங்கிக் கொள்ளும் ஆப்சனை கொடுத்துள்ளன.
என்னவெல்லாம் தேவை?
இந்த பிபிஎஃப் கணக்கினை தொடங்க முகவரி சான்றிதழ், அடையாள சான்றிதழ், குழந்தைகளின் பேரில் தொடங்க வேண்டுமெனில் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அல்லது ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும். இந்த டெபாசிட் கணக்கினை தொடங்க குறைந்தபட்சம் 500 ரூபாயும், அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாயும் செலுத்தலாம்.
எப்போது செலுத்தணும்?
இதனை நீங்கள் மொத்தமாகவும் அல்லது மாத மாதம் கூட செலுத்திக் கொள்ளலாம். மொத்தமாக செலுத்துகிறீர்கள் எனில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 - 5 தேதிகளுக்குள் செலுத்த வேண்டும். இதே மாத மாதம் நீங்கள் செலுத்துகிறீர்கள் என்றாலும் 1- 5 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
வட்டி விகிதம்
தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.10% ஆகும். இது நிலையானது அல்ல, காலாண்டுக்கு ஒரு முறை அரசு மாற்றியமைக்கும். இது 15 வருடம் முதிர்வு காலம் என்றாலும், 15 வருடங்களுக்கு பிறகும் நீட்டித்துக் கொள்ளலாம். இதனை ஐந்து ஆண்டு தொகுப்புகளாக நீட்டித்து கொள்ள முடியும். இதில் டெபாசிட்டும் செய்யலாம். செபாசிட் செய்யாமலும் நீட்டித்துக் கொள்ளலாம் என இரு ஆப்சன்கள் உண்டு.
இடையில் வித்டிராவல் உண்டா?
இடையில் பணம் எடுத்துக் கொள்ளலாம். இது முந்தைய ஆண்டின் இருப்பில் 50% மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையான 500 ரூபாயினை கூட டெபாசிட் செய்யவில்லை எனில், உங்களது கணக்கு முடக்கப்படலாம். அப்படி முடக்கப்பட்ட கணக்கினை திரும்ப ஆக்டிவேட் செய்ய ஒரு நிதியாண்டுக்கு 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிருக்கும். இதில் கடன் வசதியும் உண்டு.வரிச்சலுகையும் உண்டு.
ரூ.500 - ரூ.12 லட்சம் எப்படி?
இந்த திட்டத்தில் மாதம் 500 ரூபாய் வீதம் 15 ஆண்டுகள் செலுத்தும்போது நீங்கள் 90,000 செலுத்தியிருப்பீர்கள். 15 ஆண்டுகள் கழித்து முதிர்வு தொகையாக 1,57,784 ரூபாய் கிடைக்கும். இதனை 5 ஆண்டு தொகுப்புகளாக 25 ஆண்டுகள் வரையில் நீட்டிக்கும்போது 12,76,390 ரூபாய் கிடைக்கும். இதில் பல ஆண்டுகள் கழித்து தான் என்றாலும், நீங்கள் செய்யும் முதலீடு என்பது மிகக் குறைவான முதலீடு என்பது நினைவுகூறத்தக்கது. ஆக சாமனிய மக்கள் மிகப்பெரிய அளவிலான தொகையை உருவாக்க இது சிறந்த ஆப்சன் எனலாம்.
அதிகபட்ச தொகை
பிபிஎஃப் திட்டத்தில் அதிகபட்ச டெபாசிட் ஆன 1.50 லட்சம் ரூபாயினை செய்தால், 15 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு முதிர்வு தொகையாக 40 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும். இதனை விட நான் அதிகம் முதலீடு செய்ய நினைக்கிறேன் என நினைப்பவர்கள், உங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்து கொள்ளலாம்.