சம்பளதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி என்பது இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓய்வூதிய திட்டமிடலாகும்.
இது சிறந்த சேமிப்பு என்பதோடு மட்டும் அல்ல, வரி சேமிப்புக்கும் உதவும் ஒரு சிறந்த திட்டமாக உள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி விதிகளின் படி, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவிகிதம் மற்றும் அகவிலைப்படி ஆகியவை சேர்த்து ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பங்களிப்பாக செலுத்தப்படுகிறது.
விபிஎஃப் என்றால் என்ன?
ஊழியரின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் உங்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டுமானால், நீங்கள் உங்களது விருப்பப்படி தன்னார்வ வருங்கால வைப்பு நிதியாக (VPF) பங்களிப்பு செய்யலாம். அதெல்லாம் சரி தன்னார்வ வருங்கால வைப்பு நிதி என்றால் என்ன? அதற்கு எப்படி நம் நிதியினை செலுத்துவது? ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு என்பது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஓய்வுகாலத்தினை திட்டமிட ஒரு சிறந்த அம்சமாக இருக்கின்றது. இந்த திட்டத்திற்கு இணைப்பாக, நிறுவனங்களுடன் இருக்கும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி கணக்கு உள்ளது.
விபிஎஃப்புக்கு வரம்பு இல்லை
வழக்கமாக நமது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியானது, இபிஎஃப் ஒரு வரம்புக்குள் உட்பட்டதாகவே இருக்கும். ஆனால் இத்தகைய வரம்பு என்பது விபிஎஃப் கணக்கிற்கு இல்லை. இதன் மூலம் நீங்கள் அதிக தொகையினை ஓய்வுக்காலத்திற்கு சேமிக்க முடியும். ஆனால் விபிஎஃப் அதிகரித்தாலும், நிறுவனத்தின் பங்களிப்பு அதிகரிக்காது.
எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?
சரி இந்த ஓய்வூதிய திட்டத்தில் அதிகம் சேமிக்க என்ன காரணம்? மற்ற சேமிப்புகளோடு ஒப்பிடும்போது இது சிறந்தா? வாருங்கள் பார்க்கலாம். நிச்சயம் மற்ற சேமிப்புகளோடு ஒப்பிடும்போது இது சிறந்த முதலீடு தான். ஏனெனில் இந்த இபிஎஃப்க்கு 2019 - 20ம் நிதியாண்டு நிலவரப்படி வட்டி விகிதம் 8.50% ஆகும். குறிப்பாக வங்கி டெபாசிட்டுகளோடு ஒப்பிடும்போது இதற்கான வட்டி விகிதம் மிக அதிகம் தான்.
எஃப்டியை விட வட்டி விகிதம் அதிகம்
நாட்டில் உள்ள முன்னணி வங்கிகள் கூட எஃப்டிக்கு 3-6% வரையில் தான் வட்டியினை வழங்கி வருகின்றன. அதோடு நீங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு சென்றாலும் கூட, அந்த தொகையினை எளிதாக டிரான்ஸ்பர் செய்து கொள்ளும் வசதி உண்டு. இதற்கு வருடத்திற்கு ஒரு முறை தான் வட்டி விகிதமும் மாற்றப்படுகின்றது. இதனால் நிலையான வருமானமும் உங்கள் எதிர்காலத்திற்கு சேமிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.
வரி சலுகையும் உண்டு
நீங்கள் செலுத்தும் இபிஎஃப், விபிஎஃப் தொகைக்கும் பிரிவு 80சின் படி வரி சலுகை உண்டு. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உங்களது பிஎஃப் தொகைய வித்ட்ரா செய்தால் அதற்கு வரி உண்டு. அதாவது ஐந்தாண்டுகள் தொடர்ச்சியான சேவையை முடிக்கும் முன்பு நீங்கள் நிதிகளைத் திரும்ப பெற விரும்பினால், சேமித்த தொகை மற்றும் வட்டிக்கு வரி கட்ட வேண்டியிருக்கும்.
அரசின் பாதுகாப்பு
இந்த பிபிஎஃப் மற்றும் விபிஎஃப் திட்டங்களுக்கு பாதுகாப்பு உண்டு. ஏனெனில் இதன் பின்னணியில் மத்திய அரசு உள்ளது. இதனால் தான் பலரும் தங்களது வேலையிருந்து ஓய்வுபெற்று வெளியே செல்லும் வரை, இந்த தொகையினை எடுப்பதே இல்லை. ஒரு வேளை நீங்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக உங்களது பணியினை தொடர முடியாவிட்டாலோ அல்லது பணியில் தொடராமல் போனாலும், பிஎஃப் தொகையினை அப்படியேவும் விட்டு வைக்கலாம். ஆனால் கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டு.
ஆக இப்படி பல வகையிலும் பிஎஃப் என்பது சிறந்த சேமிப்பு திட்டமாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது.