ஏற்றுமதியாளர்கள் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை வரவேற்றுள்ள போதிலும், தங்க மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள், அதிகரிக்கும் தங்கத்தின் விலை தங்க நகை தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்களை கண்டிப்பாக பாதிக்கும் என தங்களூடைய கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.
"அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவில் சுமார் 20 சதவீதத்தை ஏற்றுமதி செய்ய கட்டாயப்படுத்துவதால், ஏற்றுமதியாளர்கள் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களால் ஏற்றுமதி தங்கத்தின் விலையை கட்டுப்படுத்த இயலாது. அதன் காரணமாக ஏற்படும் ஏற்றுமதி இழப்பை உள்ளூரில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலையில் ஈடு செய்ய முயல்வார்கள். அதன் காரணமாக உள்ளூரில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும்" என மும்பை தங்க சங்கத்தின் முன்னாள் தலைவர் சுரேஷ் ஹுன்டியா தெரிவித்தார்.
ஏற்றுமதி இழப்பை ஈடு கட்டுவதற்காக ஏற்றுமதியாளர்கள் அதிக விலையில் தங்க நகை உற்பத்தியாளர்களுக்கு தங்கத்தை விற்பார்கள். அதன் காரணமாக நகை உற்பத்தியாளர்களும் நுகர்வோரின் சில்லறை விலையை உயர்த்திவிடுவார்கள் என அவர் தெரிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, நகை தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருவருக்குமான தங்கத்தின் விலையை உயர்த்தி விடும் என ஹுன்டியா கூறினார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை வரவேற்ற்றுள்ள கீதாஞ்சலியின் நிர்வாக இயக்குனர் மெஹுல் ச்ஹொக்ஸி "இறக்குமதியில் 20 சதவீதத்தை கட்டாயமாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது ஒரு நியாயமான நடவடிக்கை. இதன் மூலம் வர்த்தக பற்றாக்குறை குறைந்து டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பலப்படும்", எனத் தெரிவித்தார்.
"ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 3 முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கம் இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்த ஜூலை மாதத்தில் ஏற்கனவே சுமார் 3 பில்லியன் மதிப்புள்ள தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு விட்டது. அதிகரித்து வரும் தங்க இறக்குமதி ரூபாயின் மதிப்பை மிக மோசமாக பாதிக்கின்றது" என திரு ச்ஹொக்ஸி தெரிவித்தார்.
இரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் விபுல் ஷா "80:20 விகிதம் என்பது ஏற்றுமதியை ஊக்குவித்து வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் ஒரு சிறந்த நடவடிக்கை" எனத் தெரிவித்தார்.
"இறக்குமதி செய்யபடும் தங்கத்தில் சுமார் 20 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது எனில் சுமார் 80 சதவீத தங்கம் உள்நாட்டு பயன்பாட்டிற்கு இருக்கின்றது என அர்த்தம். இந்த நடவடிக்கையானது ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு வருவாயை அதிகரிக்கும் ", என்று அவர் கூறினார்.
கடந்த 2012 ம் ஆண்டில் சுமார் 970 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. அதில் சுமார் 70 டன்கள் அதாவது 7 சதவீத தங்கம் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
"ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, இந்த ஆண்டிற்கான தங்க இறக்குமதியை சுமார் 500 டன்களாக குறைத்து விடும். மேலும் தங்க ஏற்றுமதி சுமார் 100 டன் அளவிற்கு அதிகரிக்கக் கூடும் " என ஷா குறிப்பிட்டார். மேலும் அவர் "உள்நாட்டு பயன்பாட்டிற்கான தங்கத்தின் தேவையில் எந்த விதமான பற்றாக்குறையும் இருக்காது. விலைகளில் சிறிய அளவு தாக்கம் இருக்கலாம் ", எனத் தெரிவித்தார்.