மும்பை: எஸ்பிஐ மியுச்சுவல் பண்ட் நிறுவனம் 23 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள பெரு நகரங்களைத் அல்லாத சிறு நகரங்களில் 51 கிளைகளை ஒரே நேரத்தில் திறந்து அங்குள்ள வருவாய் உபரிகளை முதலீடுகளாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த கிளைகள் பி-15 எனப்படும் தரவரிசையில் முதல் 15 இடங்களைப் பிடித்துள்ள நகரங்களை தவிர்த்த பிற நகரங்களில் திறக்கப்பட்டுள்ளன.
"வளர்ந்துவரும் இந்திய பொருளாதாரத்தின் மூலம் நல்ல பலன்களைத் தரக்கூடிய நிதி முதலீடுகளில் இந்தியர்கள் குறைந்த அளவே முதலீடு செய்கிறார்கள். எனவே இந்த சிறு நகரங்களில் உள்ள சேமிப்பாளர்களை அடைந்து அம்முதலீடுகளைப் பெற இதைவிடச் சிறந்த தருணம் வேறு இருக்க முடியாது" என இந்த கிளைகள் திறப்பு விழாவின்போது கலந்து கொண்ட எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.
நிதி முதலீட்டுச் சந்தைகளில் சில்லரை முதலீட்டாளர்கள் பங்கு மிகவும் குறைவாக உள்ளதாகவும், அவர்களை இம்முதலீடுகளில் ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"மியுச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதி முதலீடுகளின் வரலாற்றை நோக்கினால், அவை சில்லரை முதலீட்டாளர்களுக்கு லாபமளிக்கக்கூடிய ஒரு நல்ல சொத்துமதிப்பை உருவாக்கித் தந்துள்ளதை உணரமுடியும். குறிப்பாக சிறு நகரங்களிலுள்ள இளம்வயதினர் இதுபோன்ற நிதி மற்றும் கடன் முதலீட்டுச் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்புவர் என்பதை நான் உறுதியாக கூறுவேன்" என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த 51 கிளைகளை திறந்ததன் மூலம் எஸ்பிஐ மியுச்சுவல் ஃபண்ட் 161 நகரங்களில் தன் கிளைகளைக் கொண்டு சிறப்பாக செயல்பட உள்ளது.