மும்பை: மஹிந்திரா குழுமத்தின் ஒரு பிரிவாகிய மஹிந்திரா ட்ரக்ஸ் அண்ட் பஸ்சஸ் லிமிட்டெட் நிறுவனம், தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும், வர்த்தக வாகனங்களின் அணிவகுப்பை பலப்படுத்தவும், அடுத்து வரும் 2-3 ஆண்டுகளில் சுமார் 500 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
வரவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் ட்ராகோ 49 மற்றும் ட்ருக்ஸோ 37 என்ற இரு புதிய ட்ரக்குகளை காட்சிக்கு வைக்கவிருக்கும் இந்நிறுவனம், நடுத்தர வர்த்தக வாகனங்களுக்கென புத்தம் புதிய ப்ளாட்ஃபார்ம் ஒன்றை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஐசிவி (இன்டெர்மீடியேட் கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ்) மற்றும் எம்சிவி (மீடியம் கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ்) போன்ற புதிய பிரிவுகளில் நுழைய இந்நிறுவனம் தயாராகி வருகிறது.
"இந்திய வர்த்தக வாகன துறையில், அனைத்து வகை வாகனங்களையும் உற்பத்தி செய்து, நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. அடுத்து வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில், புராடக்ட் டெவலப்மென்ட்டிற்கென சுமார் 500 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளோம்," என்று மஹிந்திரா ட்ரக்ஸ் அண்ட் பஸ்சஸ் லிமிட்டெட்டின் (எம்டிபிஎல்) டெக்னாலஜி, புராடக்ட் டெவலப்மென்ட் & சோர்ஸிங் பிரிவின் சீஃப் எக்ஸிக்யூட்டிவ் மற்றும் டைரக்டர் அண்ட் ஹெட் ஆகிய பொறுப்புகளில் வகிக்கும் திரு ராஜன் வதேரா கூறியுள்ளார்.
மொத்தத் தொகையில், 300 கோடி ரூபாய் வரை ஐசிவிக்கெனவே (8-12 டன்கள்) பல்வேறு உபயோகங்களைக் கொண்டு உருவாக்கப்படவிருக்கும் முற்றிலும் புதிய ப்ளாட்ஃபார்ம் ஒன்றின் உருவாக்கத்துக்கென செலவிடப்படவுள்ளது. "ஐசிவி பிரிவு மிகுந்த நம்பிக்கையளிக்கும் ஒன்றாகத் தெரிகிறது. வருடத்துக்கு சுமார் 1 லட்சம் யூனிட்கள் என்று இருக்கும் சந்தையின் அளவு சுமார் 1.5 லட்சம் யூனிட்கள் வரை வளரக்கூடும்," என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் பொருளாதார மந்தநிலையினால் எம்சிவி பிரிவு தற்போது நலிவடைந்து வருவதாகக் கூறப்பட்டாலும், மொத்தத் தொகையில் ஒரு பகுதி இப்பிரிவிற்கெனவும் செலவழிக்கப்படவுள்ளது என்று வதேரா கூறுகிறார். "மீதமுள்ள 200 கோடி ரூபாயை, ட்ரக்குகள் மற்றும் பஸ்கள் உள்ளிட்ட எங்களின் தற்போதைய அணிவகுப்பை வலுப்படுத்துவதற்கும், தற்போதுள்ள எல்சிவிக்களை புதுப்பிப்பதற்கும் உபயோகிக்கவுள்ளோம்." என்று கூறியுள்ள அவர், சுமார் 37 டன் எடையுடன் கூடிய புதிய ஸிவி ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆட்டோ எக்ஸ்போவில், டொர்ரோ 25 டிப்பர், லோட்கிங் ஸூம் கன்டெயினர் ட்ரக் அண்ட் டிப்பர் போன்ற எல்ஸிவி ரக வாகனங்களையும், டூரிஸ்டர் காஸ்மோ பஸ்ஸையும் இந்நிறுவனம் காட்சிக்கு வைக்கவுள்ளது.
பிப்ரவரி 5 முதல் 11-ஆம் தேதி வரையில் நடைபெறவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளவற்றைப் பற்றி விமர்சிக்கையில், "இந்த கண்காட்சி, புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த நாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், ஸிவி வாகனங்களில் உள்ள அனைத்து ரகங்களையும் உற்பத்தி செய்து நிகரற்ற நிறுவனமாக உயர வேண்டும் என்ற எங்களின் எதிர்காலத் திட்டத்தையும் பறைசாற்றுவதாக இருக்கும்." என்று வதேரா கூறியுள்ளார்.
ஸிவி பிரிவில், மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்), நவிஸ்டார் குழுமத்துடன் கைகோர்த்திருந்தது. ஆனால் டிசம்பர் 2012 -இல், உள்நாட்டு வாகன உற்பத்தி ஜாம்பவானாகிய இந்நிறுவனம், ட்ரக்குகள், பஸ்கள் மற்றும் எஞ்சின்களை உற்பத்தி செய்யும் பொருட்டு தன் அமெரிக்க பார்ட்னரை அதன் இரண்டு கூட்டு ஸ்தாபனங்களிடமிருந்து சுமார் 175 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
அதிலிருந்து ஸிவி பிரிவை நோக்கிய தன்னந்தனியான பயணத்தை மேற்கொண்டுள்ளது இந்நிறுவனம். எனினும், நவிஸ்டார் குழுமம் இதற்கான தொழில்நுட்பத்தை வழங்க சம்மதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.