டெல்லி: 2015ஆம் ஆண்டு இந்திய கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது என்றே சொல்லலாம். ஏன்..? காரணம் உண்டு.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டியைத் தொடர்ந்து குறைத்ததன் மூலம், இந்தியாவில் கார்களின் விற்பனை எப்போதும் இல்லாத வகையில் 20 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விற்பனையில் உச்சம்...
2015ஆம் ஆண்டின் சிறிய வகைக் கார்கள் மட்டும் அல்லாமல் வேன், எஸ்யூவி, டிர்க் மற்றும் பஸ்களின் விற்பனை அதிகமாக இருந்தது. ஆனால் எப்போதும் விற்பனையில் உச்சம் பெறும் பைக் மற்றும் 3 சக்கர வாகனங்களின் விற்பனை 2015ஆம் ஆண்டில் குறைந்துள்ளது.
10 சதவீத வளர்ச்சி
2015ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் மட்டும் சுமார் 2,034,015 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவைப் பார்க்கும் போது 1,852,545 கார்களாக உள்ளது. ஆகையால் கடந்த ஒரு வருடத்தில் கார் விற்பனை சந்தை 9.8 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.
நிறுவனங்களும்.. வாடிக்கையாளர்களும்..
2015ஆம் ஆண்டில் இந்தியா ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளியிட்ட புதிய மாடல்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் மீது உதித்த புதிய நம்பிக்கையின் காரணமாகக் கார்களின் விற்பனை எப்போதும் இல்லாத வகையில் சுமார் 9.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
வங்கிக் கடன்
பொதுவாக இந்தியாவில் கார் வாங்குவோர் வங்கிக் கடன் வாயிலாகவே வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 12 மாதங்களில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் சுமார் 1.25 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இதனால் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை..
அதுமட்டும் அல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் மக்கள் வழக்கத்தை விடவும் அதிகமான அளவில் கார்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.