ஒருபக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த என்ன செய்வது என மத்திய அரசு மண்டையை உடைத்துக் கொண்டு இருக்கையில் மறுபுறம் இந்திய சந்தையில் முதலீடு செய்திருந்த அன்னிய முதலீட்டாளர்கள் பின்னங்கால் முதுகில் படத் தெறித்து ஓடுகின்றனர்.
இதனால் மத்திய அரசும் சரி, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கண்ணீர் கடலில் மிதக்கின்றனர்.
அன்னிய முதலீட்டாளர்கள்
ஆகஸ்ட் மாதம் துவங்கி 2 வர்த்தக நாட்களுக்குள் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் செய்திருந்த முதலீட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 2,881 கோடி ரூபாயைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
பொதுவாக அன்னிய முதலீட்டாளர்கள் வளரும் நாடுகளில் அதிகத் தொகையைப் பங்குச்சந்தையிலும், குறைவான தொகையைக் கடன் சந்தையிலும் செய்வார்கள். அதுவே அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடாக இருந்தால் இந்தக் கொள்கை அப்படியே தலைகீழாக மாறும்.
இந்திய சந்தை
அந்த வகையில் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான தொகையைப் பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் 31 நாட்களில் வெறும் 2,985.88 கோடி ரூபாயை மட்டுமே திரும்பப் பெற்ற நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 2 நாட்களிலேயே 2,632.58 கோடி ரூபாயை திரும்பப் பெற்றுள்ளது.
கடன் சந்தை பங்குச்சந்தை
ஆகஸ்ட் மாதத்தின் 1 -2 தேதிகளில் சில முக்கியக் காரணத்திற்காக அன்னிய முதலீட்டாளர்கள் கடன் சந்தையிலிருந்து 248.52 கோடி ரூபாயும், பங்குச்சந்தையிலிருந்து 2,632.58 கோடி ரூபாயைத் திரும்பப் பெற்றுள்ளது.
இதற்கு என்ன காரணம்..?
சில வாரங்கள் முன்பு வரையில் அமெரிக்கா, சீனா பிரச்சனை தணிந்துவிட்டது என நம்பிய நிலையில், வேதாளம் திரும்பவும் முருக்கை மரம் ஏறிவிட்டது போல் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் வர்த்தகப் போரை துவங்கியுள்ளார்.
இந்தப் பிரச்சனையால் தற்போது மொத்த ஆசியச் சந்தையும் சிக்கித்தவிக்கிறது.
ஒரு வாரம்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய சந்தையில் இருக்கும் டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் 90,000 கோடி ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதில் எஸ்பிஐ வங்கி தான் அதிகளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்து நிற்கிறது.
இதுமட்டும் அல்லாமல் பிற வங்கிகளும் மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பெற்றுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாமல் குழம்பி நிற்கின்றனர்.