கொரோனாவின் வருகைக்கு பிறகு டயர் 2 நகரங்களில் ஐடி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக தமிழகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில், ரியல் எஸ்டேட் துறையானது சூடுபிடிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, கோயம்புத்தூர். தலைவர் குகன் இளங்கோ, கோயம்புத்தூர்- பாலாக்காடு ரோடு, கோயம்புத்தூர் பைபாஸ், கிடங்குகளுக்கு விருப்பமான இடங்களாக மாறி வருவதாக பிசினஸ் லைன் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த கிடங்குகளில் பல வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படுவதால், இந்த பகுதியில் குறைவான விலையில் வீடுகளுக்கு அதிக தேவை உருவாகி வருகின்றது.
ரியல் எஸ்டேட் தேவை அதிகரிப்பு
மேலும் கோயம்புத்தூரில் பல்வேறு ஐடி நிறுவனங்களும் விரிவாக்கம் செய்து வருவதால், வீடுகளுக்கான தேவை என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. பெரிய பெரிய முன்னணி டெவலப்பர்கள் கூட தற்போது கோயம்புத்தூரில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்ல, பல்வேறு துறை சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களும் கோயம்புத்தூரில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. அவர்கள் தங்களது செயல்பாடுகளை செய்வதற்கு முக்கிய இடமாக கோயம்புத்தூரை பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
அரசின் முதலீடுகள்
இது அரசு 2,000 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு செய்து, மேம்பாலம், விமான நிலைய விரிவாக்கம், சாலை விரிவாக்கம், வடிகால் வசதிகள், சுகாதாரம் என பலவற்றிலும் கவனம் செலுத்தி வருகின்றது. இது மேற்கொண்டு அதிக முதலீடுகளை ஈர்க்க வழிவகுக்கும். ஐடி நிறுவனங்களை மட்டும் அல்ல, மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களையும் இங்கு செயல்பட வழிவகுக்கும் என தொழில்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
வளர்ச்சி காணும் புற நகர் பகுதிகள்
குறிப்பாக கோவையின் புற நகர் பகுதிகளான சரவணம்பட்டி, வெள்ளலூர் மற்றும் கோயம்புத்தூர் பைபாஸ் சாலைகள் என பலவும் முக்கிய தொழில் வளர்ச்சியுடன் கூடிய தொழில் மையங்களாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொருளாதார வளர்ச்சி கண்ணோட்டத்தில் கோயம்புத்தூர் புறவழிச்சாலையானது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி கண்டு வரும் டயர் 2 நகரங்கள்
டயர் 2 நகரங்களில் நல்ல வளர்ச்சி கண்டு நகரங்களில் டாப் 5ல் கோயம்புத்தூரும் இடம்பெற்றுள்ளது. இது ஐடி மற்றும் பல்வேறு கார்ப்பரேட் துறைகளிலும் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வளர்ச்சி கண்டு வரும் டாப் டயர் 2 நகரங்களில் முதலிடத்தில் அகமதாபாத்தும், இரண்டாவது இடத்தில் கோயம்புத்தூரும், மூன்றாவது இடத்தில் புபனேஷ்வரும், அடுத்த இடத்தில் யெஜ்ப்பூர், கொச்சி, நாக்பூர், விசாக், லக்னோ உள்ளிட்ட நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
சிறப்பான எதிர்காலம்
முன்னதாக ஐடி நிறுவனங்கள் இங்கு இருக்கும் அலுவலகங்களை விரிவாக்கம் செய்து வருவதாகவும், சில நிறுவனங்கள் அலுவலகங்களை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் என்ற பதிவில் பார்த்தோம். .மொத்தத்தில் கோயம்புத்தூருக்கு சிறப்பானதொரு எதிர்காலம் காத்திருப்பது நல்ல விஷயமே.