எண்ணெய் உற்பத்தி நாடுகளில் முக்கிய நாடான சவுதி அரேபியா, அதன் முக்கிய வருவாயாக கருதப்படும் எண்ணெய் உற்பத்தியில் ஒரு அதிரடி மாற்றத்தினை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது.
இதனால் கதிகலங்கி போன மற்ற உற்பத்தி நாடுகள் என்ன சொல்வது என்று தெரியாமல் போக விழி பிதுங்கி நிற்கின்றன.
இது ஒரு புறம் எனில், இதனால் சர்வதேச எண்ணெய் சந்தையில் ஒரு பெரும் விலை புரட்சியே ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சபாஷ் நல்ல யுக்தி
சொல்லப்போனால் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் மொத்த சுதந்திரத்தினையும் பறிப்பது போல உள்ளது இந்த அறிவிப்பு. அப்படி என்ன அறிவிப்பு? எதற்காக ஒரே நாளில் 30% கச்சா எண்ணெய் விலை குறைய வேண்டும். பொதுவாக நமக்கு தேவையான ஒரு 100 ரூபாயிலும் கிடைக்கிறது. அதே பொருளை மற்றொருவர் வெறும் 10 ரூபாய்க்கு விற்கிறார். நாம் யாரை தேடி செல்வோம். இந்த யுக்தியைத் தான் சவுதி தற்போது கையில் எடுத்துள்ளது.
இது மாஸ்டர் பிளான்
இது கச்சா எண்ணெய் விலையில் பெரிய விலை யுத்தத்தினையே உருவாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 20 வருடத்தில் இல்லாத அளவுக்கு விலை சலுகையில் கிடைக்கும் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். ஆக உலகின் ஒட்டுமொத்த சந்தையும் தன் பக்கம் திரும்ப வைக்க சவுதி போட்ட மாஸ்டர் பிளான் இது.
எண்ணெய் விலை 30% வீழ்ச்சி
இதன் தாக்கம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிட்டதட்ட 30% வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் WTI கச்சா எண்ணெய் விலையானது தற்போது 31.06% வீழ்ச்சி கண்டு, பேரலுக்கு 28.46 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 28.65% வீழ்ச்சி கண்டு பேரலுக்கு 32.31 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.
விலைபோர்
1991ல் அமெரிக்கா ஈராக் போருக்கு பின்னர் எண்ணெய் சந்தைகள் படு வேகமாக வீழ்ச்சி கண்டன. அது உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் இடையே கூட ஒரு பெரிய விலைபோருக்கு தூண்டியது. இந்த நிலையில் கடந்த வாரத்திலேயே உலக அளவில் நிலவி வரும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில் சவுதியில் இந்த அறிவிப்புக்கு பின்னர் மீண்டும் இப்படி படு வீழ்ச்சி கண்டுள்ளது. இது 1991ல் உள்ள விலைபோரை மீண்டும் கொண்டு வந்துவிடுமோ என்ற அச்சத்தை உற்பத்தியாளர்கிடையில் உருவாக்கியுள்ளது எனலாம்.
தேவை வீழ்ச்சி
ஏற்கனவே சந்தையில் சீனாவின் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக எரிபொருள் பயன்பாடானது படு வீழ்ச்சி கண்டுள்ளது. போகிற போக்கை பார்த்தால் எண்ணெயை இலவசமாக வழங்க வழி வகுக்குமோ என்ற எண்ணத்தின் மத்தியில், சவுதியின் இந்த அறிவிப்பு மற்ற எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு பேரிடியாய் வந்து இறங்கியுள்ளது.
மாற்றம் கொண்டு வருமா?
ஆக இதனால் வரவிருக்கும் வாரங்களில் அல்லது மாதங்களில் ஒபெக் நாடுகள் இணைந்து இதற்கு ஒரு ஒருங்கிணைப்பு கொள்கையை கொண்டு வர எத்தனிக்கலாம். பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த சில மணி நேரங்களுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மேலும் வீழ்ச்சியடையலாம்
ஆக சவுதி அராம்கோவின் இந்த திடீர் முடிவால், மற்ற உற்பத்தி நாடுகளும் விலையை குறைக்க வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது நிச்சயம் கச்சா எண்ணெய் விலையில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும். ஏனெனில் மற்ற எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தங்களது வாடிக்கையாளர்கள் சந்தையை தொடர்ந்து நீட்டிக்கவும், இதே சந்தையை தக்கவைத்துக் கொள்ளவும் நிச்சயம் போராட துவங்குவர். இதனால் விலை குறைப்பு மேலும் சந்தையை வீழ்ச்சி காண வழிவகுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.