இந்தியாவில் கறுப்புப் பணத்துக்கு அடைக்கலமாக இருக்கும் முதலீடுகளில் தங்கத்துக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. காரணம் தங்கத்தை எளிதில் பணமாக மாற்றிக் கொள்ளலாம். அதோடு தங்கத்தை சர்வதேச அளவில் எந்த நாட்டில் வேண்டுமானாலும் மற்றி எந்த நாட்டின் பணமாகவும் பெற முடியும். அந்த அளவுக்கு உலகத்தில் உள்ள எல்லா நாட்டு மக்களுக்கும் தங்கத்தின் மதிப்பு தெரியும்.
இப்போது, இந்தியாவில் கணக்கில் வராத தங்கத்தை எல்லாம் ஒழுங்குபடுத்த மத்திய அரசு ஒரு பெரிய திட்டத்தை தீட்டிக் கொண்டு இருப்பதாக அரசு உயர் அதிகாரிகளே சொல்லி இருப்பதாக சில செய்திகள் வெளியாயின.
என்ன திட்டம்
ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தை ஒவ்வொரு நபரும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் ஒருவர் தங்கத்தை வைத்திருக்கிறார்கள் என்றால், அந்த தங்கத்துக்கு முறையாக ரசீது கணக்குகளை எல்லாம் காட்டி அரசுக்கு முறையாக வரி செலுத்த வேண்டும். அப்படி ஒருவேளை நம்மிடம் இருக்கும் தங்கத்துக்கு ரசீது இல்லை என்றால் கூட, அதையும் முறையாக அரசிடம் கணக்கு காட்டி, வரி செலுத்த வேண்டும் என செய்திகள் வெளியாகி இருந்தது.
விவரங்கள் இல்லை
ஆனால், ஒரு தனி நபர் அல்லது, ஒரு குடும்பத்தினர் எவ்வளவு கிராம் வரை தங்கத்தை வைத்துக் கொள்ளலாம், ரசீது இல்லாத தங்கத்துக்கு கூடுதல் வரி விதிக்கப்படுமா..? கம்பெனிகள் மற்றும் கோவில் ட்ரஸ்டுகள் தங்கத்தை வைத்துக் கொள்ள உச்ச வரம்புகள் ஏதாவது விதிக்கப் போகிறார்களா..? என எந்த ஒரு கேள்விக்கும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. ஆனால் கூடிய விரைவில் தங்கம் தொடர்பாக ஒரு பெரிய திட்டம் வரப் போகிறது என அரசு அதிகாரிகள் சொல்லி இருப்பதாக பரபரப்பாக செய்திகள் வெளியாயின. ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என இப்போது நிதி அமைச்சகம் விளக்கம் கொடுத்து இருக்கிறது.
Finance Ministry Sources to ANI: There is no Gold amnesty scheme under consideration of Income Tax Department as being reported in media. As the budget process is on, typically these type of speculative reports do appear. pic.twitter.com/a57OJWNYoa
— ANI (@ANI) October 31, 2019
நிதி அமைச்சகம் விளக்கம்
நேற்று முழுக்க தீ பிடித்து எரிந்த இந்த செய்தியைப் பற்றி நிதி அமைச்சகம் இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் விளக்கம் கொடுத்து இருக்கிறது. தங்கத்தைக் கட்டுப்படுத்துவது அல்லது ரசீது இல்லாத தங்கத்துக்கு வரி போடுவது என எந்த ஒரு புதிய திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வருவதற்கு யோசிக்கவில்லை. இப்போது பட்ஜெட் குறித்த வேலைகள் தொடங்கி இருப்பதால், அடிக்கடி இப்படிப்பட்ட போலியான செய்திகள் வெளியாகலாம். எனவே எச்சரிக்கையாக இருக்கவும் என, மத்திய நிதி அமைச்சகம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குச் சொல்லி இருக்கிறார்களாம்.