இந்தியாவுக்கு எப்படியோ விடிவுகாலம் வந்திருச்சி என்ற நம்பிக்கை. அதிலும் தற்போது இந்தியா இருக்கும் நிலையில், தங்க சுரங்கத்தில் 3000 டன்னுக்கு மேலாக தங்கம் இருப்பதாக வெளியான அறிக்கை சற்று ஆறுதலை கொடுத்தது என்றே கூறலாம்.
ஆனால் அந்த நிம்மதியில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, முழுவதும் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை.
உத்தரபிரதேசத்தின் இரு இடங்களில் 3,350 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால் அது முழுக்க உண்மையில்லை என்று ஜிஎஸ்ஐ தெரிவித்துள்ளது.
உண்மை என்ன?
இது குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான அறிக்கையில், 20 ஆண்டுகள் தேடலுக்கு பிறகு மத்திய மற்றும் மாநில சுரங்கத்துறை இயக்குநரகம் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் சோன்பத்ரா மற்றும் ஹர்தி ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சோன்பத்ராவில் 2,700 டன் மற்றும் ஹர்தியில் 650 டன் என மொத்தம் 3,350 டன் தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. அதுவும் கொஞ்சம் நஞ்சம் அல்ல, நாட்டின் கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகம் என்று கூறப்பட்டது.
பல விலை உயர்ந்த தாதுக்கள் இருக்கலாம்
மேலும் இந்த சுரங்கங்களில் தங்கத்தை தவிர இப்பகுதியில் யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என ஆராய்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. இவ்வாறு கணித்தது போல அந்த இடங்களில் தங்கம் கிடைதால், அது மாநிலத்தின் வருவாய்க்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். மேலும் பலபேருக்கு வேலை வாய்ப்புகளையும் ஊக்குவிக்கும் என்றெல்லாம் கற்பனையில் கோட்டை கட்டப்பட்டது.
வெளியான தகவல் உண்மை அல்ல
ஆனால் ஏமாற்றம் அளிக்கும் விதமாக அப்படி எல்லாம் எதுவும் தங்கம் பெரியளவில் இல்லை என்று பெரிய பூசணிக்காயை போட்டு உடைத்தாற்போல் ஜிஎஸ்ஐ அறிவித்துள்ளது. உண்மையில் எதிர்பார்த்ததை போல 3,350 டன் தங்கம் இல்லையாம். மேலும் இவ்வாறு வெளியான தகவல் உண்மை அல்ல என்று இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
160 கிலோ தங்கம் கிடைக்கலாம்
மேலும் இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3,350 டன் அளவில் தங்கம் ஏதும் கண்டுபிடிக்கவில்லை, மாறாக வேறு தாதுக்கள் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தாதுக்களில் இருந்து தங்கத்தை பிரித்து எடுத்தால் வெறும் 160 கிலோ தங்கம் தான் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால் இது கூட தோராயமான அறிக்கை தானாம். பிரித்து எடுத்தால் தானே தெரியவரும். எது எவ்வளவு மதிப்புடையது என்று.


Click it and Unblock the Notifications