இந்திய ஐடி துறை சார்ந்த மாணவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு கனவு படித்து முடித்தோமா? அமெரிக்கா சென்றோமா? நல்ல சம்பளம் வாங்கினோமா? செட்டில் ஆனோமா? என்ற கனவே மிகப்பெரிய கனவாக இருக்கும்.
ஆனால் இன்று நிலைமையே வேறு. கடந்த 2021ம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 198 பில்லியன் டாலர் இந்திய ஐடி நிறுவனங்கள் பங்களித்துள்ளன.
கடந்த ஆண்டு இந்த துறையானது 103 பில்லியன் டாலர் வருவாயினை ஈட்டியது.
இந்திய நிறுவனங்களில் US ஊழியர்கள்
அதோடு இந்திய ஐடி நிறுவனங்கள் நேரடியாக 2,07,000 அமெரிக்க ஊழியர்களை பணியமர்த்தியுள்ளன. அதுவும் சராசரியாக சம்பளம் 1,06,360 டாலர்களாகும். இது கடந்த 2017 முதல் பார்க்கும்போது 17% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் பாரம்பரிய தொழில் நிறுவனங்களுக்கு வெளியில், பணியமர்த்தியதில் இந்திய ஐடி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
அமெரிக்காவிற்கு பலன்
இந்திய ஐடி நிறுவனங்கள் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் 75%க்கும் அதிகமான நிறுவனங்களுடன் பணிபுரிகின்றன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்டவை.
நாஸ்காம் மற்றும் ஐ ஹெச் எஸ் மார்ஹிட் அறிக்கையின் படி, இந்திய ஐடி துறையின் நேரடித் தாக்கம், இன்று வரையில் 396 பில்லியன் டாலர் விற்பனையை செய்துள்ளது. இதன் மூலம் 1.6 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு 198 பில்லியன் டாலர் பங்களிப்பினை உருவாக்கியுள்ளது. இது 20 அமெரிக்க மாநிலங்களின் ஒருங்கிணைந்த பொருளாதாரங்களை விட பெரியது.
இந்திய நிறுவனங்களின் முதலீடு
இதற்கிடையில் தொடர்ந்து இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் 1.1 பில்லியன் டாலருக்கும் மேலாக கூட்டணியினை மேம்படுத்த முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள கிட்டதட்ட 180 பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், சமூக கல்லூரிகள் மற்றும் பிறவற்றுடன் கூட்டணி வைத்துள்ளன.
இந்தியா தான் முக்கிய பங்கு
அமெரிக்காவில் திறமைகளை விரிவாக்கம் செய்வதில் இந்திய ஐடி நிறுவனங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. மேலும் வட கரோலினா போன்ற பகுதிகள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப மையமாக மாற இந்திய நிறுவனங்களின் பங்கு முக்கியமானதாகும். கடந்த தசாப்தத்தில் இந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பு விகிதத்தில் 82% வளர்ச்சி கண்டுள்ளன.
டிரம்பின் கட்டுப்பாடுகள்
இந்திய நிறுவனங்கள் இந்தளவு பணியமர்த்தலை அதிக சம்பளம் கொடுத்து பணியமர்த்தலை செய்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு எனலாம். டொனால்டு டிரம்ப் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அமெரிக்கர்களே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்பினை அதிகரிக்க வேண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தார்.
'பைடனின் தளர்வுகள்
அந்த கடுமையான கட்டத்தில் அனைத்து முக்கிய விசாக்களையும் ரத்து செய்தார். இதனால் அந்த காலக்கட்டத்தில் இந்திய நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களும் அமெரிக்கர்களை பணியமர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டன. ஆனால் அதன்பிறகு ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அந்த கடுமையான தடைகளை நீக்கினார்.
இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா
ஆக நடப்பு ஆண்டிலும் இதுபோன்றதொரு நிகழ்வு இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்தியர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. இந்த ஆண்டு இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை வழக்கம்போல அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.