டெல்லி: இன்றைய பங்கு சந்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்கள் தங்களது சந்தை செல்வத்தில் 8.21 லட்சம் கோடி ரூபாய் செல்வத்தை இழந்தனர்.
குறிப்பாக சொல்லவேண்டுமானால் அப்போது சென்செக்ஸ் 1,821 புள்ளிகள் சரிந்து கண்டு 33,876 ஆக இருந்தது. இது முந்தைய நாள் முடிவில் 35,697 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிஎஸ்இ-யில் சந்தை மூலதனம் 128.92 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது. இது புதன் கிழமையன்று 137.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
நிஃப்டியும் சரிவு
தேசிய பங்கு சந்தை நிஃப்டி கூட அந்த சமயத்தில் 519 புள்ளிகள் சரிந்து 9,938 ஆக இருந்தது. சந்தையின் ஏற்ற இறக்கத்தினை பிரதிபலிக்கும் விதமாக என்எஸ்இ விக்ஸ் இன்டெக்ஸ் (NSE VIX index) 9.84% அதிகரித்து 34.66 ஆக இருந்தது. இது ஒரு புறம் எனில் டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட பங்குகள் அதிகபட்சமாக சரிந்தன.
நிஃப்டி குறியீட்டில் அதிக இழப்பு
குறிப்பாக சொல்லவேண்டுமானால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்பட்டன. அதிலும் குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் அதிகபட்ச இழப்புகளை சந்தித்து இருந்தன.
பெரும் தொற்று
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்றினை, ஒரு பெரும் தொற்று நோயாக அறிவித்தது. இதனால் சர்வதேச சந்தைகள் மற்றும் Wall Streetல் உள்ள அனைத்து குறியீடுகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. இதோடு ஜப்பானின் நிக்கி 224 காலை வர்த்தகத்திலேயே 4.2% சரிவை கண்டு 18,591.01 ஆக இருந்துள்ளது. இதே ஆஸ்திரேலியாவின் S&P/ASX 200 குறியீடு 5.3% சரிந்து 5,420.70 ஆகவும் உள்ளது.
இழப்புகள் அதிகம்
இதே போல தென் கொரியாவின் கோப்சி 3.8% சரிந்து 1,836.48 ஆகவும் உள்ளது. இதே ஹாங்காங்கின் ஹேங் செங் 3.5% சரிந்து 24,341.52 ஆகவும், ஷாங்காயின் காம்போசைட் குறீயீடு 1.1% சரிந்து 2,934.99 ஆகவும் உள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் டவ் ஜோன்ஸின் இழப்பு கடந்த மாதம் நிர்ணயித்த இலக்கினை விட 20% அதிகமாக கீழே வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக இப்படியாக சர்வதேச சந்தைகள் அனைத்தும் அதிகளவில் சரிந்து வருகின்றன. இந்திய சந்தையில் மட்டும் அல்ல, சர்வதேச சந்தையிலும் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் கண்டுள்ளனர்.