உலகின் வல்லரசு என தனது காலரை தூக்கிவிட்டு கொண்ட அமெரிக்காவே, இன்று கொரோனாவின் ஆதிக்கத்தினால் படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கிறது.
இதனால் அந்த நாட்டின் பொருளாதாரமே முற்றிலும் முடங்கி போயுள்ளது என்றால் அது மிகையல்ல.
இப்படி உலக நாடுகளையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கம், தற்போது உச்ச நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் அதன் உக்கிரம் அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில், இன்னும் எத்தனை ஆயிரம் பேரை பலி வாங்கப் போகிறதோ தெரியவில்லை.
வீழ்ச்சி தான்
இதற்கிடையில் கொரோனாவால் உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டு வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் மட்டும் மீண்டு விடுமா என்ன? நிச்சயம் அதுவும் வீழ்ச்சி காணலாம் என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. எனினும் முடிவடைந்த 2019 -2020ம் நிதியாண்டில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே படு வீழ்ச்சி கண்டுள்ளன.
இவ்வளவு இழப்பா?
இதற்கிடையில் முதலீட்டாளர்கள் பெரும் இழப்பினையே சந்தித்துள்ளனர். குறிப்பாக பிஎஸ்இ-யில் பட்டியிலிடப்பட்ட பங்குகளின் சந்தை மூலதனம் 37.59 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 113.48 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 31, 2010ல் சந்தை மூலதனம் 151.07 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி இருந்துள்ளது.
சென்செக்ஸ் படு வீழ்ச்சி
கடந்த நிதியாண்டில் மட்டும் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 9,204.42 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. அதாவது 23.80% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 3026.15 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு அல்லது 26.03% வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த மார்ச் 29, 2019 அன்று சென்செக்ஸ் 38,672 ஆக முடிவடைந்திருந்த நிலையில், மார்ச் 31,2020ல் 29,468 ஆக முடிவடைந்துள்ளது.
நிஃப்டி வீழ்ச்சி
கடந்த மார்ச் 29, 2019 அன்று நிஃப்டி 11,623 ஆக இருந்த நிலையில், மார்ச் 31, 2020ல் 8,597 ஆக முடிவடைந்துள்ளது. ஆக மார்ச் மாதத்தில் சென்செக்ஸ் 8,829 புள்ளிகள், அதாவது 23.05% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே நிஃப்டி 2,604 புள்ளிகள் அல்லது 23.24% வீழ்ச்சி கண்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் பயத்தினாலேயே மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது.
உலகளாவிய மந்த நிலை
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில், உலகப் பொருளாதாரத்தினையே மந்த நிலைக்கு தூண்டுகிறது. இந்த காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் 23.39 லட்சம் கோடி ரூபாயினை இழந்துள்ளனர். எப்படி எனினும் கடந்த நிதியாண்டில் இறுதியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே பச்சை நிறத்திலே காணப்பட்டது. அன்று சென்செக்ஸ் 1,028 புள்ளிகள் ஏற்றமும், இதே நிஃப்டி 316 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications