குஜராத் மற்றும் பிற மாநிலங்களுக்கு ஐந்து பெரிய திட்டங்களை இழந்ததற்காகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அம்மாநிலத்தில் முதலீட்டுக்கு ஏற்ற கொள்கையும் சூழ்நிலையும் இருப்பதாகவும், முதலீடுகளை ஈர்க்க பல ஊக்குவிப்புகளை வழங்க மாநில அரசு உறுதி அளித்ததாக ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் வெறும் 24 மணிநேரத்தில் சுமார் 1,30,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துச் சக மாநிலங்களை வியக்க வைத்துள்ளார்.
மத்திய அரசின் மேக் இன் இந்தியா மற்றும் PLI திட்டங்களைப் போலவே மகாராஷ்டிரா மாநிலமும் புதிய நிறுவனங்களை ஈர்க்க திட்டங்களை வகுத்துள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 70,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டங்களுக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை துணைக் குழு செவ்வாயன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் சுமார் 55000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா சுமார் 10000 கோடி ரூபாய் முதலீட்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய தொழிற்சாலையை எலக்ட்ரிக் வாகனங்களுக்காகப் பிரத்தியேகமாக அமைக்க உள்ளது. இந்த மாபெரும் தொழிற்சாலை மஹிந்திரா நிறுவனம் மகாராஷ்டிரா மாநில அரசின் தொழிற்துறை ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அமைக்க உள்ளது.
ஜெம்ஸ் & ஜூவல்லரி பூங்கா
இதோடு இந்திய புல்லியன் & ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) அமைப்பு நவி மும்பை பகுதியில் சுமார் 60,000 கோடி ரூபாய் முதலீட்டில் உலகின் மிகப்பெரிய ஜெம்ஸ் & ஜூவல்லரி பூங்காவை அமைக்க உள்ளது. இதற்கு மகாராஷ்டிரா மாநில அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
நக்சல் பகுதி
மேலும் விதர்பாவில் உள்ள கட்சிரோலி மற்றும் சந்திராபூர் போன்ற நக்சல் அச்சுறுத்தல் கொண்ட மாவட்டங்களில் 35,520 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 13 திட்டங்களும், 3 பெரிய கட்டமைப்புத் திட்டங்கள் உட்படச் செயல்படுத்த அமைச்சரவை துணைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கிரீன் டெக்னாலஜி
இதில் முக்கியமாகக் கிரீன் டெக்னாலஜி அடிப்படையிலான திட்டத்தை Newera Cleantech Solutions அமைக்க உள்ளது. சந்திராபூரில் நிலக்கரி வாயு மயமாக்கல் திட்டத்தில் கிரீன் ஹைட்ரஜன், மெத்தனால், அம்மோனியா மற்றும் யூரியா ஆகியவை அடங்கும்.
கட்சிரோலி மற்றும் சந்திராபூர்
இந்தத் திட்டங்கள் மூலம் கட்சிரோலி மற்றும் சந்திராபூர் போன்ற நக்சல் பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு உறுதி செய்யப்படும். கிரீன் எனர்ஜி பிரிவில் மட்டும் சுமார் 10000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் ஒப்புதல் அடைத்துள்ளது.
உலோகம்
லாயிட் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி லிமிடெட் நக்சல் பாதிப்புக்குள்ளான கட்சிரோலி மாவட்டத்தில் கனிமப் பிரித்தெடுத்தல் மற்றும் பதப்படுத்துதல் மூலம் எஃகு உற்பத்தித் தளத்தை நிறுவுவதற்காக 20,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை துணைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. வரத் ஃபெரோ அலாய் பிரைவேட் லிமிடெட் கட்சிரோலி மாவட்டத்தில் ரூ.1,520 கோடி முதலீடு செய்ய உள்ளது.