டாடா குழுமம் தமிழ்நாட்டை முன்வைத்துப் பல முக்கியமான திட்டங்களையும், முதலீடுகளையும் செய்து வருவது மூலம், தமிழ்நாட்டில் உருவாகும் வேலைவாய்ப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டாடா குழுமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் துவங்கியுள்ள எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் மூலம் சுமார் 45000 பேருக்கு அதிகமாக வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இந்த நிலையில் டாடா குழுமத்தின் முக்கியமான வர்த்தகப் பிரிவான வோல்டாஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
வோல்டாஸ்
வோல்டாஸ் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் பெரிய அளவிலான வர்த்தகத்தை ஈர்க்க முடியும் என்ற திட்டத்துடன் தனது முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
1000 கோடி ரூபாய் முதலீடு
வோல்டாஸ் நிறுவனம் தனது உற்பத்தி தளத்தை மேம்படுத்த 1000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாகவும், புதிதாகச் சென்னையில் ஒரு தொழிற்சாலையை அமைப்பதற்குக் கூடுதலாக 500 கோடி ரூபாய் முதலீட்டில் சீனாவின் Highly International நிறுவனத்துடன் கம்பிரசர் தொழிற்சாலையைப் புதிதாக அமைக்க முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான ஒப்புதல் மற்றும் அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற காத்திருக்கிறது.
Shanghai Highly நிறுவனம்
Highly International என்பது சீனாவின் Shanghai Highly (Group)-இன் கிளை நிறுவனமாகும், இது உலகின் மிகப்பெரிய கம்பிரசர் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. டாடா குழுமம் மற்றும் Shanghai Highly Group கூட்டணி இத்துறையில் பல நன்மைகளை அளிக்கும்.
சென்னை
வோல்டாஸ் நிறுவனம் சென்னையில் சுமார் 150 ஏக்கர் நிலத்தைத் தமிழ்நாடு அரசிடம் இருந்து பெற்றுள்ளது. இந்த இடத்தில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் Highly International உடன் கம்பிரசர் தொழிற்சாலையும், மற்றொரு 500 கோடி ரூபாய் முதலீட்டில் ஏசி தயாரிப்பு தொழிற்சாலையும் அமைக்கவும் முடிவு செய்துள்ளது.
ஏசி மற்றும் ஹோம் அப்ளையன்ஸ்
டாடா குழுமத்திற்குச் சொந்தமான வோல்டாஸ் நிறுவனம் ஏசி மற்றும் ஹோம் அப்ளையன்ஸ் பிரிவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவே இந்த முதலீடு செய்யவே இந்தப் புதிய 1500 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
டாப் 3 பிராண்டு
மேலும் ஏசி, வர்த்தகக் குளிர்பதன பிரிவில் மட்டுமே முன்னிலையில் இருக்காமல் ஹோம் அப்ளையன்ஸ் பிரிவிலும் அதிகம் விற்பனை செய்யப்படும் டாப் 3 பிராண்டுகளான உயர வேண்டும் என்ற இலக்கையும் நிர்ணயம் செய்துள்ளது.
உள்நாட்டுத் தயாரிப்பு
டாடா குழுமத்தின் வோல்டாஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகளவிலான விற்பனையைப் பதிவு செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் விலையைக் குறைக்க வேண்டும், அதற்கு அடிப்படையாக வெளிநாட்டு இறக்குமதி பொருட்களைப் பயன்படுத்தாமல் உள்நாட்டுத் தயாரிப்பில் அனைத்து பொருட்களையும் தயாரிக்க வேண்டும்.
சீன கூட்டணி
இதற்காகவே டாடா குழுமத்தின் வோல்டாஸ் நிறுவனம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வரும் கம்பிரசர்-ஐ இந்தியாவில் தயாரிக்கச் சீனாவின் Highly International நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் புதிய தொழிற்சாலை அமைக்க முடிவு செய்தது.
அண்டை நாடுகளின் முதலீடு
ஆனால் மத்திய அரசு அண்டை நாடுகளில் இருந்து வரும் முதலீடுகளைத் தடுத்து வரும் காரணத்தால் டாடா குழுமத்தின் இந்த முயற்சிக்கு அனுமதி கிடைக்காமல் உள்ளது, ஆனால் சமீபத்தில் மத்திய அரசு கூட்டணி முறையில் உருவாகும் புதிய திட்டத்திற்குச் சீன முதலீடுகளை அனுமதிக்கும் முடிவை எடுத்து வருவதாகத் தகவல் வெளியானது.
விரைவில் அனுமதி கிடைக்க வாய்ப்பு
இதனால் விரைவில் வோல்டாஸ் PLI திட்டம் மற்றும் சீன நிறுவனத்தின் கூட்டணி முதலீட்டுக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, டாடா குழுமத்தின் இக்கோரிக்கை ஒரு வருட காலமாகக் கிடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வோல்டாஸ் உற்பத்தி விரிவாக்கம்
இதைத் தொடர்ந்து வோல்டாஸ் பரோடா-வில் உள்ள தனது தொழிற்சாலையில் வணிகக் குளிர்பதனம் மற்றும் ஏசியை விரிவாக்கம் செய்ய 200 கோடி ரூபாயும், பந்த்நகரில் ரூம் ஏசிக்காக 100 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளது. அகமதாபாத் அருகே சனந்த் என்ற இடத்தில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் ஆலைக்குக் கூடுதலாக 200 கோடி ரூபாயும் முதலீடு செய்து தனது உற்பத்தியை அதிகரிக்க உள்ளது.
ஆர்செலிக் குழுமம்
வோல்டாஸ் ஐரோப்பாவின் ஆர்செலிக் (Arcelik) குழுமத்துடன் இணைந்து உறைபனி இல்லாத frost-free refrigerators, fully automatic washing machines, மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் dishwashers போன்ற வீட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை வோல்டாஸ்-ன் Beko பிராண்டின் கீழ் விற்பனை செய்கிறது.