பணம்! இந்த மூன்று எழுத்து வார்த்தையை உச்சரிக்காத உதடுகளே இல்லை. இதைத் தேடாத மனிதனே இல்லை. நீங்கள் உறங்கினாலும் நிதிச் சந்தை மட்டும் உறங்குவதே இல்லை. தான் உறங்கும் பொழுதும் தன்னிடம் உள்ள செல்லவத்தை உறங்க விடாமல் உழைக்க வைப்பவனே நிதிச் சந்தையில் வெற்றி பெற இயலும். அதுவும் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் இது மிகவும் அவசியமாகின்றது.
வங்கிகள் தங்களுடைய சேமிப்பு கணக்குளின் மீதான வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்து விட்டன. சேமிப்பு கணக்குகளின் மீதான வட்டி விகிதம் சுமார் 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்ட நிலையில், பல நிதி திட்டமிடலாளர்கள் முதலீட்டாளர்கள் அதிக வருமானதத்தைப் பெற ஒரு முக்கிய ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
அதாவது முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள திரவ நிதியை (கையில் இருக்கும் பணம் liquid funds) குறுகிய கால நிதியில் முதலீடு செய்து அதிக பயன் பெறுமாறு அறிவுறுத்துகின்றனர்.
திரவ நிதி என்றால் என்ன? எப்போது அவற்றைப் பயன்படுத்த முடியும்?
திரவப் பணம் என்பது ஒரு பரஸ்பர நிதி ஆகும். இதில் முதலீடு செய்யப்படும் தொகையானது கடனீட்டு நிதி, கடன் பத்திரங்கள், அரசாங்க பத்திரங்கள் போன்றவற்றில் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்யப்படுகின்றது.
91 நாட்கள்
அதிக பட்சமாக 91 நாட்களில் முதிர்ச்சி அடையும் இந்த நிதி திட்டங்களில் முதலீட்டாளர்கள் தங்களுடைய நிதியை முதலீடு செய்யலாம். இவ்வாறு திரட்டப்பட்ட தொகையானது நிதி நிறுவனத்தினால் மிக குறுகிய காலத்திற்கு அதாவது 1 நாள் முதல் 3 மாதங்கள் வரை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய பயன்படுத்தப்படும்.
உதாரணமாக, உங்களுடைய குழந்தையின் அடுத்த பள்ளி கட்டணத் தவணை, இரண்டு மாதங்களில் நீங்கள் செல்லத் திட்டமிட்டுள்ள விடுமுறைக்கான பணம் போன்றவற்றை நீங்கள் திரவ நிதியில் முதலீடு செய்யலாம்.
திடீர் பணம்
உங்களுக்கு எதிர்பாராமல் கிடைக்கும் திடீர் பணத்தை நீங்கள் திரவ நிதிகளில் முதலீடு செய்யலாம். அதாவது பெரிய போனஸ், ரியல் எஸ்டேட் விற்பனை மூலம் கிடைத்த பணம் போன்றவற்றை நீங்கள் இதில் முதலீடு செய்யலாம். பல பங்கு முதலீட்டாளர்கள், முறையான பரிமாற்றத் திட்டத்தை (STP) பயன்படுத்தி பங்குசார்ந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய தங்களுடைய திரவ நிதியை பயன்படுத்தி முதலீட்டை பெருக்குகின்றனர். ஏனெனில் இந்த முறையில் அதிக வருவாய் ஈட்ட முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.
எவ்வளவு வருமானத்தை எதிர்பார்க்கலாம்? இத்தகைய நிதிகளின் முதிர்வு காலம் என்ன?
முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை எப்பொழுது வேண்டுமானாலும் விலக்கி கொள்ளலாம். அவ்வாறு விலக்கிக் கொண்ட மறுதினம் முதலீட்டாளர்களின் பணம் அவருடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
திரவ நிதியைக் கையாளும் நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் நுழையும் பொழுது அல்லது வெளியேறும் பொழுது கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. நிதி நிறுவனங்களின் மதிப்பு ஆராய்ச்சி தரவுப்படி, திரவ நிதி நிறுவனங்கள் கடந்த ஆண்டு தோராயரமாக சுமார் 6.56 சதவீத வருவாய் அளித்துள்ளன.
இது பெரும்பாலான வங்கிகள் தமது சேமிப்பு கணக்கிற்கு வழங்கி வரும் சுமார் 3.5 சதவீத வட்டியை விட அதிகமாகும்.
இத்தகைய திரவ நிதிகளில் முதலீடு சார்ந்த ஆபத்து எதுவும் உள்ளதா?
திரவ நிதிகள் மிகவும் குறைந்தபட்ச அபாயங்களுக்கு உட்பட்டது. மேலும் பரஸ்பர நிதி வகைகளில் இதுவே மிகக் குறைந்த அபாயகரமானதாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் இந்த திரவ நிதி பொதுவாக உயர் கடன் மதிப்பீட்டை (P1 +) கொண்ட கருவிகளில் மட்டுமே முதலீடு செய்யப்படுகின்றது. இந்த நிதிகளின் நிகர சொத்து மதிப்பு, வட்டி வருமானத்தை பொறுத்து மாறுபடுகின்றது. வார இறுதி நாட்களில் கூட வட்டி வருவாய் கணக்கிடப்படுகின்றது.
இது கடன் நிதிகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
நிகர சொத்து மதிப்பை (என்.ஏ.வி.) பொருத்து இந்த திரவ நிதிகள் பிற வகையிலான கடன் நிதிகளை விட தனித்துவமானது. ஒரு குறிப்பிட்ட பணப் பரிவர்த்தனை நாள் அன்று மதியம் 2 மணி வரை முதலீடு செய்யும் பொழுது (2 மணிநேரத்திற்குள் செல்லத்தக்க பயன்படுத்தக்கூடிய நிதிக்கு உட்பட்டது), முதலீட்டாளருக்கு அதற்கு முந்தைய நாளின் நிகர சொத்து மதிப்பைப் பொருத்து அலகுகள் ஒதுக்கப்படும்.
முந்தைய நாட்களின் நிகர சொத்து மதிப்பு கிடைக்கும் ஒரே நிதி வகை இந்த திரவ நிதி மட்டுமே. ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனை நாளின் பொழுது முதலீட்டாளர் தன்னுடைய முதலீட்டை அன்று 3 மணி வரை திரும்பப் பெறும் பொழுது, அதே நாளின் என்.ஏ.வி. கணக்கிடப்பட்டு, முதலீட்டாளரின் தொகை அடுத்த நாள் காலையில் முதலீட்டாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.