கொரோனா அடுத்தடுத்த அலையாக உருவெடுத்து வரும் நிலையில் மக்கள் பலரும் ஏற்கனவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களது வாழ்வாதரத்தினை இழந்து தவித்து வருகின்றனர். பலரும் வேலையினை இழந்தும் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மக்கள் பலரும் சேமிப்பின் அவசியத்தினை உணர்ந்திருப்பர். ஏனெனில் இந்த நெருக்கடியான காலகட்டங்களில் பலருக்கு உதவியது அவர்களின் சேமிப்பே. கையில் இருக்கும் கொஞ்சம் பணம், நகைகளை வைத்தும் காலத்தினை கடத்தினர் எனலாம்.
ஆனால் இதுபோன்ற நெருக்கடியான நிலை என்பது உங்களது வருங்காலத்தில் வர வேண்டுமா என்ன? நிச்சயம் யாருக்கும் இந்த ஆசை இருக்காது. ஆனால் அப்படி பிரச்சனைகளை சந்திக்க கூடாது எனில் இப்போதிலிருந்தே உங்களது வேலையினை தொடங்குங்கள்.
முதலீடு அவசியம்
பணம் சம்பாதிக்கிறோம். சேமிக்கவும் செய்கிறோம். ஆனால் முதலீடு இல்லையே என்பவர்களும் இந்த லிஸ்டில் உண்டு. இதனால் எந்த பலனும் உங்களுக்கு இல்லை. நீங்கள் அடைய நினைக்கும் இலக்கினை தொட, கனவுகளை நிறைவேற்ற உங்களுக்கு முதலீடு மட்டுமே கைகொடுக்கும். ஆக அதனை அடைய நீங்கள் இப்போதிலிருந்தே முதலீடு செய்ய ஆரம்பியுங்கள்.
பாதுகாப்பாக முதலீடு செய்யுங்கள்
சிலர் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தினை ஏதேனும் ஒன்றில், யாரோ சொன்னார்கள் என முதலீடு செய்து விடுவர். அது பிறகு முதலீட்டுக்கே பங்கமாக அமையும். ஆக உங்களது இலக்கிற்கு ஏற்ப பாதுகாப்பான முதலீட்டினை, பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம். அதுவும் உங்களது வயதிற்கு ஏற்ப உங்களது முதலீட்டு திட்டத்தினையும், முதலீட்டினையும் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
எதில் முதலீடு செய்யலாம்?
நிபுணர்கள் பொதுவாக உங்களது முதலீட்டினை குறைந்த வயதில் இருந்தே முதலீடு செய்ய திட்டமிடுங்கள். இது ஓய்வூகாலத்தில் மிகப்பெரிய அளவில் கார்ப்பஸினை உருவாக்க பயன்படும். அதுவும் மியூச்சுவல் ஃபண்டுகளில், எஸ் ஐ பி மூலமாக முதலீடு செய்யலாம் என பரிந்துரைக்கின்றனர். இது உங்களை பிற்காலத்தில் கோடீஸ்வரராக மாற்றும்.
இலக்கிற்கு ஏற்ப திட்டம்
உங்கள் வாழ்க்கையில் பல வகையான இலக்குகள் இருக்கலாம். சொந்த வீடு, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, திருமணம், ஓய்வூகாலத்திற்கு சிறப்பான சேமிப்பு இப்படி பல கட்டங்களில் உங்களுக்கு நிதி தேவைப்படும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வேண்டும். சொகுசு கார் வாங்க வேண்டும் என பல கனவுகள் இருக்கும். ஆக அவரவரின் தேவைக்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை தேர்தெடுக்கலாம்.
லாபம் எவ்வளவு?
உதாரணத்திற்கு 25 வயதான பாலு என்பவர், SIP மூலமாக முதலீடு செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு 167 ரூபாய் முதலீட்டினை, மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி மூலமாக முதலீடு செய்கிறார். அவரது ஓய்வுகாலத்தில் அதாவது 60 வயதில் அவரின் கார்ப்பஸ் தொகை சுமார் 11.33 கோடி ரூபாய் வரை பெற முடியும். அதேபோல வருடத்திற்கு உங்களது முதலீட்டினை 10% அதிகரிக்கலாம். லாப விகிதம் சுமார் 14% என வைத்துக் கொள்ளலாம்.
முதலீட்டு காலம் எவ்வளவு?
பாலு மாதம் சுமார் 5000 ரூபாயினை முதலீடு செய்கிறார். அவரின் லாப விகிதம் சுமார் 14% கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். வருடத்திற்கு வருடம் 10% SIP முதலீட்டினை அதிகரிக்கிறார். அவரது முதலீட்டு காலம் 35 வருடம் ஆகும். மொத்த முதலீடு 1.62 கோடி ரூபாயாகும். மொத்த வருவாய் 9.70 கோடி ரூபாயாகும். முதிர்வு காலத்திற்கு பிறகு அவருக்கு கிடைக்கும் தொகை 11.33 கோடி ரூபாயாகும்.
கோடீஸ்வர் ஆக நல்ல வாய்ப்பு
மியூச்சுவல் ஃபண்டுகளில் வருடத்திற்கு சராசரியாக 12 - 16% லாபம் கிடைக்கின்றது. ஆக இந்த லாப விகிதங்களுக்கும், உங்களது முதலீட்டு அதிகரிப்புக்கும் ஏற்ப உங்களது கார்ப்பஸில் மாற்றம் இருக்கலாம். ஆக இதன் மூலம் நீங்கள் உங்கள் ஓய்வுகாலத்தில் கோடீஸ்வரராக வாழ இது கைகொடுக்கும். எனினும் உங்களது முதலீடுகளை எக்காரணத்தினை கொண்டும் இடையில் நிறுத்தக்கூடாது.


Click it and Unblock the Notifications