சிறு சேமிப்பு திட்டங்கள் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான். அதிலும் குறிப்பாக தொடர் வைப்பு நிதி திட்டம் தான்.
இந்த திட்டம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயிலும் வழங்கப்படுகிறது.
இந்தத் தொடர் வைப்புநிதி கணக்குகளில் தனிநபர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பணம் செலுத்தி வர வேண்டும். அதெல்லாம் சரி இந்த திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் எவ்வளவு? அஞ்சல் அலுவலகம் அல்லது எஸ்பிஐ வங்கி எது சிறந்தது. வாருங்கள் பார்க்கலாம்.
போஸ்ட் ஆபிஸ் Vs எஸ்பிஐ தொடர் வைப்பு நிதி
பிக்ஸட் டெபாசிட்டினை போலவே இதிலும் பணம் முடக்கப்படும். இதன் மூலம் சேமிப்பு பழக்கமும் வளரும். இந்தியாவில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்திய அஞ்சல் துறை ஆகிய இரண்டும் சேமிப்பு அல்லது தொடர் வைப்புநிதி கணக்குகளைத் துவங்க மிகவும் பிரபலமான வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றன.
என்னென்ன ஆவணங்கள்?
எஸ்பிஐ அல்லது இந்திய அஞ்சலில் தொடர் வைப்புநிதி கணக்கை தொடங்க கேஒய்சி (Know your customer) தேவைகளைப் பூர்த்திச் செய்யும் விதமாக தனிநபர் மற்றும் இருப்பிட ஆதாரங்களை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை போன்ற ஆவணங்களுடன், உங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் தேவைப்படும்.
எஸ்பிஐயில் வங்கிக் கணக்கு அவசியம்
நீங்கள் ஏற்கனவே எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் எனில், இணையவழி வங்கிச்சேவையின் மூலம், எளிதில் இந்த தொடர் வைப்புநிதி கணக்கினை தொடங்கலாம். ஆக எஸ்பிஐயில் இந்த தொடர் வைப்புநிதி கணக்கை தொடங்க சேமிப்பு/நடப்பு கணக்கு அவசியம். எந்தவொரு தனிநபரும் இந்த இரண்டிலும் தொடர் வைப்புநிதி கணக்கை தொடங்கிக் கொள்ளலாம்.
யார் வேண்டுமானலும் தொடங்கலாம்?
தபால் நிலையங்களில் குழந்தைகளின் பெயரில் கூடத் தொடர் வைப்புநிதி கணக்கை துவங்கலாம். குறிப்பாக 10 வயது குழந்தைகள் தங்கள் கணக்குகளைத் தாங்களே பராமரிக்கலாம். எஸ்பிஐ வங்கியை பொறுத்த வரை இரண்டு வித தொடர் வைப்புநிதி கணக்குகளை வழங்குகிறது. ஒன்று வழக்கமானது. மற்றொன்று விடுமுறை காலச் சேமிப்புக் கணக்குகள்.
எத்தனை ஆண்டுகாலம்
வங்கியில் தொடர் வைப்புநிதி கணக்கானது பிக்ஸட் டெபாசிட் காலத்தினை போலவே இருக்கும். இத்திட்டத்தின் கால அளவு ஒரு ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகளாக இருக்கலாம். மேலும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ 5,000 லிருந்து அதிகபட்சமாக ரூ50,000 வரை முதலீடு செய்யலாம். இதுவே அஞ்சல் அலுவலகங்களில் 5 ஆண்டுக்காலத் தொடர் வைப்புநிதி கணக்குகளை தொடங்கிக் கொள்ள முடியும்.
அதிகபட்ச முதலீடு
இந்த இரண்டு கணக்குகளிலுமே அதிகபட்ச முதலீடு என்பது நிர்ணயிக்கப்படவில்லை. எஸ்பிஐ வங்கி வழங்கும் தொடர் வைப்புநிதியின் கால அளவு குறைந்தபட்சம் 12 மாதங்களும் அதிகபட்சமாக 120 மாதங்களாக இருக்கலாம். தபால் நிலையங்களைப் பொறுத்தமட்டில், 5 ஆண்டுத் தொடர் வைப்புநிதி கணக்குகள் மட்டுமே உள்ளன. எஸ்பிஐயில் பகுதி வைப்புநிதியை திரும்பப் பெற முடியாது. தபால் நிலையங்களில் குறைந்தபட்சம் ஓராண்டு கடந்த பின்னர் 50% தொகையைத் திரும்பப் பெறமுடியும்.
அபராதம் உண்டு
அதோடு உங்களது மாதாந்திர வைப்புநிதியை செலுத்த தவறும் போது அதற்குக் அபராதம் விதிக்கப்படும். அஞ்சலக வட்டி விதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கப்படும். வங்கிகளுடன் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, அஞ்சலகங்களில் வட்டி விகிதங்கள் சிறப்பாக உள்ளன. இவை 5 ஆண்டுகாலக் கணக்கிற்கு 5.8% வட்டி தருகிறது.
எவ்வளவு வட்டி விகிதம்?
இதே எஸ்பிஐ-யில் 1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் வட்டி விகிதம் 4.9% ஆகும். இதே 2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் 5.1% ஆகும். இதே 3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் 5.3% ஆகும். இதே 5 வருடம் முதல் 10 வருடத்திற்கு வட்டி விகிதம் 5.4% ஆகும். அஞ்சலகங்களில் வட்டி விகிதங்கள் சிறப்பாக உள்ளன. இதே அஞ்சலகத்தில் 5 ஆண்டுகாலக் கணக்கிற்கு 5.8% வட்டி தருகிறது. ஆக மொத்தத்தில் வட்டி விகிதம் என பார்க்கும் போது அஞ்சலகத்தில் தான் அதிகம். ஆக உங்களுக்கு எது பொருந்துகிறதோ? அதனை தேர்தெடுத்து சேமிக்க தொடங்கலாம்.