அமெரிக்கா அதிபரான டொனால்டு டிரம்ப் அடுத்தச் சில நாட்களில் அதிபர் பதவியில் விலக இருக்கும் நிலையில், சீன ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாகக் காரணம் கூறி 3 சீன டெலிகாம் நிறுவனங்களில் முதலீட்டுச் செய்யத் தடை விதித்துள்ளது மட்டும் அல்லாமல் இந்நிறுவனங்களை அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா அதிபரான டொனால்டு டிரம்ப் அடுத்தச் சில நாட்களில் அதிபர் பதவியில் விலக இருக்கும் நிலையில், சீன ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாகக் காரணம் கூறி 3 சீன டெலிகாம் நிறுவனங்களில் முதலீடு செய்யத் தடை விதித்துள்ளது மட்டும் அல்லாமல் இந்நிறுவனங்களை அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்.
டொனால்டு டிரம்ப் அரசு
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு 2019 துவக்கத்தில் இருந்தே சீனா மீதும், சீன நிறுவனங்கள் மீதும் அதிகளவிலான வர்த்தகக் கட்டுப்பாடுகள், வரி விதிப்பு விதித்து வரும் நிலையில் 2019 முடிவில் வர்த்தகப் போர் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் தணிந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டது.
டிரம்ப் குற்றச்சாட்டு
இதனால் 2020ஆம் ஆண்டில் கொரோனா பரவச் சீனா தான் முக்கியக் காரணம் எனத் தொடர்ந்து குற்றம்சாட்டினார் டொனால்டு டிரம்ப். இதோடு அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்கள் மீது வர்த்தகத் தடை விதித்தது டிரம்ப் அரசு. இதனால் டிக்டாக் உட்பட 100க்கும் அதிகமான சீன நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
புதிய கட்டுப்பாடு
மேலும் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யவோ, முதலீட்டை ஈர்க்க விரும்பினால் நிறுவனப் பங்குகளை அமெரிக்க அரசு அமைப்பு ஆய்வு செய்த பின்பு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பே முதலீட்டை ஈர்க்க முடியும் என்ற புதிய சட்டதிட்டத்தைக் கொண்டு வந்தது. இப்புதிய சட்டதிட்டத்தால் சீன நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் பங்குச்சந்தை
இதற்கிடையில் தற்போது அமெரிக்காவில் நியூயார்க் பங்குச்சந்தையில் இருக்கும் சைனா மொபைல் கம்யூனிகேஷன்ஸ், சைனா டெலிகாம்யூனிகேஷன்ஸ் கார்ப் மற்றும் சைனா யூனிகாம் (ஹாங்காங்) ஆகிய 3 நிறுவனங்களை அடுத்த ஒரு வாரத்தில் பங்குச்சந்தையை விட்டு முழுமையாக வெளியேற்றப்பட உள்ளதாக நியூயார்க் பங்குச்சந்தை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
31 சீன நிறுவனங்கள்
அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் சுமார் 31 சீன நிறுவனங்களைக் குறிப்பிட்டு, இந்நிறுவனங்கள் அமெரிக்க முதலீட்டுச் சந்தையை முறையற்ற வகையில் பயன்படுத்துவது மட்டும் அல்லாமல் அந்த முதலீட்டைச் சீன ராணுவத்திற்கும், உளவுத்துறைக்குப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
இதன் மூலம் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஆயுதத்தைத் தயாரிக்கவும், அதைக் கொண்டு தாக்கவும் முடியும் எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கர்களுக்குத் தடை
இதோடு இந்த 31 சீன நிறுவனங்களில் எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும், தனிநபரும் முதலீட்டு செய்யவோ, பங்குகளைக் கைப்பற்றக் கூடாது என்றும் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.