செயலாற்றாமல் இருப்பது நல்லதா? கெட்டதா? இதென்ன நாயகன் பட வசனம் போல் இருக்கின்றதே என யோசிக்காதீர்கள். இன்றைய நிதிச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டுக்கு பின்னர் செயலாற்றாமல் (எவ்விதமான மாற்றமும் இல்லாமல்) இருக்கலாமா? என்கிற மிக முக்கியமான விவாதம் நடைபெற்று வருகின்றது.
வடிவேலு பட காமெடிக் காட்சி போல் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என கேள்வி கேட்காதீர்கள். அதற்கு முன் இந்தக் கட்டுரையை முழுமையாக படித்து முடித்து விடுங்கள்.
முதலீட்டு மூலோபாயம்
முதலீட்டு ஆலோசகர்கள் மத்தியில் ஒரு முதலீட்டாளர் தன்னுடைய முதலீட்டுக்கு பின்னர் செயலாற்றாமல் இருப்பதே ஒரு நல்ல முதலீட்டு மூலோபாயமாக (strategy) கருதப்படுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் பிடிலிட்டி முதலீட்டு நிறுவனம் எத்தகைய முதலீட்டாளுருக்கு அதிக வருமானம் கிடைக்கின்றது எனத் தெரிந்து கொள்ள ஒரு ஆய்வு நடத்தியது.
அதிக வருமானம்
தான் செய்த முதலீட்டை பல ஆண்டுகளுக்கு மறந்து விட்ட அல்லது சில பல தசாப்தங்களுக்கு மறந்து விட்ட முதலீட்டாளர்களே மிக உயர்ந்த வருமானத்தை நிதிச் சந்தையில் இருந்து பெற்றனர் என அந்த ஆய்வு முடிவு தெரிவித்தது.
அது மட்டுமல்ல, இந்த முதலீட்டாளர்களின் ஒரு பிரிவினர் நீண்ட காலத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவித்தது. எனவே, உங்கள் முதலீட்டுப் பிரிவுகளை நிர்வகிப்பதைப் பொறுத்தவரை, இறந்தவர் என்ன செய்வாரோ அதாவது ஒரு செயலும் செய்யாமல் இருப்பது ஒன்றே மிகவும் இலாபகரமான மூலோபாயம் ஆகும். இது ஒன்றும் ப்ரம்ம ரகசியம் அல்ல. மிகவும் எளிதான மற்றும் மிகச் சிறந்த உபாயம் இது மட்டுமே.
முதலீடு
இந்தியாவில் இதை நிருபிக்கும் வகையில் பல்வேறு கதைகள் உள்ளன. ஒரு சில நாட்களுக்கு முன்பு, ஒரு முதலீட்டாளர் அழைப்பு நிகழ்ச்சி, ஒரு பங்கு சந்தை சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி எனக்கு பிடிலிட்டி நிறுவன ஆய்வை நினைவூட்டியது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், அந்த அழைப்பாளரின் மாமா எம் ஆர் ஏப் நிறுவனத்தின் 20,000 பங்குகளை வாங்கியிருப்பதாக கூறினார். அந்த பங்குகளுக்கு தற்பொழுது ஏதேனும் மதிப்புள்ளதா என்று அவர் தெரிந்து கொள்ள விரும்பினார். அவர் தெரிவித்த கதை உண்மையாக இருந்தால், அந்த பங்குகள் ரூ 130 கோடி மதிப்புள்ளதாக இருக்கலாம். பங்குகளின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாக கருதினாலும், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளரின் முதலீடானது இந்த காலகட்டத்தில் (25 ஆண்டு கால இடைவெளியில்) சுமார் 200 மடங்குக்கு மேல் கண்டிப்பாக அதிகரித்திருக்கும்.
நான் நீண்ட கால முதலீட்டிற்கு ஆதரவாக செயல்படும் ஒரு சமூக ஊடக குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். இருப்பினும், நீண்ட காலம் என்பதற்கு என்ன அர்த்தம் என்பது பற்றி குழுவிற்குள்ளேயே ஒரு கருத்து மோதல் நடைபெறுகின்றது. குழு உறுப்பினர்களின் கருத்துகள் பரவலாக வேறுபடுகின்றன.
நீண்ட கால முதலீடு
தினசரி வர்த்தகத்தை தவிர்த்து ஆறு முதல் ஏழு மாதங்கள் வரையிலான முதலீட்டை நீண்ட கால முதலீடு என அழைக்கலாம் என குழு உறுப்பினர் தெரிவிக்கின்றனர்.
ஒரு நீண்ட கால முதலீடு என்றால் என்ன? அது எவ்வளவு காலம் நீடிக்கும்?
இந்தக் கேள்விகளுக்கு இந்திய அரசாங்கத்தின் வருவாய் துறையிலிருந்து ஒரு அதிகாரப்பூர்வ பதில் இருக்கிறது. உங்களுடைய வரியை கணக்கிடும் நோக்கத்திற்காக, நீங்கள் பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள் ஆகியவற்றில் செய்த முதலீட்டு காலம் ஒரு வருடத்திற்கு அதிகமாக இருந்தால் அது ஒரு நீண்ட கால முதலீடாக கருதப்படும். அதே சமயத்தில் மற்ற முதலீடுகளுக்கு, இந்தக் கால வரம்பு மூன்று ஆண்டுகள் ஆகும். இது இந்திய வரி விதிப்பு சட்டமாக இருக்கலாம். ஆனால் அதிக வருமான தரும் முதலீடு என வரும் பொழுது இந்தக் கால வரம்பு அதற்கு பொருந்தாது. ஒரு வருடம் என்பது ஒரு குறுகிய காலம் ஆகும்.
நீண்ட் கால முதலீட்டின் கால வரம்பு எவ்வுளவு?
இதற்கான பதில் பெற, அடிப்படைகளை நன்கு தெரிந்து கொண்டு மீண்டும் மிக முக்கியமான கேள்வியை கேட்க வேண்டும்: நீண்ட காலத்திற்கு மட்டுமே ஏன் பங்குகளில் முதலீடு செய்யப்பட வேண்டும்? பதில், நிச்சயமாக, ஏற்றத்தாழ்வு இருக்கும். தற்போது, BSE சென்செக்ஸின் ஐந்து வருட வருவாய் வருடத்திற்கு தோராயரமான 12.77%, அல்லது ஒட்டுமொத்தமாக 79% ஆக உள்ளது.
வருவாய்
எது எவ்வாறாயினும், ஐந்து வருட காலத்தை ஒவ்வொரு வருடமாக அலசி ஆராய்ந்தால், இதன் வருவாய் முறையே 9%, 41.8%, -8.9%, 16.2% மற்றும் 9.5% ஆக உள்ளது. இது நீண்ட காலமாக வழங்கப்பட்டுவரும் நீண்ட கால முதலீட்டிற்கு ஆதரவாக உள்ள ஒரு சக்திவாய்ந்த வாதம் ஆகும். வருமானம் பெரியது, ஆனால் மாறுபாடு அதிகமாக உள்ளது. எந்த குறிப்பிட்ட குறுகிய காலத்தை எடுத்துக் கொண்டாலும். உங்களுக்கு வருவாய் இழப்பு அல்லது நஷ்டம் ஏற்படலாம். இவை அனைத்தும் நீண்ட கால அளவில் மட்டுமே ஈடு செய்யப்படுகின்றன.
சக்கரம்
பங்குச் சந்தைகள் சுழற்சிகளில் நகரும் ஒரு சக்கரம் போன்றது. இது ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் ஒரு முழு சுழற்சியை சந்திக்கின்றது. இதன் சுழற்சி சக்கரத்தில் ஒரு உட்சபட்ச உயர்வு, அதன் பின் சறுக்கல் அதன் பின்னர் நிலைபெறுதல் போன்றவை ஏற்படுகின்றது.
எனவே உங்களுக்கு சரியான அளவு வருவாய் வேண்டுமெனில் நீங்கள் ஒரு முழு சுழற்சி முழுவதும் முதலீடு செய்ய வேண்டும். அது ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் கண்டிப்பாக நடக்காது.
பதில்
இதிலிருந்து உங்களுக்கான பதில்: பங்கு முதலீட்டில், 'நீண்ட காலம்' என்பது ஒரு தெளிவான வார்த்தை ஆகும். எனினும் வல்லுனர்கள் தங்களுடைய விருப்பத்தின் படி காலத்தை வரையறுக்க முடியும். முடிவாக அது ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல். அவ்வுளவு தான்.