பொதுவாக பென்னி பங்குகள் என்றால் ரிஸ்கான பங்குகள். அதனை வாங்கி வைப்பது ரிஸ்கானது என கூறுவார்கள். இந்தியாவில் பொதுவாக 10 ரூபாய்க்கு கீழாக உள்ள பங்குகளை பென்னி பங்குகள் என கூறுவார்கள்.
இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் பங்கு விலை மிக குறைவாக இருக்கும். இதில் குறைவான முதலீடு செய்தாலே போதும். ஆக இந்த பென்னி பங்குகள் குறைவான விலையில் வாங்குவதால் விரைவில் லாபகரமானதாக இருக்கும். பங்கு விலையானது மிகச் சிறிய அளவில் மாற்றம் காண்டால் கூட, அது மிகப்பெரிய லாபமாகவும் இருக்கும்.
ஆனால் அதேசமயம் ரிஸ்கானதும் கூட. ஏனெனில் எதற்காக இந்த நிறுவனம் இந்த அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரியாவிட்டால், உங்கள் முதலீட்டுக்கு பெரும் பங்கம் தான் ஏற்படும்.
ஏன் பென்னி பங்காக உள்ளது?
ஏனெனில் நிறுவனத்தின் செயல்பாடானது சிறப்பாக இல்லை எனில் அதன் பங்கு விலையானது சரிவினைக் கண்டு இருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக சரிவினைக் கண்டிருக்கலாம். ஆக பென்னி பங்கினை தேர்ந்தெடுக்கும் முன்பு அதனை கவனத்தில் கொள்வது நல்லது. ஆக இதுபோன்ற பென்னி பங்குகளை தேர்வு செய்யும்போது நிறுவனத்தினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். நிறுவனம் என்ன செய்கிறது. என்ன பொருளை உற்பத்தி செய்கிறது. இதன் தேவை எப்படியுள்ளது உள்ளிட்ட காரணிகளையும் கவனியுங்கள்.
நோமுரா சிங்கப்பூர் முதலீடு
குளோபல் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் குழுமத்தினை சேர்ந்த நோமுரா சிங்கப்பூர் லிமிடெட், வீரம் செக்யூரிட்டீஸ் (Veeram Securities Ltd) நிறுவனத்தின் பங்கினை வாங்கியுள்ளது.
தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது இருப்பினை கொண்டுள்ள இந்த நிதி நிறுவனம், 1,50,000 பங்குகளைத் வாங்கியுள்ளது.
ரோசனன்ஸ் நிறுவனமும் முதலீடு
இதே போல ரெசோனன்ஸ் ஆப்பர்சூனிட்டீஸ் (Resonance Opportunities Fund Mauritius) 1,03,000 பங்குகளையும் வாங்கி வைத்துள்ளது. இப்பங்கு விலையானது கடந்த 1 ஆண்டில் 120% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ள பென்னி பங்குகளில் ஒன்றாகும்.
1 மாதத்தில் எவ்வளவு ஏற்றம்?
வீரம் செக்யூரிட்டீஸ் லிமிடெட், வங்கி அல்லாத நிதி நிறுவனமாக மாற்றுவதற்கான, அதன் திட்டத்தினை பற்றி பங்கு சந்தைகளுக்கு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்திய பங்கு சந்தையில் உள்ள மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றாக உள்ள வீரம் செக்யூரிட்டீஸ், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 15.80 ரூபாயில் இருந்து, 22.85 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
செபியிடம் விளக்கம்
இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 45% ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து செபி நிறுவன வாரியத்திடம் விளக்கம் கோரிய நிலையில், இது குறித்த விளக்கமளித்துள்ள நிறுவனம் விதிமுறைகள் 2015,30வது விதியின் படி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுவனம் எடுத்துள்ளது. இந்த பங்கின் ஏற்றத்திற்கு காரணம் முற்றிலும் சந்தை உந்துதலே என தெரிவித்துள்ளது.
தற்போதைய பங்கு நிலவரம்?
பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது (3 மணி நிலவரப்படி) 4.81% அதிகரித்து, 23.95 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 23.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 23 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 36.64 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 9.60 ரூபாயாகவும் உள்ளது.