ஒரு காலத்தில் அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையிலான பஞ்சாயத்துக்களை, நாம் எப்படி சீரியஸாக பேசிக் கொண்டு இருந்தோமோ, அப்படி இன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பஞ்சாயத்துக்களை உலக பத்திரிகைகளே சீரியஸாகப் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தியாவும், சீனாவும் அடுத்த சில தசாப்தங்களில் உலகின் டாப் பொருளாதாரங்களாக வலம் வரும் அளவுக்கு சக்தி உள்ள நாடுகள்.
போதாக்குறைக்கு டெக்னாலஜி உலகில் அசைக்க முடியாத முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றன. இப்படி இருக்கும் போது இந்தியாவும் சீனாவும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இருந்தால் உலகம் உற்று நோக்கத் தானே செய்யும்..? அதான் நடந்து கொண்டு இருக்கிறது.
20 ராணுவ வீரர்கள் வீர மரணம்
கடந்த ஜூன் 2020-ல், கல்வான் பள்ளத்தக்கு பகுதியில், சீனாவின் தாக்குதலால், இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இந்த பஞ்சாயத்துக்குப் பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு எடுத்தது. உதாரணமாக நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை சீனாவுக்கு கொடுக்கமாட்டோம் என்றது.
சீனாவுக்கு செக்
அவ்வளவு ஏன், சீனாவின் முக்கியமான 59 செயலிகளுக்கு தடை வித்தது, ரயில்வேஸில் சீனர்களுக்கு கொடுத்த சில ஒப்பந்தங்களை ரத்து செய்தது. சோலார் மின் சாதங்கள் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க பரிந்துரை செய்து இருக்கிறது... என பலவற்றைச் சொல்லலாம். தற்போது மீண்டும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு சிக்கல் எழுந்து இருக்கிறது.
சீன முதலீடுகள்
இந்தியா சீனா போர் பதற்றப் பிரச்சனைகள் வருவதற்கு முன்பே, ஏப்ரல் 2020 மாத வாக்கில், இந்தியா உடன் எல்லைப் பகுதிகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள், இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் இந்திய மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என ஒரு புதிய விதியைக் கொண்டு வந்தது. இந்த விதி தான் தற்போது ஒரு சிக்கலாக உருவாகி இருக்கிறது.
வாசலில் 200 முதலீடுகள்
இந்த விதியைக் கொண்டு வந்த பின், சீனாவில் இருந்து இந்தியாவில் முதலீடு செய்ய சுமாராக 200 முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் குவிந்து இருக்கிறதாம். இதுவரை எந்த ஒரு முதலீட்டுத் திட்டத்துக்கும் அனுமதி கொடுக்கவில்லை என ஒரு அரசு உயர் அதிகாரி இந்து பத்திரிகையிடம் சொல்லி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பின் வாங்கலாம்
பல மாத காலமாக சீன முதலீடுகள், இந்தியாவுக்குள் வர அனுமதி கேட்டு காத்துக் கொண்டு இருக்கிறார்களாம். இதில் பல விண்ணப்பங்கள், கால தாமதம் ஆவதாலும், கடுமையான சட்ட திட்டங்கள் இருப்பதாலும் பின் வாங்க, நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த மூத்த அரசு அதிகாரியே சொல்லி இருக்கிறாராம்.
வர்த்தகப் பங்காளி
கடந்த 10 ஜூலை 2020 அன்று, சீன தூதர் சன் வெய்டோங் (Sun Weidong) "கடந்த பல ஆண்டுகளாக, சீனா, இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்து வருகிறது. அதோடு இதுவரை சுமாராக 8 பில்லியன் டாலர் முதலீடும் செய்து இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறார். ஆக சீன முதலீடுகளுக்கு, இந்தியா அனுமதி கொடுக்காதது, சீனாவுக்கு எங்கோ ஒரு ஓரத்திலாவது உறுத்துவதாகத் தான் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.
சீன ஆதிக்கம்
ஏற்கனவே இந்தியாவின் பல முன்னணி ஸ்டார்ட் அப் கம்பெனிகளில், சீன கம்பெனிகளின் முதலீடுகள் அதிகமாக இருக்கின்றன. பேடிஎம், பாலிசி பசார், ட்ரீம் 11, சொமேட்டோ, பிக் பாஸ்கெட், ஹைக் போன்ற பல முக்கிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் சீனர்கள் தான் லீட் இன்வெஸ்டார்களாக இருக்கிறார்கள். இது போல ஓலா, ஸ்விக்கி, பைஜூ போன்ற முன்னணி கம்பெனிகளிலும் முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள்.