சீனாவை ஒட்டியுள்ள லடாக் எல்லையில் இந்தியப் பகுதிக்குள் சாலை அமைக்கும் பணி கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்றும், அங்கிருந்து இந்திய ராணுவப் படை வெளியேற வேண்டும் என்றும் கூறியது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்குள் சீன ராணுவப் படையினர் அத்துமீறி நுழைய முயன்றனர். ஆக இதனையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, இந்தியா மற்றும் சீன போன்ற நாடுகள் ராணுவ வீரர்களை அங்கு குவித்ததால் இந்திய சீன எல்லைப் பகுதியில் பதற்றம் உருவாகியது. இதனிடையே இரு தரப்பைச் சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதிகரிக்கும் சைபர் தாக்குதல்
ஆனால் தற்போது நேரிடையாக தாக்கம் இல்லாவிட்டாலும், சீனாவிலிருந்து இந்தியா நோக்கி சைபர் தாக்குதல்கள் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள ஹேக்கர்கள் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள், அமைச்சகங்கள், பெரிய வணிகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களை குறி வைத்து வருகின்றனவாம்.
இந்திய சொத்துக்களை ஹேக் செய்ய ஆர்வம்
சைபர் புலனாய்வு நிறுவனமான சைஃபிர்மாவைப் பொறுத்த வரை, இந்திய சொத்துக்களை ஹேக் செய்ய ஆர்வத்தினை வெளிப்படுத்தும் வகையில் உரையாடல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து 200 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹேக்கர்கள் தீவிரம்
இவ்வாறு சீனா ஹேக்கர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது இந்தியா தான் என்கிறது பிசினஸ் டுடேவில் வெளியான செய்தி ஒன்று. அதிலும் லடாக் எல்லையில் தொடங்கிய பிரச்சனை முதல் கொண்டு, இந்த ஹேக்கர்கள் மிக தீவிரமாக செயல்படுவதையும் காண முடிகிறது.
மேற்கண்ட நாடுகள் இலக்கு
பொதுவாக அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியவை சீனா ஹேக்கர்களீன் பிரதான இலக்குகளாகும். ஆனால் கடந்த ஆறு நாட்களாக சீன ஹேக்கர்கள் இந்தியா சொத்துகளை அடையாளம் கண்டு அவற்றை பின்பற்றி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகளை வெளியேற்ற முயற்சி
மேலும் சீன தாக்குதல்களின் தன்மை அதிநவீனமானது. உதாரணமாக ஹேக்கர்கள் முன்பே நிறுவனங்களின் வலைதளங்களை செயலிழக்கச் செய்திருந்தால், அவர்கள் இப்போது தேசிய பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும் சேவையகங்களிருந்து தரவுகளை வெளியேற்ற முயற்சிக்கின்றனர். உதாரணத்திற்கு எஸ்பிஐ, ஏர் இந்தியா, நியூக்ளியர் பவர், பவர் கார்ப்பரேஷன் உள்ளிட்டவற்றிலிருந்து முக்கியமான தரவுகள் கசிந்தால் என்ன ஆகும்.
இவர்கள் எல்லாம் இலக்கு
அதனை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஆனால் அவைகள் எல்லாம் தற்போது சீன ஹேக்கர்களின் இலக்குகளாக இருக்கின்றன என்கிறார் ரித்தேஷ். மேலும் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஏர் இந்தியா, எல் ஐ சி, நியூக்ளியர் பவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் ஜியோ, அமுல், கார்பன் மொபைல்கள், ஹீரோ மோட்டோ கார்ப், டாபர், செயில், விப்ரோ மற்றும் இன்னும் பல நிறுவனங்கள் அவர்களின் இலக்குகளாக உள்ளன.
இதற்கெல்லாம் குறி
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சைபிர்மா, கடந்த வாரம் வரை தாக்குதல் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாகவும், ஒரு சில நிறுவனங்களைச் சுற்றி குவிந்ததாகவும் குறிப்பிட்டது. ஆனால் ஜூன் 23 முதல் 6 நாட்களில் தாக்குதல்கள் பல வகையான நிறுவனங்களை உள்ளடக்கியது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள், வெளியுறவுத் துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், தகவல் மற்றூம் ஒளிப்பரப்பு அமைச்சகங்களையும் ஹேக்கர்கள் குறி வைத்துள்ளனர்.
பெரும் வளர்ச்சி
மேலும் அடுத்து வரும் நாட்களிலும் தாக்குதல் தீவிரமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சீனா அரசால் ஸ்பான்சர் செய்யப்பட்ட ஹேக்கிங் குழுக்கள் உலகின் மிகப்பெரிய ஹேக்கர்களாகும். இவை 1990களில் உருவாக்கப்பட்டவை. இது தற்போது பல ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சி கண்டு பெரிதாகிவிட்டன. இந்த குழுக்கள் உளவுத் துறை செயல்பாட்டாளர்களால் ஆனவை. ஆக அவற்றிலிருந்து விலகி இருக்கவும், தக்க நிபுணர்களின் ஆலோசனையை பெறவும் இந்த நிறுவனம் பரிந்துரைக்கிறது.