
அரசின் விமான சேவையான ஏர் இந்தியாவும் சரி தனியார் விமான சேவைகளும் சரி கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. குறிப்பாக கிங்பிஷனர் நிறுவனம் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விமான சேவை துறையில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்ய இருந்தது. ஆனால் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அம்முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திய விமான சேவை வழங்கும் நிறுவனங்களின் 49 விழுக்காடு பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்க ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இப்படி அனுமதி அளித்தாலும் வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் நேரடி அன்னிய முதலீடு செய்ய அனுமதிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
இப்படி நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கு ஒப்புதல் கொடுக்கப்படும் நிலையில் கிங்பிஷர் நிறுவனம் அல்லது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இரண்டில் எது முதலில் பயனடையும்? என்ற எதிர்ப்பார்ப்பும் தொழில்துறை வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது.
தற்போதும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தால் அவரை சமாதானப்படுத்தியே தீருவது என்ற முயற்சியில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் இருக்கிறார்.
வெல்லப் போவது மத்திய அரசா? திரிணாமுல் காங்கிரஸா?


Click it and Unblock the Notifications