டெல்லி: நாட்டில் உள்ள திருச்சி, கோவை, மங்களூர், லக்னோ, வாரணாசி ஆகிய 5 விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் நாட்டின் நிதி நிலைகளை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தின் முடிவில், தமிழகத்தில் உள்ள திருச்சி, கோவை, கர்நாடகாவில் உள்ள மங்களூர், உத்தரபிரதேதத்தில் உள்ள லக்னோ, வாரணாசி ஆகிய 5 இடங்ளில் உள்ள விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது,
மேற்கண்ட 5 விமான நிலையங்களும் நடுத்தர மற்றும் பெரிய அளவிலான விமானங்களை கையாளும் திறன் கொண்டவை. மேலும் இங்கு இரவில் விமானங்கள் வந்து செல்ல தகுந்த நவீன வசதிகள் உள்ளது.
இதையடுத்து 5 விமான நிலையங்களையும் சர்வதேச விமானங்களாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர் விமான போக்குவரத்து அதிகரித்து, விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட உதவும் என்றார்.
இந்தியாவில் மொத்தம் 454 விமான நிலையங்கள் மற்றும் விமானதளங்கள் உள்ளன. இதில் இந்திய விமான நிலையங்கள் வாரியத்தின் கீழ் 97 விமான நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 16 விமான நிலையங்கள் இதுவரை சர்வதேச விமான நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications