அகமதாபாத்: பங்கு சந்தை முதலிட்டில், வர்த்தகத்தில் தனிநபர் ஈடுப்பாடு அதிகம் கொண்ட சந்தை நமது இந்திய பங்கு சந்தை தான். உலகெங்கிலும் உள்ள வேறு எந்த ஈக்விட்டி சந்தையைக் காட்டிலும் இந்திய பங்குச் சந்தைகளில் சுமார் ஒன்பது மடங்கு அதிகமாக உள்ளது என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றி வரும் தருண் ராமதுறை அவர்கள் கடந்த புதன்கிழமையன்று இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப்மேனேஜ்மென்ட் -அகமதாபாத் (ஐஐஎம்-ஏ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியா ஃபைனான்ஸ் கான்ஃபரன்ஸில், முக்கிய குறிப்புகளடங்கிய தனது உரையை ஆற்றியபோது குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஈக்விட்டி சந்தைக்கான டெபாசிட்டராக விளங்கும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிட்டெட்டிலிருந்து பெறப்பட்ட, 2004-12க்கு இடைப்பட்ட காலகட்டத்திற்கான தகவலை மேற்கோள் காட்டிப் பேசிய ராமதொரை, "என்எஸ்டிஎல் ஈக்விட்டி மதிப்பில் சுமார் 10-18 சதவீதம் வரை தனிநபர் கணக்குகளில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், மியூச்சுவல் ஃபண்ட்கள், என்எஸ்டிஎல் ஈக்விட்டி மதிப்பில் சுமார் 3.5-5 சதவீதமாக மட்டுமே உள்ளது. உண்மையில் இந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் மேலே கூறப்பட்டதைக் காட்டிலும் மிகவும் குறைவான முக்கியத்துவத்துடனே காணப்படுகின்றன; ஏனெனில், சுமார் 60 சதவீத மியூச்சுவல் ஃபண்ட்கள், 2010 ஆம் ஆண்டில் கார்ப்பொரேஷன்களின் வசம் இருந்துள்ளது, 2009 ஆம் ஆண்டின் போது 65 சதவீத தனிநபர் பங்குதாரர்களிடம் மியூச்சுவல் ஃபண்ட்களே இல்லை," என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்தியாவில் தனிநபர்கள் ஏன் நேரடியாக பங்குகளை சொந்தமாக்கிக் கொள்ள பெரிதும் விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி அவர் தெளிவாக விளக்கவில்லை.
ஐஐஎம்-ஏ, ஐஐஎம்-பெங்களூர் மற்றும் ஐஐஎம்-கொல்கத்தா ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரண்டு-நாள் ஐஎஃப்சி நிகழ்ச்சியில், "கெட்டிங் பெட்டர்: லெர்னிங் டு இன்வெஸ்ட் இன் தி இந்தியன் ஸ்டாக் மார்க்கெட்" என்ற தலைப்பில் பேசிய ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர், எவ்வாறாயினும், மியூச்சுவல் ஃபண்ட்கள் வாயிலாக முதலீடுகள் செய்யும் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளார். என்எஸ்டிஎல் -இலிருந்து சுமார் 20 மில்லியன் தனிநபர் அக்கவுன்ட்களை ஆராய்ந்துள்ள ராமதொரை, ஆச்சர்யப்படும் வகையில், இந்தியாவில் புதிய முதலீட்டாளர்கள் பலரும், ஏழெட்டு வருடங்கள் அனுபவம் உள்ள முதலீட்டாளர்களைப் போலன்றி "அதி விரைவான பங்குகளை" தேர்வு செய்வதையே விரும்புகிறார்கள் என்று கூறுகிறார். மேலும், புதிய முதலீட்டாளர்களிடையே, சந்தையில் சரிவடைந்து கொண்டிருக்கும் பங்குகளை வாங்குவதற்கும், நன்றாகப் செயல்பட்டு கொண்டிருக்கும் பங்குகளை விற்பதற்கும் ஆர்வம் மேலோங்கி வருவதாகத் தெரிகிறது என கூறினார்.
"நான் ஆராய்ந்து திரட்டப்பட்ட தகவல்களிலிருந்து, இந்திய சந்தையின் பழைய முதலீட்டாளர்கள் ப்ரொமோட்டர்களால் செலுத்தப்படும் பங்குகளை தவிர்த்தும், ஐபிஓக்களிடமிருந்து ஒதுங்கியும், சிறிய பங்குகளில் முதலீடு செய்தும், நிறுவனங்களுக்கு சொந்தமான பங்குகளுக்கு சாதகமாக இருந்தும், புதிய முதலீட்டாளர்களைக் காட்டிலும் சிறப்பான ரிட்டர்ன்களைப் பெற முயல்கிறார்கள்," என்று கூறும் ராமதொரை, பங்குச்சந்தையில் பழைய முதலீட்டாளர்கள் சராசரி ரிட்டர்ன்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கக்கூடிய ரிட்டர்ன்களை கடைந்தெடுத்து வருவதாகவும், புதிய முதலீட்டாளர்கள் குறிப்பிடத்தக்க வகையில் அடக்கி வாசிப்பதாகவும் கூட தெரிவித்துள்ளார்.