பெங்களூரு: தமிழ்நாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் கர்நாடக மாநில சாம்ராஜ்நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1,595 ஏக்கர் தொழிற்பூங்காவில் தமிழ்நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள் சுமார் 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இத்தொழிற்பூங்காவை கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா திங்கட்கிழமை துவங்கி வைத்தார்.
இப்புதிய தொழிற்பூங்காவில் 300க்கும் மேற்பட்ட தமிழக முதலீட்டாளர்கள் தங்களது தொழில்களை துவங்கவும், விரிவாக்கம் செய்யவும் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளனர். 18 மாதங்களுக்கு முன்பு கோவையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, "கர்நாடக மாநிலத்தின் சாமராஜ்நகர் மாவட்டத்தில் 1,595 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமையவுள்ள தொழில் பூங்காவில் கோவை சுற்றியுள்ள மாநிலங்களின் உள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும்" என அழைப்பு விடுத்தார். இதன் பின் கடந்த 18 மாதங்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300 தொழில் முதலீட்டாளர்கள், தொழில் விரிவாக்கத்திற்காக இப்பகுதியில் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர். கர்நாடக அரசு புதிதாக அமைக்கப்பட்ட சாமராஜ்நகர் தொழிற்பூங்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 1 ஏக்கர் நிலம் ரூ.39.5 லட்சத்துக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழக முதலீட்டாளர்கள் இப்பகுதியில் தொழில்துவங்க ஆர்வம் காட்டினர். இப்பகுதியில் கிரானைட், ஜவுளி, தோல், ஆட்டோமொபைல், வேளாண்மை, உணவு பதனிடுதல், ஆயுர்வேதம் மற்றும் சிறு தொழில்களின் ஆலைகள் அமைக்கப்படுகின்றன. 6 மாதங்களில் முழுமையாக செயல்பட துவங்க உள்ள இந்த தொழில் பூங்கா மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழிற் பூங்காவை துவக்கிவைத்த சித்தராமையா பேசுகையில் 'கர்நாடகா - தமிழ்நாடு இடையே அரசியல் ரீதியாக துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் பல்வேறு தடைகளைத் தாண்டி கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்துள்ள தமிழக முதலீட்டாளர்களுக்கு முழு பாதுகாப்பும் ஒத்துழைப்பும் அளிக்கப்படும்.' என உறுதி அளித்தார்.ரூ.12,000 கோடி முதலீடு
அழைப்பு விடுத்த சித்தராமையா
300 முதலீட்டாளர்கள்
99 ஆண்டுகளுக்கு குத்தகை
முக்கிய தொழில்கள்
வேலைவாய்ப்பு
துவக்க நிகழ்ச்சி