டெல்லி: இந்தியாவில் ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இணையான திறன் மற்றும் ஐடியாக்களைக் கொண்ட நிறுவனங்களைத் தேடும் பணியில் பிரதமர் அலுவலகம் இறங்கியுள்ளது.
பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தில் கூகுள் சீஇஓ சுந்தர் பிச்சை அவர்களுடனான சந்திப்பிற்குப் பின், பிரதமர் அலுவலகம் இந்தியாவில் புதுமை தொழில்நுட்பத்தில் புதிய மறுமலர்ச்சியைச் செய்ய, அடல் இன்னோவேஷன் மிஷன் திட்டத்தின் கீழ் தனது தேடுதல் பணியைத் துவங்கியுள்ளது.
கூகுள் அல்லது ஜெனரல் எலக்ட்ரிக்
உலக நாடுகளில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்திலும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளிலும், முக்கியப் பதவிகளிலும் இருக்கும் போது.
இந்தியாவில் ஏன் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் இல்லை என மோடி கேள்வி எழுப்பியும், இதற்கான தீர்வையும் அளித்தது அடல் இன்னோவேஷன் மிஷன் (AIM) திட்டத்தை உருவாக்கினார் பிரதமர் மோடி.
சுதந்திர தினத்தில் மோடி..
மோடி தனது சுதந்திர தின பேச்சில் கூட இந்தியாவில் ஸ்டாட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக 'ஸ்டாட் அப் அண்ட் ஸ்டான்டு அப் இந்தியா' எனத் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகம்
புதுமை தொழில்நுட்பத்தில் பணியாற்றும் முக்கிய நிறுவனத்தைக் கண்டறிந்து நிட்டி அயோக் மற்றும் பிரதமர் அலுவலகத் துணையோடு மிகப்பெரிய அளவில் வளர்ச்சிக்கு உதவத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக அடல் இன்னோவேஷன் மிஷன் திட்டத்தின் கீழ் தனிக் குழு ஒன்றை அமைக்கப்பட்டு உள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள்
நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் முறைகளுக்கான விதிமுறைகளை இக்குழு வடிவமைக்கும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
115 மில்லியன் வேலைவாய்ப்புகள்
மேலும் இக்குழு இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், சுய தொழில் துவங்கும் விதமாகப் பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்களை அளித்து அடுத்த 10வருடத்தில் 115 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தையும் வடிவமைக்க உள்ளது.