டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மோடி தலைமையிலான அரசிற்குத் தோல்வியை அளித்தை மறைக்கும் வகையில் மத்திய அரசு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக இந்தியாவில் சுமார் 15 துறைகளில் அன்னிய முதலீட்டு அளவுகளைத் தாறுமாறாக உயர்த்தியுள்ளது.
சில துறைகளில் 100% அன்னிய முதலீட்டுக்கும் அனுமதித்துள்ளது மத்திய அரசு.
அன்னிய முதலீட்டு அளவுகள்
இந்திய பொருளாதாரத்தை அமெரிக்கா சீனா போன்ற நாடுகளுக்கு இணையாகக் கொண்டு செல்ல 15 துறைகளில் அன்னிய முதலீட்டுக்கான வழிமுறைகளை எளிமையாக்கியுள்ளது,
அதுமட்டும் அல்லாமல் FIPB அமைப்பின் ஒப்புதல் அளவை 3,000 கோடி ரூபாயில் இருந்து 5,000 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது.
நாடாளுமன்றம் ஒப்புதல்
அன்னிய முதலீட்டுக்கான தளர்வுகளைப் பிரதமர் மோடி தலைமையிலான சிறப்பு நாடாளுமன்ற அமைப்புகளின் ஒப்புதல் பெற்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், அதற்கான அதிகாரப்பூர்வு ஒப்புதல்களைப் புதிய தளர்வுகளின் அமலாக்கத்திற்குப் பின் நாடாளுமன்றத்தில் பெறப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அருண் ஜேட்லி
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், பன்னாட்டுச் சந்தைகள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ள போது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றச் சூழ்நிலைகள் அமைந்துள்ள இத்தருணத்தில் அன்னிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் தேவை எனத் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறை
மத்திய அரசின் புதிய அறிவிப்புகளின் படி இனி இந்தியா பாதுகாப்புத் துறையில் 49 சதவீதம் வரையிலான அன்னிய முதலீட்டை ஆட்டோமேடிங் முறையிலேயே செய்ய அனுமதிக்கப்பட உள்ளது. இதற்குமுன் FIPB அமைப்பின் அனுமதி பெற்ற பின்னரே 49% வரை முதலீடு செய்யப்பட்டு வந்தது.
100% அன்னிய முதலீடு
பிராட்காஸ்டிங் துறைக்கான அன்னிய முதலீட்டு அளவுகளை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை அனுமதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் டெலிபோர்ட்ஸ், DTH, கேபில் நெட்வொர்க் மற்றும் மொபைல் டிவி ஆகிய துறையில் 100% வரை அன்னிய முதலீடு செய்யலாம்.
எப்எம் ரேடியோ மற்றும் அப்-லீங்
மேலும் செய்தி மற்றும் அரசு குறித்துத் தொடர் செய்திகளை வெளியிடும் டிவி சேனஸ்களிலும் அன்னிய முதலீட்டு அளவுகளை 24 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரித்துள்ளது.
விவசாயம்
மேலும் டீ அல்லது தேயிலை, காபி, ரப்பர், ஏலக்காய், பாமாயில் மரம் மற்றும் ஆலிவ் எண்ணெய் மரம் போன்ற அனைத்திற்குமான பயிரிடுதல் துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதி அளித்துள்ளது.
கட்டுமானத்துறை
மேலும் இந்திய கட்டுமானத்துறையில் பன்னாட்டு நிறுவனம் திட்டத்தைக் கைபற்றிய முதல் 6 மாதத்திற்குள் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் கட்டுப்பாட்டை மத்திய அரசு விலக்கியுள்ளது.
சில்லறை வர்த்தகம்
மேலும் ரீடைல் வர்த்தகத்தில் 30 சதவீதம் வரை அன்னிய முதலீட்டை அனுமதி அளிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய விரைவில் இதற்கான முடிவுகள் வெளியாகும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
தனியார் வங்கித்துறை
இந்திய வங்கித்துறையில், தனியார் வங்கிகளில் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அல்லது தனிநபர் 79 சதவீதம் வரை அன்னிய முதலீடு செய்யலாம். இதனால் நிர்வாகப் பொறுப்பில் எவ்விதமான மாற்றமும் இருக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிற துறைகள்
விவசாயம், கால்நடை பராமரிப்பு, சுரங்கம் மற்றும் உலோகத் துறையில் சில முக்கியக் கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு இத்துறைக்கான அன்னிய முதலீட்டு அளவுகளில் சில தளர்வுகளை அளித்துள்ளது.