சென்னை: இந்திய இளைஞர்கள் மத்தியில் பிராண்ட் பொருட்களின் தாக்கம் மற்றும் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் உயர்தட்டு மக்களின் கொள்முதல் எண்ணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்திய ஆடம்பர சந்தையை 2016ஆம் ஆண்டின் முடிவில் 18.3 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி வர்த்தகம் மற்றும் பொருளாதார ஆய்வு நிறுவனமான அசோசாம் செய்த ஆய்வுகளின் படி இந்திய ஆடம்பர சந்தையின் அளவு அடுத்த ஒரு வருடத்தில் 25 சதவீதம் வரை உயரும் எனக் கணித்துள்ளது.
தற்போதைய நிலவரம்..
2015ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆடம்பர சந்தையின் மதிப்பு 14.7 பில்லியன் டாலராக உள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் இச்சந்தை தோராயமாக 25 சதவீதம் உயர்ந்து 18.3 பில்லியன் டாலர் வரை உயர்ந்து புதிய உச்சத்தை எட்ட உள்ளது.
ஆடம்பர சந்தை
இந்தியாவைப் பொருத்த வரை ஆடம்பர சந்தைகளில் மிக முக்கியமானது 5 நச்சத்திர ஹோட்டல், எலக்ட்ரானிக் கேஜெட்ஸ், ஆடம்பர தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் நகைகள் தான். இந்தியாவில் தற்போது பணப்புழக்கம் அதிகளவில் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த 3 வருடத்தில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களின் விற்பனை 30-35 சதவீதம் வரை உயரும் எனக் கணித்துள்ளது அசோசாம்.
எஸ்.யூ.வி கார்கள்
மேலும் இந்தியாவில் இன்றளவு அனைவரின் கனவு இருப்பது இரண்டு தான். ஒன்று வீடு, மற்றொன்று ஆடம்பர எஸ்.யூ.வி கார்கள். இந்நிலையில் அடுத்த 3 வருடத்தில் ஆடம்பர எஸ்.யூ.வி கார்களின் விற்பனை 18-20 சதவீதம் வரை உயரும் என அசோசாம் ஆய்வு கூறுகிறது.
வீடுகள்.. வீட்டு மனைகள்..
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ரியல் எஸ்டேட் துறை மந்தம் அடைந்துள்ளது குறிப்பாகத் தமிழகத்தில். அதிலும் சில வாரங்களுக்கு முன் பெய்த கன மழைக்குப் பின் சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே பிளாட் மற்றும் வீட்டு மனைகளின் விலை தாறுமாறாகக் குறைந்துள்ளது.
உதாரணமாக. மழை முன் 20 இலட்சம் மதிப்புள்ள இடம் தற்போது 12-16 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பங்குச் சந்தை முதலீடு
அதேபோல் இந்தியா பொருளாதாரம் அடுத்த 15 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட உள்ள நிலையில் பெரும் பணக்காரர்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரை அனைவருக்கும் பங்குச்சந்தை முதலீட்டும் முக்கியக் குறியாக உள்ளது.
40 சதவீத வருமான
அதிக வருமானம் பெரும் குடும்பங்கள், தங்களது சம்பாத்தியத்தில் சுமார் 40 சதவீத தொகையை ஆடம்பர பொருட்களின் மீது முதலீடு செய்கிறது. அதேபோல் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் சுமார் 10 சதவீதம் வரை ஆடம்பர பொருட்களின் மீது முதலீடு செய்கிறது.