ஒரு வேலை வாய்ப்பை நாம் தேர்ந்தெடுக்கும் முன், அதில் நமக்கு உள்ள விருப்பங்கள், தொழில் வளர்ச்சி, சம்பளம் மற்றும் மற்ற சலுகைகள் என்று பல்வேறு காரணிகளை நாம் கருத்தில் கொள்கிறோம்.
ஆனால் ஒரு சிலரே அந்தப் பணியில் வரும் மனவழுத்தத்தைக் குறித்து எண்ணி பார்க்கிறோம். மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் மனஅழுத்தம் குறைந்த ஒரு வேலை வாய்ப்பை நாம் தேர்ந்தெடுக்க முடியும். இந்நிலையில் அதிக மனஅழுத்தம் ஏற்படுத்தும் சில வேலை வாய்ப்புகளைக் குறித்துக் கீழே காண்போம்:
சுகாதாரப் பணியாளர்கள்
சுகாதாரத் துறையைச் சேர்ந்த சிகிச்சையாளர்கள், நர்சுகள், டாக்டர்கள் மற்றும் பலர், தங்கள் பணியாக நோயாளிகளைப் பார்த்துக் கொள்வது, கவலைக்கிடமான நபர்களைக் கண்டறிவது மற்றும் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய மரணங்கள் (வழக்கமாக!) பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள். தினமும், அதுவும் நாள் முழுவதும், யாராவது ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் பார்த்து கொண்டே இருப்பது என்பது உண்மையிலேயே அதிக மனவழுத்தத்தை அளிக்கக்கூடியதாகும்.
விருந்தோம்பல் துறையைச் சேர்ந்தவர்கள்
வெயிட்டர்கள் முதல் டெலிவரி பாய்ஸ் வரை, செஃப்கள் முதல் மேலாளர்கள் வரை என்று விருந்தோம்பல் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு பணியாளர்களும், தங்கள் வாடிக்கையாளர்களிடம் புன்முறுவல் ஏந்திய முகத்தோடு விருந்தோம்பல் பணியைச் செய்ய வேண்டியுள்ளது. இத்தனைக்கும் இவர்கள் சந்திக்கும் எல்லா வாடிக்கையாளர்களும் சாந்தமாக நடந்து கொள்வதில்லை. மாறாக, சில மிரட்டுபவர்களாகவும் எரிச்சல் ஊட்டுபவர்களாகவும் நடந்து கொள்ளலாம். இதனோடு இந்தப் பணிக்கு குறைந்த சம்பளமும் அளிக்கப்பட்டால், மனஅழுத்தம் ஏற்பட அதுவே போதுமானதாக அமைகிறது.
சமூகச் சேவை பணியாளர்கள்
ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகப் போராடுவது அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் ஈடுபடும் சமூகச் சேவை செய்பவர்கள், பல அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளை வழக்கமாகச் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு வாழ்க்கையே மிகவும் மனஅழுத்தம் கொண்டதாக அமைந்து விடுகிறது. அவர்கள் செய்யும் பணிகளுக்காக, பாராட்டுகளைப் பெறலாம். ஆனால் பெரும்பாலான சமூகச் சேவை பணியாளர்கள் தங்கள் மனஅமைதியை இழக்க நேரிடுகிறது.
பராமரிப்புப் பணியாளர்கள்
நமக்கு உதவும் பிளம்பர்கள், எலக்ட்ரிஷியன்கள், துப்புரவு தொழிலாளர்கள் அல்லது கட்டிட பணியாளர்களுக்கு, நம்மில் எத்தனை பேர் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்? சமுதாயத்தில் அவர்கள் செய்யும் பணி தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும், நாட்டில் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான சம்பளம் அளிக்கப்படுவதோடு, அமைப்புசாரா துறைகளாகவும் திகழ்கிறது. இந்தப் பணிகளுக்குத் தகுதியான மரியாதை அளிக்கப்படுகிறதா?
ராணுவப் பணியாளர்கள்
நாட்டிற்காகச் சண்டையிட தனது உயிரையும் துச்சம் என நினைப்பது அவ்வளவு எளியக் காரியம் அல்ல. மேலும் தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, நிலையில்லாத ஒரு எதிர்காலத்தை நோக்கி அவர்கள் பயணிக்கிறார்கள். தனது மனதில் மிகவும் தைரியம் மிகுந்தவர்களால் மட்டுமே எதிரியின் எல்லைக்குள் துணிகரமாக நுழைந்து சண்டையிட முடியும். இவர்கள் அவசரக் காலத்தில் பல நாட்கள் உணவு அல்லது இருப்பிடம் இல்லாமல் கூடக் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது ஒரு மனஅழுத்தம் மிகுந்த பணி அல்ல என்றால், வேறு எதைக் கூற முடியும்?
இந்த..." data-gal-src="http:///img/600x100/2018/04/15-1497534071-mathsteacher-1522906807.jpg">டென்ஷனே கிடையாதாம்..!