தற்போதைய வர்த்தகச் சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்கப்போறார் என்பது பங்குச்சந்தைக்கும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் அவசியமில்லை.
கடந்த சில வாரங்களாகவே கர்நாடக தேர்தல் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது எனச் செய்திகள் வருகிறது. இதன் உண்மை நிலை என்ன என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
பங்குச்சந்தை
பங்குச்சந்தை வர்த்தகம் அனைத்தும் லாபம் அதிகம் தரும் பங்குகள் மீதே அதிகளவில் முதலீடு செய்யப்படும், நஷ்டம் தரும் பங்குகளில் யாரும் முதலீடு செய்யப்போவதில்லை. அந்த வகையில் சந்தையில் பணம் இருந்தால் மட்டும் போதும் என்கிற நிலையை வைத்துப் பார்க்கும் போது எவ்விதமான பயமுமில்லை.
காரணம் தற்போது சந்தையில் எக்கச்சக்கமான பணம் உள்ளது. இதனால் கர்நாடக தேர்தல் முடிவுகள் தான் சந்தை வர்த்தகத்தைத் தீர்மானிக்கும் என்பது எல்லாம் கிடையாது.
மியூச்சுவல் பண்ட்ஸ்
இந்திய முதலீட்டுச் சந்தையில் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு முதலீட்டு அளவுகள் அதிகரித்துள்ளது. 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மியூச்சவல் பண்ட் திட்ட முதலீட்டின் அளவு சுமார் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேபோல் ஏப்ரல் 2017இல் இப்பிரிவு முதலீட்டு அளவு மட்டும் சுமார் 23.35 லட்சம் கோடி ரூபாயாகும்.
பங்கு முதலீடுகள்
அதேபோல் ELSS திட்டங்கள் அல்லாமல் பங்கு முதலீட்டு மட்டும் 4 மடங்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் வெறும் 2,954 கோடி ரூபாயாக இருந்த பங்கு முதலீடுகள், ஏப்ரல் மாதத்தில் 11,962 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கிட்டதட்ட ரூ.12,000 கோடி
இந்நிலையில் பங்குச்சந்தையில் மாதத்திற்குக் கிட்டதட்ட 12,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு குவிந்து வருகிறது. இதோடு எல்ஐசி மற்றும் ஈபிஎப் அமைப்புகளின் முதலீடுகளும் உள்ளது.
சந்தையில் இவ்வளவு பணம் இருக்கும் போது பங்குச்சந்தை சரிவடைந்தாலும், பெரிய நிறுவனங்கள் அதிகளவிலான பங்குகளை வாங்கும். பணத்தை வைத்துக்கொண்டு நிதி முதலீட்டாளர்களால் அமைதியாக உட்கார முடியாது. ஆதலால் சரிவடைந்தாலும் முதலீடு அதிகமாக உள்ள காரணத்தால் தொடர்ந்து சந்தை வர்த்தகம் உயர்வான பாதையிலேயே இருக்கும்.
கச்சா எண்ணெய்
அதேபோல் கச்சா எண்ணெய் உயர்ந்து வரும் விலை உயர்ந்த உடன் மும்பை பங்குச்சந்தையின் உயர்வான நிலையில் இருந்து சுமார் 3 சதவீதம் வரையில் சரிந்தது. இதுபோல் ஒவ்வொரு கசப்பான செய்திகளாலும் பங்குச்சந்தை சரிவடைகிறது.
ஆனால் கவலை வேண்டாம்..
ஏன் கவலை வேண்டாம்..?
இத்தகைய சூழ்நிலையிலும் மியூச்சவல் பண்ட், பங்குச்சந்தை என அனைத்துப் பிரிவிலும் முதலீடுகள் குவிந்த வண்ணமாக உள்ளது. எப்போது சந்தையில் புதிய முதலீடு இல்லையோ அப்போது தான் நாம் கவலைப்பட வேண்டும்.
ஆனால் அப்படியொரு நிலை உருவாக வாய்ப்புகள் இல்லை. இதற்கு முக்கியக் காரணம் மியூச்சுவல் பண்ட் அமைப்புகள் செய்யும் அதிரடி விளம்பரங்களால் மக்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
தொடர் தேர்தல்கள்
கர்நாடக மாநில தேர்தலை தொடர்ந்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் நடக்க உள்ளது. இத்தகைய நிலையில் சந்தையில் முதலீடுகள் குறையாமல் இருக்கும் வரையில் எவ்விதமான கவலையும் இல்லை.
பொதுத் தேர்தல் 2019
ஆனால் 2019ஆம் ஆண்டு நடக்கும் பொதுத் தேர்தலின் போது சந்தையில் முதலீடு அளவுகள் குறைந்தால் கண்டிப்பாக நாம் உஷாராக இருக்க வேண்டும். மேலும் ஒரு நாட்டின் அரசு மாறும்போது வர்த்தகச் சந்தையில் சில மாற்றங்கள் ஏற்படும், இந்த மாற்றங்கள் தற்போது மோடி தலைமையிலான பிஜேபி வெற்றிபெறுவதன் வாயிலாகவே அமையும்.