மும்பை: வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளைப் பெற்று அவற்றை தவறாக பயன்படுத்திய தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதி கடந்த 4 ஆண்டுகளில் 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உரிமம் பெறாமல் நடத்தி வந்த சுமார் 13000 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதாக பெயரளவில் சொல்லிக்கொண்டு இயங்கிவரும் தொண்டு நிறுவனங்களுக்குப் பலதரப்பிலிருந்தும் நிதி உதவிகள் வருகின்றன. இவ்வகையான தொண்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதி மீது எந்த வரியும் விதிப்பதில்லை. நல்ல காரியங்களுக்காக செய்யப்படும் நிதி உதவிகளுக்கு தரப்படும் வரிச் சலுகைகளைப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டுவருவதும் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை பெற்று மோசடியில் ஈடுபட்ட தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பை அதிகப்படுத்தியது. குறிப்பாக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் எனப்படும் (Foreign Contribution Regulation Act-FCRA) எஃப்சிஆர்ஏ 2010ஆம் ஆண்டு சட்டப்படி விதிமுறைகளை மீறும் தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
வெளிநாடுகளில் இருந்து மிக எளிமையாக நிதிகளைப் பெற வேண்டுமா. உடனே ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பி, கூடவே ஒரு அறக்கட்டளையை தொடங்கி நடத்து. அப்புறம் என்ன அந்த அரக்கட்டளையின் பேரில் ஒரு வங்கிக் கணக்கையும் தொடங்கு. பிறகென்ன, வெகு சீக்கிரத்தில் வெளிநாடுகளில் இருந்தும் தனியாரிடம் இருந்தும் நிதி உதவிகள் குவியும். மேலும் அதற்கு வருமான வரி விலக்கும் உண்டு என்று சில பேர் தப்புக்கணக்கு போட்டனர்.
முறையாக வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளைப் பெற்று அவற்றை சமூக மற்றும் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தும் சில உண்மையான தொண்டு நிறுவனங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இநந்த தொண்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதி உதவிகளுக்கு வரியும் விதிக்கப்படுவதில்லை. மத்திய அரசின் பார்வையும் இவ்வகையான தொண்டு நிறுவனங்கள் மீது படுவதில்லை.
பெயரளவில் தொண்டு நிறுவனங்களை தொடங்கி, அதன் மூலம் வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெற்று அவற்றை மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் சமூக விரோத சக்திகளுக்கு பயன்படுத்தும் தொண்டு நிறுவனங்களின் மீது நீண்ட காலமாகவே மத்திய அரசின் கழுகுப்பார்வை தொடர்ந்து கொண்டே வந்தவண்ணம் இருந்தது.
மத்தியில் கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த உடன் இந்த மாதிரியான சமூக விரோத சக்திகளுக்கு துணைபோகும் தொண்டு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்தத் தொண்டு நிறுவனங்கள் உரிமம் பெறாமலேயே தொடர்ந்து நடத்தி வருவதும் தெரிய வந்தது. இதனை அடுத்து இந்தத் தொண்டு நிறுவனங்கள் மீதான மத்திய அரசின் பிடியும் இறுக ஆரம்பித்தது.
மத்திய அரசின் பிடி இறுகத் தொடங்கியதால், தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி உதவிகளும் குறைய ஆரம்பித்தது. கடந்த 4 ஆண்டுகளில் இந்தத் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதி உதவியானது சுமார் 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக பெயின் & கோ (Bain & Co) நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உரிமம் பெறாமல் நடத்தி வந்த சுமார் 13000 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் 4800 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்தத் துணிச்சலான நடவடிக்கையை எதிர்க்கும் சில மோசடி தொண்டு நிறுவனங்கள், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் தொண்டு நிறுவனங்கள் எனவும், அரசு அடக்குமுறை சட்டங்களைப் பயன்படுத்தி ஒடுக்கப் பார்க்கிறது என்றும் குற்றம் சாட்டுகின்றன.
கடந்த ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி குழுவில் இருந்த பில் அண்டு மெலிண்டா (Bill &Melinda Gate) அறக்கட்டளையின் இந்திய இயக்குநர் நாச்சிகெட் மார் என்பவரை நீக்கியது தன்னுடைய பதவியின் மூலமாக வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெற்று வந்தது தெரியவந்ததால், மத்திய அரசு. இதுபோன்ற பல்வேறு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் சார்ந்த நபர்கள் மீது கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியது.
தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி உதவிகள் குறைந்தாலும், உள்நாட்டில் தனிநபர்கள் செய்யும் நிதி உதவிகள் அதிகரித்துள்ளன. 2014-15ஆம் நிதி ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்த தனிநபர்கள் நன்கொடை மதிப்பு, 2017-18ஆம் ஆண்டில் ரூ.70 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்திய நிறுவனங்கள் சிஎஸ்ஆர் எனப்படும் சமூக தொண்டு நடவடிக்கைகளுக்காக இதே காலகட்டத்தில் ரூ. 13 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளன. இது ஆண்டுக்கு 12 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சமூக முன்னேற்றத்துக்கான மக்கள் நலத் திட்டங்களுக்கான இது போன்ற நிதி உதவிகள் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள பெயின் அண்ட் கோ ஆய்வு, உலக வங்கி குறிப்பிட்டுள்ள நீடித்த வளர்ச்சிக்கான காரணிகளை இந்தியா அடைய வேண்டுமெனில் ஆண்டுக்கு ரூ.4.2 லட்சம் கோடி நிதி அவசியம் என்று கூறியுள்ளது