டெல்லி: அந்நிய நேரடி முதலீட்டாளர்களுக்கு சாதகமான பொருளாதார சூழ்நிலைகள் நிலவுவதால் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடுகளை குவித்து வருகின்றனர். நடப்பு ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து 26ஆம் தேதி வரையிலும் சுமார் 21ஆயிரத்து 32 கோடி ரூபாயை இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்திய பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு நிறுவனங்கள் ரூ.73,103 கோடி முதலீடு செய்துள்ளனர்
நம் நாட்டில் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு 1992 நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது. அப்போது முதல் ஏறக்குறைய 25 வருடங்களாக அந்த நிறுவனங்கள் பங்கு சந்தை மற்றும் கடன் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றன.
இந்திய பங்குச்சந்தையில் அந்நிய நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.21,032 கோடியை முதலீடு செய்துள்ளனர். அந்திய முதலீட்டாளர்கள் கடன் சந்தையில் (Debt market)இருந்து ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையிலும் சுமார் 3812.94 கோடி ரூபாயை எடுத்துள்ளனர்.
அமெரிக்க பொருட்களுக்கு அதிக இறக்குமதி விதிப்பதா? - இந்தியா மீது டொனால்டு ட்ரம்ப் காட்டம்
அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு
அந்நிய நேரடி முதலீட்டாளர்கள், கடந்த பிப்ரவரி மாதத்தில் 12 ஆயிரத்து 53 கோடி ரூபாயும், மார்ச் மாதத்தில் 48 ஆயிரத்து 751 கோடி ரூபாயும் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளதாக முதலீட்டு தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய பங்குச்சந்தைகள்
இந்தியப் பங்குச்சந்தையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும், சில்லறை முதலீட்டாளர்களும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் தொடர்ந்து முதலீடு செய்தாலும், அது இந்திய பங்குச் சந்தையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. பங்குச் சந்தைகள் பெரிய அளவில் ஏற்றம் பெறவேண்டுமானால் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்தால் மட்டுமே இது
சாத்தியமாகும்.
கருத்துக்கணிப்பு ஆளுங்கட்சிக்கு சாதகம் இந்தியாவில் தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வந்தாலும், அதைப்பற்றி எல்லாம் அந்நிய முதலீட்டாளர்கள் கவலைப்படாமல் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து வருகிறார்கள். சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. தவிர நடைபெறும் லோக்சபா தேர்தலில் மீண்டும் மோடியே வெற்றி பெற்று ஆட்சியைப்
பிடிப்பார் என்று கருத்துக் கணிப்புகளும் வெளியாவதால் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் போட்டி போட்டு முதலீடு செய்து வருகிறார்கள்.
Foreign Portfolio Investment
இந்தியாவில் பல்வேறு அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேரடியாகவே முதலீடு செய்து வருகிறார்கள். அந்நிய நிதி நிறுவனங்கள் துணை கணக்குகள் மற்றும் தகுதி வாய்ந்த அந்நிய முதலீட்டாளர்களை இணைத்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்களுக்கான போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investment-FPI) என்ற பிரிவை இந்தியப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி (SEBI) உருவாக்கி இருக்கிறது.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்
செபி அமைப்பில் பதிவு பெற்ற அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் (FPI) வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக மற்ற நாடுகளின் பெரும் பணக்காரர்கள், இந்திய பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் முன்பேர வர்த்தக சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்.
பாஜக ஆட்சி காலத்தில்
பாஜக ஆட்சிக்கு வந்த காலத்தில் அதாவது 2014ஆம் ஆண்டில் 2,56,213 கோடி ரூபாய் அந்நிய முதலீடு கிடைத்துள்ளது. இது அதிகபட்ச அந்நிய முதலீட்டைப் பொறுத்தவரை உச்சபட்ச அளவாகும். கடந்த 2015 ஆம் ஆண்டில் 63663 கோடி அளவிற்கு அந்நிய முதலீடு கிடைத்துள்ளது.கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ஆண்டில் அந்நிய முதலீட்டாளர்கள் 23079 கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்று வெளியேறினர். அதே நேரத்தில் கடந்த 2017ஆம் ஆண்டில்கூட அந்நிய முதலீடு 2,00,048 கோடியாக இருந்துள்ளது.
வெளியேறிய முதலீட்டாளர்கள்
கடந்த 2018 -19ஆம் நிதியாண்டில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய மூலதன சந்தையில் இருந்து ரூ. 1629 கோடியை விற்று வெளியேறினர். அந்த ஆண்டில் கடன் சந்தையில் இருந்து வெளியேறிய அந்நிய நிறுவன முதலீடு ரூ.42951 கோடியாக இருக்கிறது. மொத்தம் 2018ஆம் ஆண்டில் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள அந்நிய முதலீட்டாளர்கள், 80919 கோடி அளவுக்கு தங்களது முதலீட்டை திரும்பப் பெற்றனர். இது இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றிலேயே உச்சமாகும். லோக்சபா தேர்தல், கச்சா எண்ணெய் விலை ஏற்றம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடுகளை விற்று வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பங்குச்சந்தைக்கு திரும்பிய முதலீட்டாளர்கள்
மீண்டும் பாஜக ஆட்சி அமைய வாய்ப்பு கருத்து கணிப்புகள் கூறியதை அடுத்து அந்நிய முதலீடு மீண்டும் இந்திய பங்குச்சந்தைக்கு திரும்பினர். 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்திய பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு நிறுவனங்கள் 73,103 கோடி முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.