சென்னை: இந்த தேசத்தின் பரிதாபத்துக்குரிய ஒரே தொழில் என்றால் அது விவசாயம் தான். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கையும் பலன் அளிக்கவில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சாப்ட்வேர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் லாபம் கிடைக்கலாம் என அங்கிருந்து வந்த நண்பர் ஒருவர் கூறினார். அந்த தகவலை அப்படியே வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்தியாவில் நெல்லுக்கும், கரும்பு மற்றும் கோதுமைக்கே உரிய ஆதார விலையை அரசு கொடுக்கிறது. இதில் நெல், கரும்பு இரண்டு பயிர்களுமே அதிக தண்ணீர் உறிஞ்சும் பயிர்கள். ஆனாலும் மக்கள் இதைத்தான் அதிகம் பயிரிட விரும்புகிறார்கள். இதுதான் நாட்டின் தண்ணீர் சண்டைகளுக்கு பிரதான காரணம்.
உண்மையில் அரசு பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க செய்ய வேண்டுமானால், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா முழுவதும் விவசாயிகளை ஒன்று இணைக்க வேண்டும். அப்போது தான் அது சாத்தியம்.
சூப்பர் லாபம்
செய்தியாளர்களின் வேலை என்பது களத்தில் செய்திகளை சென்று சேகரிப்பது தான். நான் சில மாதங்களுக்கு முன் விவசாயம் சார்ந்த செய்திகளை அதிகம் தேடி சென்று வந்தேன். அப்படித்தான் மூன்று மாதங்களுக்கு முன்பு சிவப்பு கொய்யாவின் விலையை மார்க்கெட்டில் கேட்ட போது ரூ.100 என்றார்கள். நான் வசித்த பகுதி அருகே சிவப்பு கொய்யா பயிரிடப்பட்டு இருந்தது. சரி சூப்பர் லாபம் கிடைக்கும் அவருக்கு, என அவரை சந்திக்க சென்றேன்.
தொழில்நுட்பம்
அவரிடம் பேட்டி கேட்ட போது, அமெரிக்கா போன்ற நாடுகளில் விவசாயம் செய்யும் முறையும் நமது ஊர் முறையும் வேறு வேறாக இருக்கிறது என்றார். எப்படி, சொல்லுங்கள் என்றேன். அவர் கூறுகையில், "அமெரிக்காவிலும் நமது ஊரைப்போலவே ஒரு காலம் வரை விவசாயம் என்பது திறந்தவெளி சந்தையாக இருந்தது. இதனால் அங்கும் விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார்கள். அதன் பின்னர் நவீன சாப்ட்வேர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளையும் அமெரிக்கா முழுவதும் இணைத்தார்கள்.
பயிர்களின் விவரம்
இதன்படி அந்நாட்டு வேளாண் துறையிடம் விவசாயம் செய்யும் விவசாயிகள், என்ன பயிரிடப்போகிறார்கள் என்பதை சொல்ல வேண்டும். அந்த பயிர் வேறு எங்காவது பயிரிட்டு இருக்கிறார்களா என்பதை கவனித்து இணைத்துக் கொள்வார்கள. இப்படி எல்லா விவசாயிகளும் கட்டாயம் பயிர்கள் விளைவிப்பதை கூற வேண்டும். எத்தனை ஏக்கர், என்னென்ன பயிர் என்பதை தெரிவிக்க வேண்டும்.
நல்ல லாபம்
இதன் மூலம் மிகப்பெரிய தகவல் களஞ்சியம் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் அந்நாட்டின் தேவைகளை கணித்து, தேவைக்கு அதிகமாக பயிரிடுவதை தவிர்க்கிறார்கள். இதன் மூலம் என்ன விலை கிடைக்க வேண்டும். எவ்வளவு பயிரிட்டால் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்பதையும் கணிக்கிறார்கள். மேலும் விவசாயம் செய்யும் முறைகளுக்கும் நவீன தொழில்நுட்பங்களை கையாள்கிறார்கள். இதன் மூலம் நஷ்டம் அடையாமல் நல்ல லாபம் விவசாயிகளை சென்றடைகிறது.
நம் தேச மக்கள்
ஆனால் நம்மூரில் ஒரே நேரத்தில் அதிகப்படியான பயிர்களை பயிரிடுவது , அல்லது குறைவாக பயிரிட்டு பற்றாக்குறையை ஏற்படுத்துவது என்பதே தொடர்கிறது. மேலும் விவசாயிகள் பெரும்பாலும் படிக்காத பாமர மக்கள் என்பதால் அவர்களை இடைத்தரர்கள் ஏமாற்றி கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் விளைவிக்கும் விவசாயி அப்படியே இருக்கிறார். எனவே மக்களுக்கு உரிய விலை கிடைக்க நவீன சாப்ட்வேர் மூலம் அனைத்து விவசாயிகளையும் இணைக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு லாபம்
இதன் மூலம் தினசரி விவசாயிகள் எந்த பயிர் அதிகமாக இருக்கிறது. எது குறைவாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்து நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும். ஆனால் இதை செய்ய வேண்டியது மத்திய வேளாண் அமைச்சகத்தின் கடமையாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் விவசாயத் தகவல்கள் உள்ளூர் மொழிகளில் உடனுக்குடன் மொழிமாற்றி பரிமாறப்பட வேண்டும். அப்படி செய்தால் எல்லா விவசாயிகளுமே லாபம் என்ற நிலையை அடைய முடியும் " என்றார்.
டேட்டா தேவை
விவசாயம் என்பது இந்தியாவின் உயிர்நாடி, நாட்டின் தற்போதை உணவு பயிர்களின் தேவை, ஒவ்வொரு ஆண்டும் விளைய வேண்டிய பயிர்கள் மற்றும் தேவைகள், எங்கு எந்த மாதியான பயிர்கள் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். எங்கு எந்த பயிர்களை பயிரிடலாம். எந்த சந்தைக்கு எவ்வளவு பயர்கள் தேவை. எதை ஏற்றுமதி செய்யலாம் என்பது போன்ற மிகப்பெரிய தகவல் களஞ்சியம் விவசாயிகளை போய் சேர வேண்டும்.