டெல்லி: தங்கம் இறக்குமதி அதிகரிப்பு, கச்சா எண்ணை விலை உயர்வு, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நடக்கும் வர்த்தகப் போர் ஆகிய சர்வதேச காரணங்களால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஏப்ரல் மாதத்தில் சிறிதளவு அதிகரித்து காணப்பட்டது. ஏப்ரல் மாத வர்த்தகப் பற்றாக்குறை ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத வர்த்தகப் பற்றாக்குறையானது ரூ.96 ஆயிரத்து 389 கோடியாக இருந்தது. இதுவே கடந்த மார்ச் மாதத்தில் 76 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்து குறிப்பிடத்தக்கது.
நாட்டின் ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகரித்து காணப்பட்டால் வர்த்தகப் பற்றாக்குறை என்றும் அதுவே இறக்குமதியை விட ஏற்றுமதி கூடுதலாக இருக்குமானால் வர்த்தக உபரியாக கணக்கில் கொள்ளப்படும். ஒவ்வொரு மாதமும் இது கணக்கிடப்படும். ஏற்றுமதி, இறக்குமதியில் ஏற்படும் மாற்றத்தை வைத்தே அந்நியச் செலவாணியில் ஏற்படும் லாபமோ அல்லது சரிவோ கணக்கிடப்படும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் முக்கியப் பொருட்களின் ஏற்றுமதி என்பது சிறிதளவே உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியானது 30.75 சதவிகிதமாகவும், மின்னணு பொருட்களின் ஏற்றுமதியானது 27.78 சதவிகிதமாகவும் இருந்தது.
அதேபோல் இயற்கை மற்றம் செயற்கை உரங்களின் ஏற்றுமதி 15.06 சதவிகிமாகவும், ஆயத்த ஆடைகள் உள்பட ஜவுளி ஏற்றுமதி என்பது 4.42 சதவிகிதமாகவும், மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி 4.03 சதவிகிமாகவும் இருந்தது.
இறக்குதியைப் பொருத்த வரையில், முக்கிய இறக்குமதியான கச்சா எண்ணெய் கடந்த ஏப்ரல் மாதத்தில் சற்று கூடுதலாகவே இருந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதி 9.26 சதவிகிதமாக அதாவது ரூ.79 ஆயிரத்து 955 கோடியாக இருந்தது. ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலையானது ரூ.5000 ஆக இருந்து. இதுவே கடந்த 2018ஆம் ஆண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ரூ.4786 ஆக இருந்தது.
இதர பொருட்களின் இறக்குமதியானது 2.78 சதவிகிதமாக அதாவது ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் கோடியாக இருந்தது. இதுவே கடந்த 2018ஆம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய இறக்குமதியான தங்கம் கடந்த ஏப்ரலில் 54 சதவிகிதமாக அதாவது ரூ.27 ஆயிரத்து 896 கோடியாக இருந்தது. உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் 2ஆவது மிகப்பெரிய நாடு என்பதாலும், இந்தியாவில் தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அதோடு தற்சமயம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதாலும் தங்கத்தின் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தின் அட்சய திரிதியை நாளை முன்னிட்டு தங்க நகைக் கடைகள் அனைத்துமே சிறப்பு தள்ளுபடி வழங்கியதால், மக்கள் அதிக அளவில் தங்க நகைகள் வாங்கியதாலும் கடந்த மாதத்தில் தங்கம் இறக்குமதி அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலியம் அல்லாத பொருட்கள், விலை உயர்ந்த கற்கள் பதித்த நகைகளின் ஏற்றுமதி ரூ.1 லட்சத்து 37 ஆயிரம் கோடியாக இருந்தது. இதுவே கடந்த 2018ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் ஏப்ரல் மாதத்திய ஏற்றுமதி 0.64 சதவிகிதமே அதாவது ரூ.1 லட்சத்து 83 ஆயிரமாக இருந்தது. ஆனால் இறக்குமதி என்பது 4.48 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாத மொத்த இறக்குமதி ரூ.2 லட்சத்து 90 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆக ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதியானது கடந்த ஏப்ரலில் சுமார் ரூ.7 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து காணப்பட்டது.