டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு இடையில் உள்ள ரகசியம் என்றும் அது பற்றிய தகவல்களை வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் கறுப்புப் பணம் பற்றிய விவரங்கள் ஒவ்வொரு வழக்குக்கும் வித்தியாசப்படும் என்றும் விசாரணையின் முடிவில் தான் அது தெரியவரும் என்றும் எனவே தான் ஸ்விட்சர்லாந்தில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கறுப்புப் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்றும், மக்களின் உழைப்பை எல்லாம் சுரண்டி அதன் மூலம் லாபம் சம்பாதித்து ஹவாலா பரிமாற்றத்தின் மூலமாக வெளிநாடுகளில் பதுக்கப்படுகிறது என்றும் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் அந்த கறுப்புப் பணத்தை உடனடியாக மீட்டு வந்து நாட்டு மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வோம் என்று சொல்லி பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொய் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.
மறதி நோய்
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த உடன் மத்தியில் ஆள்பவர்களுக்கு தீவிரமான மறதி நோய் ஏற்பட்டுவிட்டதோ என்று நினைக்கும் வகையில், கறுப்புப் பணம் என்ற வார்த்தையை மத்திய அரசு அகராதியில் இருந்து எடுத்துவிட்டது போல் அதைப் பற்றி சுத்தமாக மறந்துவிட்டார்கள்.
பணமதிப்பு நீக்கம்
உயர் மதிப்புடைய நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதால் தான் நாட்டில் கறுப்புப் பணம் அதிக அளவில் பதுக்கி வைக்கப்படுகிறது என்றும் ஹவாலா பரிமாற்றத்தின் மூலம் சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது என்றும் சொல்லி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்தது.
செல்லாத ரூபாய் நோட்டுக்கள்
செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்னர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 99 சதவிகிதம் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டதாக அறிவித்ததோடு, சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணத்தை பதுக்கல்காரர்கள் வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டதாகவும் சொல்லிவிட்டு ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை பதுக்கியதாக பெயரளவுக்கு சில நபர்களின் பட்டியலை கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு வெளியிட்டு மறந்துவிட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தற்போது இந்த விசயத்தை பிடிஐ பத்திரிக்கையாளர்கள் கையில் எடுத்துள்ளனர். பிடிஐ பத்திரிக்கையாளர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்பப் பணம் பற்றியும், எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது பற்றியும், அதில் இந்திய அரசுக்கு என்ன விவரங்கள் வந்துள்ளன, அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் எவை என்பது பற்றியும் விவரங்களை அளிக்கும்படி மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரப்பட்டது.
வெளியிட மறுப்பு
அதற்கு நிதியமைச்சகம், ரகசியம் கருதி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் பற்றிய விவரத்தை வெளியிட முடியாது என்றும், கறுப்புப்பணம் பதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு சம்பந்தமான தகவல்களை இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதுண்டு. இது தொடர்பாக வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. அதோடு இது ஒரு தொடர் நடவடிக்கை என்பதால் இது பற்றிய விவரங்களை வெளியில் கூறமுடியாது என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா - சுவிட்சர்லாந்து ஒப்பந்தம்
இந்தியா, சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையில் வரி சார்ந்த விசயங்களை பரிமாற்றம் செய்துகொள்ளும் வகையில் (Multilateral Convention on Mutual Administrative Assistance in Tax Matters-MAAC) கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்துவிட்டு சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்துகொள்ள முடியும்.
சுவிட்சர்லாந்து மறுப்பு
ஆனாலும் 2018ஆம் ஆண்டுக்கு பிந்தைய விவரங்களை மட்டுமே அளிக்க முடியும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சகம் பதிலளித்துள்ளது. 2018ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் போடப்பட்ட பணத்தைப் பற்றிய விவரங்களை அளிக்க முடியாது என்றும் சுவிட்சர்லாந்து அரசு மறுத்துவிட்டது.
பதுக்கப்பட்ட கறுப்புப் பணம்
பிற வெளிநாடுகளிலும் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தின் மதிப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எச்டிஎஃப்சி வங்கியில் போடப்பட்ட கருப்புப் பணம் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டுடனான இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தப்படி 427 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சகம் தகவல்
அதோடு இந்த வழக்குகளில் தொடர்புடைய, கணக்கில் காட்டப்படாமல் வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட 8ஆயிரத்து 465 கோடி ரூபாய் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது என்றும், மொத்தமுள்ள வழக்குகளில் இதுவரையிலும் முடிந்த வழக்குகளில் அபராதமாக 1291 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது என்றும், மொத்தம் 162 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.