வாஷிங்டன்: உயர் கல்வித்தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் எச்-1பி விசா திட்டத்தை இப்போதைக்கு ரத்து செய்யும் எண்ணம் இல்லை. அதோடு இந்தியர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா எண்ணிக்கையை மேலும் குறைப்பதற்கான எந்த விதமான முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய தகவல் தொழில்நுட்ப அமைப்பான நாஸ்காம் விடுத்த மறைமுக எச்சரிக்கையைத் தொடர்ந்தே, தற்போது அமெரிக்கா தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டது. இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தகப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க சற்று இறங்கி வந்துள்ளது இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.
ஒரு ஆண்டில் சராசரியாக 85 ஆயிரம் எச்-1பி விசாக்கள் வழங்கப்படும் என்ற எந்தவிதமான கட்டுப்பாடோ நிபந்தனைகளோ விதிக்கப்படவில்லை. இருந்தாலும், இதில் கிடடத்தட்ட 70 சதவிகிதம் வரை இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை நிறவனங்களுக்கே வழங்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது என்றும் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தியர்களுக்கு பொற்காலம்
அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இருந்த வரையிலும், எச்-1பி விசா வழங்குவதில் எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை. அதிலும் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தன. அதோடு எச்-1பி விசாவில் அமெரிக்கா செல்பவர்கள் தங்கள் மனைவியையும் உடன் அழைத்துச்செல்வதற்காக எச்-4 விசா நடைமுறையில் புதிய விதிமுறையை புகுத்தினார். இதனால் சுமார் 1 லட்சம் பொறியாளர்கள் பயனடைந்து வந்தனர்.
குதிரைக்கொம்பான எச்-1பி விசா
இந்நிலையில், அமெரிக்கனிடமிருந்து வாங்கு, அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்து (Be American and Hire American) என்ற டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்கை முடிவு மற்றும் உத்தரவால் அங்குள்ள நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கே அதிக முன்னுரிமை தரவேண்டிய கட்டாயம் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. இதனால் இந்தியாவிலிருந்து எச்-1பி விசாவில் அமெரிக்கா செல்வது குதிரைக் கொம்பான விசயமானது.
உனக்கு இன்னா தகுதி இருக்கு
ஒருவேளை அமெரிக்கா சென்றுதான் அந்த தரவுகளை சேமிக்கும் வேலையை முடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட, அமெரிக்கக் குடியுரிமை சட்டவிதிகளில் ட்ரம்ப் அரசால் புதிதாக கொண்டுவரப்பட்ட தகுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள உயர்கல்வித் தகுதி இருந்தால் மட்டுமே ஒருவருக்கு எச்-1பி விசா அனுமதி தரப்படும் என்ற சூழ்நிலை உருவானது.
சம்பளம் 95 டாலர் வாங்குறியா
சரி, அதுமட்டும் தானா என்றால், அடுத்ததாக, நீ அமெரிக்காவுக்குள் காலடி எடுத்துவைக்க வேண்டுமென்றால், உன்னுடைய சம்பளம் அமெரிக்க டாலரின் மதிப்பில் ஆண்டு வருமானம் 95 ஆயிரம் டாலர்களாக இருக்கவேண்டும், இல்லாவிட்டால் உனக்கு அந்தத் தகுதியே கிடையாது, நீ அமெரிக்க மண்ணில் கால் வைப்பதற்கு அருகதையே கிடையாது என்று ட்ரம்ப் எக்காளமிட்டார்.
முன்னணி நிறுவனங்களுக்கு இழப்பு
ட்ரம்ப்பின் இந்த தொடர் அதிரடி நடவடிக்கையால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை எச்-1பி விசாவில் அமெரிக்காவுக்கு அனுப்புவது படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் எச்-1பி விசா விண்ணப்பங்களில் பெரும்பாலானவற்றை அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் ஏதாவது குறை சொல்லி நிராகரித்து வருகின்றன.
9100 வேலைகள் அமெரிக்கர்களுக்கே
கடந்த 2017-18ஆம் ஆண்டில், இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் விண்ணப்பித்திருந்த எச்-1பி விசாக்களில் 1896 விண்ணப்பங்களும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2122 விண்ணப்பங்களும் காக்னிசென்ட் நிறுவனத்தின் 32 சதவிகித விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. இதே போல் 2018-19ஆம் ஆண்டிலும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 50 சதவிகித விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இன்ஃபோசிஸ் நிறுவனம் இதற்கு மாற்றாக கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பு ஆண்டின் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 9100 அமெரிக்கர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கியுள்ளது.
இழப்பு உங்களுக்குத்தான்
அமெரிக்காவின் இந்த நிர்பந்தங்களால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது என்றும், அமெரிக்காவுக்கே அதிக இழப்பு இருக்கும் என்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப அமைப்பான நாஸ்காம் எச்சரித்திருந்தது. மேலும் அமெரிக்காவின் இந்தச் செயல் அந்நிறுவனங்களின் வளர்ச்சியையும் அடியோடு பாதிக்கும் என்றும் நாஸ்காம் எச்சரித்திருந்தது.
மாற்றமா இப்போதைக்கு நோ
நாஸ்காம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தற்போது அமெரிக்கா பல்டி அடிக்கத்தொடங்கியுள்ளது. எச்-1பி விசா நடைமுறைகளில் இப்போதைக்கு எந்தவிதமான மாற்றமும் செய்யப்போவதில்லை. அதே சமயத்தில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எச்-1பி விசா நடைமுறைகளில் எந்தவிதமான புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படப் போவதில்லை என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் சம வாய்ப்பு
எங்களின் புதிய கொள்கையான அமெரிக்கனாக இரு, அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்து என்ற தாரக மந்திரத்தின் படி வேலை வாய்ப்பில் முதலில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு, எச்-1பி விசா தகுதிப்பட்டியலின் மூலம் அமெரிக்கா வந்தவர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். எனவே, இந்த சூழ்நிலையில் எச்-1பி விசா நடைமுறையில் மாற்றமோ அல்லது இந்தியர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்தோ நாங்கள் எந்தவிதமான முடிவையும் எடுக்கவில்லை என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எங்களுக்கு இன்னும் தகவல் வரலை
முன்னதாக, எச்-1பி விசாவில் மாற்றம் செய்யப்போவதாக வந்த தகவலை அடுத்து, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவிக்கையில், எச்-1பி விசா விதிமுறைகளை தளர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், இதில் கட்டுப்பாடு விதிப்பது குறித்து எங்களுக்கு அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்று குறிப்பிட்டுருந்தார்.
அது வேற இது வேற
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரின் பேட்டி குறித்து பேசிய அமெரிக்க செய்தித் தொடர்பாளர், எச்-1பி விசா விதிமுறைகளை தளர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்பது வேறு. அதே வேளையில் இரு நாடுகளுக்கு இடையில் முக்கியத்துவம் வாய்ந்த தரவுகளை பரிமாற்றம் செய்வது குறித்தான பேச்சுவார்த்து நடத்துவது என்பதும் வேறு என்று குறிப்பிட்டார்.
இந்தியர்களுக்குத்தான் முன்னுரிமை
ஒரு ஆண்டில் சராசரியாக 85 ஆயிரம் எச்-1பி விசாக்கள் வழங்கப்படும் என்ற எந்தவிதமான கட்டுப்பாடோ நிபந்தனைகளோ விதிக்கப்படவில்லை. இருந்தாலும், இதில் கிடடத்தட்ட 70 சதவிகிதம் வரை இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை நிறவனங்களுக்கே வழங்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது என்றும் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.